“என் காதலை என் சதி ஏத்துப்பாளா?... வாழ்வு முழுதும் அவளோடு சேர்ந்து வாழப்போற அந்த வாழ்க்கைக்கு அவளோட சம்மதம் கிடைக்குமா?... என் சரிபாதி என்னை சேர்ந்து முழுமையாக்குவாளா என்னை?...”
சொல்லிக்கொண்டே மெதுவாக ஒரு காலை மடக்கி ஒரு காலை ஊன்றி அவளின் முன் தன்னவளுக்கு சொந்தமான பொக்கிஷத்தையும் நீட்டி அவன் கேட்க, அவள் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப்போனாள்…
அவள் தனது கரங்களை தனக்கு சொந்தமான பொக்கிஷத்தில் வைத்து பதிக்க, அவன் எழுந்து கொண்டான்…
எழுந்து கொண்டவனை நொடி கூட தாமதிக்காது அணைத்துக்கொள்ள இருந்தவளை விட்டு சற்றே விலகினான் அவன்….
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்..
புருவம் உயர, பார்த்தவளைப் பார்த்து சிரித்தவன், தன் கரங்களில் இருப்பதை காட்டி,
“நேரம் வரட்டும்….” என சொல்ல,
அவனைப் பார்த்து போலியாக முறைத்தவள்,
“அதெல்லாம் வரும்போது வரட்டும்… அதுவரைக்கும் என் காதலை நான் காட்டாம இருக்க முடியாது…”
பட்டென்று சொல்லிவிட்டு அவர்களுக்குள் காற்றுக்கூட புகாதபடி அவனை அவள் அணைத்துக்கொள்ள, அவளை சுற்றி தன் கரங்களை படரவிட்டுக்கொள்ளவில்லை ஜெய்….
“என் சரிபாதி இன்னும் சம்மதம் சொல்லலையே???…..”
அவன் மெல்ல கேட்க,
அவனை அணைத்துக்கொண்டிருந்தவள், அவன் முதுகை சுற்றி, பரவியிருந்த தன் கரங்களை எடுத்துக்கொள்ளாமலேயே, சற்றே முகம் நிமிர்த்தி அவனைப் பார்த்துவிட்டு,
“அதைத் தான் சொல்லிட்டிருக்குறேன்…” என்றபடி அவள் லேசாக புன்னகைக்க, அவன் ஒரு நொடி யோசித்தான்…
பின் அதன் அர்த்தம் உணர்ந்து அவன் அவளைப் பார்க்கையிலே, அவள் அவனது நெஞ்சில் புதைந்து கொண்டாள் நாணத்துடன்…
“இப்போ புரிஞ்சிடுச்சா?...”
அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டே அவள் கேட்க, அவன் நெளிந்தான்…
“ஹ்ம்ம்…. புரிஞ்சிடுச்சு…..”
அவன் சிரித்துக்கொண்டே சொன்ன பதிலில் அவளும் சிரிக்க, இருவரும் தங்களை மறந்து புன்னகைத்த வேளை,
“சதி………………………………………………………………” என்ற அறைகூவல் விழுந்தது பயங்கரமாய், இருவரின் செவிகளிலும்….
சட்டென அதிர்ந்தவளாய் அவள் அவனைவிட்டு விலக, அவனும் யாரென்று பார்க்க திரும்ப, அங்கே விழிகளில் தெறிக்கும் கோப அக்னியுடன் நின்றிருந்தார் தட்சேஷ்வர்….
அவள் பயத்தில் ஜெய்யின் பின் தஞ்சம் கொள்ள,
“சதி…………..” என அவர் கத்திய சத்தம் கேட்டு காடே அதிர்ந்தது…
அவர் அழைத்தும் அவள் அவரருகே செல்லாமல் அவனின் பின்னேயே நிற்க,
விறுவிறுவென்று வந்தவர், மகளின் கைப்பிடித்து ஓரடி எடுத்து வைக்க, அவரின் முன்னே வந்து நின்றான் ஜெய் விழியெங்கும் காட்சியளிக்கும் தனலுடன்…
தன் முன்னே வந்து நின்றவனை, ஓரு ஆச்சரியப்பார்வை பார்த்தவர்,
“ஓ… அந்த அளவு தைரியம் வந்துட்டா உனக்கு?... என்னையே எதிர்க்குறீயா?... வழியை விட்டு ஒதுங்கி போ… அதுதான் உனக்கு நல்லது…”
“ஒதுங்கி போயிடுறேன்… அதுக்கு முன்னாடி எனக்கு சொந்தமானவளை விட்டுட்டு போங்க… நான் வழியை விடுறேன்…”
அவன் குரலில் ஒரு கட்டளை இருக்க, அவள் புருவம் உயர்த்தினார்…
“என்னடா குரல் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு… என்னையே மிரட்ட நினைக்குறீயா?...”
“இல்லவே இல்லை… எனக்கு சொந்தமானவளை எங்கிட்டயே தந்துடுங்கன்னு உரிமையா கேட்குறேன்…”
அவன் அழுத்தமாக சொல்ல, கோபத்தின் உச்சிக்கு சென்றார் தட்சேஷ்வர்…
“யாருடா உனக்கு சொந்தமானவ?... அவ என் பொண்ணு… இந்த தட்சேஷ்வரோட பொண்ணு…”
“அதை நான் மறுக்கலை… ஆனா இப்போ அவ என் உயிர்….”
“உயிரா?... என் மகடா அவ!!!… என் மக!!!…. என்னோட சகலமும் அவ மட்டும் தான்!!!!… கண்டவனுக்கு எல்லாம் என் பொண்ணு உயிரா மாற நான் அனுமதிக்க மாட்டேன்…”
அவர் அவனை ஏளனப்படுத்தி சொல்ல, அவரின் பிடிக்குள் இருந்த தனது கரத்தினை வலுக்கட்டாயமாக விடுவித்துக்கொண்ட சதி, அவரின் முன் வந்து நின்றாள்…
“அப்பா… உங்க பொண்ணை அவருக்கு கட்டிக்கொடுக்க மாட்டேன்னு சொல்லுங்க… அது கூட உங்க பிடிவாதம்னு நான் எடுத்துப்பேன்… ஆனா அவரை என் கண் முன்னாடியே அலட்சியமோ, ஏளனமோ செய்யுறதைப் பார்த்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்…”
கண்களை உருட்டி, நெஞ்சம் துடிக்க அவள் சொல்ல, ஒரு கணம் அதிர்ந்தே போனார் தட்சேஷ்வர், தன் மகள் சொன்ன வார்த்தைகள் கேட்டு….