இன்றும் அதே போல் ஷாப்பிங்க் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய மைத்ரீக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காதில் விழுந்தது.
“வடிவு! இன்னைக்கே அந்தப் பெண்னை பற்றி ஆதர்ஷ்ட்ட பேசிடுவோம். காலம் கடத்தாமல் இரண்டு மூன்று மாதத்தில் அவனோட கல்யாணத்தை முடிச்சிடுவோம்” என்றார் சந்திரசேகர்.
“அப்படியே செய்திடுவோம். பெண் அழகா லட்சணமா இருக்காள், நல்லா படிச்சிருக்காள்! இன்னும் என்ன வேணும்? வேற யாராவது அவளை கேட்கறதுக்கு நாம இடமே தரக்கூடாது”
மனதின் சந்தோஷத்தை முகத்தில் அவளின் சிரிப்பு கண்ணாடியாக பிரதிபலிக்க உள்ளே சென்றவள்
“நான் உடனே அண்ணியைப் பார்க்கனும் அம்மா!” என்றபடி அவரின் கழுத்தை கட்டிகொண்டாள் மைத்ரீ.
“நீ பார்க்காமலா?” என்று மெலிதாக புன்னகைத்தார் வடிவு.
“ஃபோட்டோ இருக்குமே! எங்கே கொடுங்க நான் பார்க்கிறேன்”
“நாங்களே அவளை கோயிலில் தான் பார்த்தோம். ரொம்பவே பிடித்திருந்தால அவங்க வீட்டு பெரியவங்களோட அங்கேயே பேசிட்டு வந்துட்டோம். ஃபோட்டோ எதுவும் அவங்க கையில் வச்சிருக்கலை”
“அப்படின்னா நான் எப்படி அண்ணியை பார்க்கறது?” என்பதற்குள் அவள் முகம் வாடியது.
“ஆதர்ஷோட போயி பாரு. இன்னைக்கு சாயங்காலம் 5 மணிக்கு அந்த பெண்ணும் ஆதர்ஷும் சந்திக்க ஏற்பாடு பண்ணியிருக்கோம். அவங்களுக்கு ஒருத்தரை ஒருத்தருக்கு பிடித்திருந்தால் தான் முன்னாடி பேச முடியும். நீயும் ஜெய்யும் ஆதர்ஷோட போங்க”
“தேங்க்ஸ்மா! இப்போவே ஜெய்யிட்ட சொல்றேன்” என்றவள் வடிவின் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு அங்கிருந்து சிட்டாகப் பறந்தாள்.
ஜெய்யின் ஃபோனுக்கு அழைத்தாள். மூன்று முறை முயற்சித்தும் லைன் கிடைக்கவில்லை. ‘இந்த கொரங்கு எந்த காட்டுக்கு போச்சுன்னு தெரியலையே! நம்பர் நாட் ரீசபல்னு சொல்லுதே!’ என்றெண்ணியவாரே மறுபடியும் அவன் எண்ணிற்கு அழைத்தாள். இப்போது ரிங்க் போகவும் ‘போனை எடுடா எரும!’ என்று இவள் நினைத்தது ஜெய்யிற்கு கேட்டதோ என்னவோ? சட்டென அவன் குரல் மறுமுனையில்
“சொல்லு மைதி”
“எந்த காட்டில் எத்தனை மரம் தாவின? உன்னோட நம்பர் ஏன் ரீச்சாகலை?”
“மைத்ரீ கொரங்கு இருக்கற அதே காட்டில் தான் நானும் இருக்கேன். இப்போ தான் அந்த கொரங்கிருக்கும் மரத்துக்கே…ச்சே…இல்லை…ரூமுக்கே வந்துட்டேன்” என்றபடி அந்த அறையின் கதவில் சாய்ந்தபடி புன்சிரிப்புடன் நின்றிருந்தான் ஜெய்.
அவனை பார்த்த மாத்திரத்தில் ஒரு துள்ளலுடன் அவனருகில் வந்தவள், “ஆதர்ஷ்க்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அண்ணியை பார்க்க இன்னைக்கு நாம ரெண்டு பேரும் அவனோட போகப் போறோம்”
அவளின் சந்தோஷம் அவனையும் தொற்றிகொள்ள “நிஜமாவா மைதி!” என்றவன் சட்டென முகம் மாற “இந்த பெண் பார்க்கும் படலத்துக்கு நான் வரமாட்டேன்”
“நீ கொரங்குங்கிறத நிரூபிச்சிட்டியே ஜெய்! அந்த ஃபார்மாலிடீஸ்க்கு இன்னும் ரெண்டு நாளாவது ஆகும்னு நினைக்கிறேன். இப்போதைக்கு ஒரு காஷுவல் மீட் தான். பெரியவங்க யாரும் வரமாட்டாங்க. அண்ணனும் அண்ணியும் வெளியே தனியா பார்த்து பேசிக்க தான் இந்த மீட்”
“அப்போ சரி தான்! ஆனால் மைதி அவங்க தனியா பேச தான் இந்த மீட்டுன்னு சொல்லிட்டு… ஆதர்ஷ் ஏன் நந்தியை கூட்டிட்டு போகனும்?”
“நந்தியா? யாருடா அது?” என்று புரியாமல் அவள் விழிக்க
“அந்த நந்திக்கு இன்னொரு பேரு இருக்கு. அதை நான் சொன்னால் நீ உடனே யாருன்னு கண்டுபிடிச்சிடுவேன்னு நினைக்கிறேன்” என்று மிக தீவிரமாக அவன் பேசவும்
‘வேற யாரும் வறர்தா அம்மா சொல்லலையே! யாராயிருக்கும் இந்த நந்தி? பொண்ணு வீட்டிலிருந்து யாராவதா இருக்குமோ? ஆனால் அவங்க யாரையும் எனக்கு தெரியாதே’ என்றெண்ணி குழம்பியவள்
“அது யாரு ஜெய்? அவங்களோட இன்னொரு பேர் என்ன?”
“நீ யோசிக்கறதை பார்த்தால் உனக்கு அந்த இன்னொரு பேரு கூட தெரியாது போல… சரி.. அது போகுது விடு மைதி! நாம ஈவ்னிங்க் போகலாம்”
“எனக்கு தெரியாதா ஜெய்?! இருந்தாலும் யாருன்னு மட்டும் எனக்கு சொல்லிடேன்” என்று கெஞ்சினாள்.