12. மார்பில் ஊறும் உயிரே!!! - மது
உடைந்த அகத்தின் முழுமை நீ!!!
“ஜூஸ் காலி சந்தோஷ். டேய் சஸ்பென்ஸ் வைக்காத..சீக்கிரம் சொல்லு” அபூர்வா சந்தோஷை அவசரப் படுத்தினாள்.
அவளிடம் எப்படி விஷயத்தை சொல்ல வேண்டும் என்று பல முறை பார்த்த ஒத்திகை எல்லாம் அவள் அவசரப் படுத்தவும் காற்றோடு பறந்து போனது.
“அப்பாக்கு கொஞ்சம் ஹெல்த் ப்ராப்ளம்ஸ் இருக்கு அபி. இந்த வருஷம் முடியறதுக்குள்ள எனக்கு கல்யாணம் பண்ணனும்ன்னு எங்க அம்மா அப்பா பிடிவாதமா இருக்காங்க. அதான் நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்க” திக்கித் தடுமாறி உளறிக் கொட்டினான் சந்தோஷ்.
“என்ன சொல்றான் இவன். இவன் கல்யாணத்துக்கும் என் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்”
மனதில் நினைத்தவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள். சித்தார்த்தோ அமைதியாக கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்..
அவள் அவ்வாறு விழித்துக் கொண்டு மெளனமாக இருந்ததில் கொஞ்சம் பதற்றம் அடைந்த சந்தோஷ் வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்தான்.
“எப்படியும் நீ இருக்கும் போது இஷாவுக்கு கல்யாணம் பண்றது பாசிபிள் இல்லைல”
“இஷாவா” இப்போதும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று அபூர்வாவிற்கு விளங்கவில்லை.
“நான் உன் தங்கை இஷாவ லவ் பண்றேன். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்” போட்டு உடைத்தே விட்டான்.
இதை கேட்டதும் அதிர்ந்தாள் அபூர்வா.
“இஷான்னு நிலா பாப்பாவை தான் சொன்னான்னா” ஜிவுஜிவு என்று ஜ்வாலை கொளுந்து விட்டு எரிந்தது அவள் முகத்தில்.
நிலாக்கு அவள் பிறந்த நட்சத்திரப் படி “இ” என்ற எழுத்தில் பெயர் வைக்க வேண்டும் என்று லலிதாம்பிகை ஒரு முறை சொல்லவும் பள்ளியில் சேர்க்கும் போது இஷாந்தினி என்று பெயர் கொடுத்தார்கள்.
நிலா வகுப்பில் இஷா குப்தா என்று இன்னொரு மாணவி இருந்ததால் பள்ளியில் அனைவரும் அவளை ஷாந்தினி என்று அழைத்தனர்.
அதனால் சந்தோஷ் முதலில் இஷா எனவும் அபூர்வா குழப்பம் அடைந்தாள். ஆனால் அவன் பிறகு உளறி கொட்டியதைக் கேட்டு காளி அவதாரம் எடுத்தாள்.
“சந்தோஷ்ஷ்ஷ்ஷ்.....” அவள் உச்சஸ்தாயியில் கூச்சலிட சந்தோஷ் நடுநடுங்கிப் போனான்.
சித்தார்த் அபூர்வாவை சமாதானம் செய்ய விழைந்தான்.
“அபி கொஞ்சம் பொறுமையா இருடா. கோபப்படாதே”
அவ்வளவு தான். இப்போது அவள் கோபம் சித்தார்த் பக்கம் திரும்பியது.
“நிலா குழந்தை. அவளை லவ் பண்றேன் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்றான். இதுல நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணி ரூட் கிளியர் பண்ணி குடுக்ககணுமாம் இவனுக்கு”
“என்ன தைரியம் இருந்தா என்கிட்டேயே வந்து இத நீ சொல்லுவ” கோபமாய் சந்தோஷிடம் ஆரம்பித்து “இதுக்கு நீயும் உடந்தையா சித்து” வெடித்தாள் அபூர்வா.
அபூர்வாவை சாமதானம் செய்ய சித்தார்த் சென்று விட்டதும் தலையில் கையை வைத்துக் கொண்டு செய்வதறியாது சந்தோஷ் அமர்ந்திருக்கவும் கிருஷ்ணமூர்த்தி சுசீலா இருவரும் கவலையுற்றனர்.
“நீ நிலாவை விரும்புறேன்னு மட்டும் சொல்லியிருந்தா இவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டா. சீக்கிரம் கல்யாணம் பண்ணுன்னு அவகிட்ட சொல்லி வச்சுட்டியே சந்தோஷ்” சுசீலா அபூர்வா மனம் துன்பப்பட்டதை எண்ணி வேதனை கொண்டார்.
“நேத்து பார்ட்டில அவ கிட்ட ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தேன் ஆன்டி. அவளும் சித்தும் கல்யாணம் பண்ணிக்க போறாங்கன்னு நினச்சேன். ஆனா அவ சொன்னதை கேட்டு குழப்பம் ஆகிருச்சு. அதான் சித் கிட்ட கூட டிஸ்கஸ் பண்ணாம அபிகிட்டேயே நேரா கேட்டேன். இவ இருக்கும் போது இஷாவுக்கு எப்படி கல்யாணம் பண்ண அத்தை ஒகே சொல்வாங்க. கொஞ்சம் நிதானமா கேட்டிருக்கலாம். பதட்டத்துல தடுமாறிட்டேன்”
சந்தோஷ் குரல் கிணற்றுக்குள் இருந்து வந்ததை போல பலவீனமாக ஒலித்தது. சில பல நிமிடங்கள் யுகங்களாக கழிய அங்கு பலத்த அமைதி நிலவியது.
“ஆன்டி. அபி ரொம்ப கோபமா இருக்காளோ. அவளை சமாதனாம் செய்ய போன சித்தும் காணோமே. எனக்கு பயமா இருக்கு ஆன்டி”
“இப்படி ஒரு பயந்தாங்கொள்ளிய போய் நம்ம வீட்டு மாப்பிள்ளை ஆக்குறதா அத்தை” கேலி செய்தபடியே சித்தார்த்துடன் வந்த அபூர்வா தெளிந்திருந்தாள்.
அவள் முகத்தைப் பார்க்கவே தயங்கி நின்றான் சந்தோஷ்.
“டேய் போதும் சீன் போட்டது. ஏதோ எங்க பாப்பாவும் உன் மேல விருப்பமா இருக்கான்னு தெரிஞ்சு உன்ன சும்மா விடறேன்” தான் சமாதானம் அடைந்ததற்கு விளக்கம் சொன்னாள் அபூர்வா.
“அபி வந்து சாரி....வந்து தாங்க்ஸ்” சந்தோஷ் சற்றே நிம்மதியுடன் மன்னிப்பு கேட்டான்.
“இங்க பாரு உனக்கும் எங்க தங்கச்சிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொல்லு. நாங்க செய்து வைக்கிறோம். அதோட நிறுத்திக்க. எனக்கு கல்யாணப் பந்தல் கட்டி பந்தி போடுற வேலை எல்லாம் நீ பார்க்க தேவை இல்லை”