மின்னலில் ஒளியில், பளீரென்று அனைவரின் கண்களுக்கும் அது விருந்தாக காட்சியளிக்க, தட்சேஷ்வருக்கோ, அது சொல்லிடாத பல கதைகளை தெரியப்படுத்த முனைந்தது அந்த தருணமே…
அனைவரின் பார்வையும் தன் கரங்களில் இருக்கும் அந்த மங்கல நாணின் மீதே இருப்பதை உணர்ந்த ஜெய், பார்வையை அதில் பதித்த போது, சதி தன்னையும் அறியாமல் ஜெய்யை நெருங்கினாள்….
அந்த திருமாங்கல்யம் அவர்களுக்கு சில உண்மைகளை உணர்த்த முயல, இருவருமே ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக்கொண்டனர் விரிந்த பார்வையுடன்….
“அவருக்காகப் பிறந்தவள் நான்… அவர் என் பதி… என்னவரை எந்த சூழ்நிலையிலும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்… இது இதுநாள்வரை என்னவருக்காக காத்துக்கொண்டிருக்கும் என் காதலின் மீது ஆணை…”
சதி கோபத்தோடும் ஆற்றாமையோடும் அவனை விட்டு கொடுக்க முடியாது, தன் குடும்பத்தினரிடம் கூற, அதை கல்லென தனக்குள் உள்வாங்கி கொண்டு சிலையாக தட்சேஷ்வர் நிற்கும் காட்சி, சதி, ஜெய், பிரம்மரிஷி மற்றும் தட்சேஷ்வர் ஆகிய நால்வரின் கண்களுக்கும் தெரிய, பிரம்மரிஷியை தவிர மற்ற மூவரும் திகைப்பில் ஆழ்ந்து போயினர் நிஜமாகவே…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா Vயின் "உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!" - காதல் கலந்த குடும்பத் தொடர்
படிக்க தவறாதீர்கள்..
இன்று ஜெய் சொன்ன வார்த்தைகளுக்குப் பதிலாய், சதி சொல்வது போல் கண் முன்னே மாயம் போல கண்டால் யார் தான் திகைப்பில் ஆழ்ந்து போக மாட்டார்கள்?...
அதிர்வுகள் மட்டுமே ஜெய்யினுள்ளும், சதியினுள்ளும் இதுவரை தோன்றி மறைந்தது… எனினும் அந்த அதிர்வுகளுக்கான காரணம் தங்களுக்கு சட்டென தோன்றி மறையும் மின்னலைப் போல கண்களுக்குள் அவசரம் அவசரமாக பளீரென்று ஒளிவீசி செல்ல, அதை அவர்கள் இருவரும் உணர்ந்து, தாங்கள் யார் என்று எண்ணுவதற்குள், அவர்களின் நிகழ்காலம் அவர்களை இழுத்து வந்து விடுகிறது இடிமுழக்கங்களுடன் உடனடியாகவே…
மின்னல் நொடிப்பொழுதில் தாங்கள் யார் என்று அறிய முற்படவிடாமல் தடுத்து நிறுத்திய காலம், இப்போது அதை அவர்களுக்கு தெரியப்படுத்த மும்முரமாக இறங்கிய வேளை,
தட்சேஷ்வரோடு வந்திருந்த மற்றவர்கள் அனைவரும் அவரைத் தேடி அங்கு வர, அங்கு நிலவிய அந்த அமைதியான சூழ்நிலை மனதில் பயத்தினை விதைக்க, மேலாடை எதுவுமின்றி கையில் தாலியுடன் மகன் நிற்கும் கோலம் சோமநாதனின் பார்வையில் பட,
தாயின் சிறகில் அடைக்கலம் தேடும் பறவை போல் ஜெய்யை ஒட்டி நின்று கொண்டிருந்த சதி பிரசுதியின் பார்வையில் பட்டாள்…
“ஜெய்…. என்னாச்சுப்பா?... ஏன் இப்படி நிக்குற?...”
“………….”
“பைரவ் எங்கப்பா?... அவன் என்ன ஆனான்?....”
சோமநாதன் கேட்ட கேள்விக்கு சட்டென அந்நேரம் இஷான் வந்து பதில் சொல்ல,
“மை காட்….” என அதிர்ந்தே போனார் அவர்…
மகனுடைய நிலை அவரது கவனத்தில் பட,
“ஜெய்… இந்த தாலி யாரோடதுப்பா?....” எனக் கேட்டதும்,
சட்டென ஜெய்யின் பார்வை தன்னருகில் நின்று கொண்டிருந்த சதியின் மேல் விழுந்தது கலங்கியபடி…
அவளின் விழிகளிலும் நீர் உதயமாக, உதடுகளை அழுந்த கடித்து தன் உணர்வுகளை அடக்கப் போராடினாள் அவள்….
அதைக் கண்டவனுக்கோ மனம் வலிக்க ஆரம்பிக்க, தன்னையும் அறியாமல் அவன் கரங்கள் உயர்ந்தது அவளது விழி நீரைத் துடைக்க….
சட்டென தட்சேஷ்வர், “போகலாம்…..” எனக் கத்த, உயர்ந்த அவனது கரம் அப்படியே நின்ற வேளை, மகளின் கைப்பிடித்து அழைத்த தட்சேஷ்வர்,
“வீட்டுக்குப் போனதும் மத்ததை பேசிக்கலாம்… இப்போ என்னோட வருவீயா மாட்டியா சதி?... உன் அப்பா கூப்பிடுறேன்… வருவீயா மாட்டீயா?...”
நெஞ்சம் முழுக்க பாசத்தை நிரப்பி, வார்த்தைகளில் கெஞ்சல் வரவழைத்து, கண்களில் தனது ஏக்கத்தினை அவர் பிரதிபலிக்க,
மெல்ல உடைந்தே போனாள் சதி…
அவளின் வாடிய முகம் கண்டவனுக்கோ, மனம் ஒரு நிலையில் இல்லாது போக,
“எல்லாரும் கிளம்பலாம்….” என்ற ஜெய், அவளைப் பார்த்து சற்றே விழி மூடி தலையசைக்க, அவள் உள்ளம் சரி என ஏற்றுக்கொண்ட நொடியே, அவள் கால்கள் நகர முயற்சிக்க,
அனைவருக்கும் முன் அங்கிருந்து காரை நோக்கிச் சென்றான் ஜெய் விரைவாக… அவனைத் தொடர்ந்து இஷான் அவனின் பின்னேயே வேகமாக செல்ல,
தட்சேஷ்வர் மகளை அழைத்துக்கொண்டு ஓரடி எடுத்து வைக்க, அவளும் பின் தொடர்ந்தாள் ஜெய் எடுத்து வைத்து சென்ற பாத சுவட்டின் அருகிலேயே…
புரியாமல் நின்றிருந்த பெரியவர்களை சமாதானம் செய்து, தன்னுடன் இப்போது வருமாறு தைஜூ கேட்டுக்கொள்ள, அவர்களும் சம்மதித்தனர்…
அருண், தான் இப்படியே கிளம்பிக்கொள்வதாய் கூற, ஜெய் அவனை தன்னுடன் சென்னைக்கு அழைத்தான்… தன் நண்பனை வர சொல்லியிருப்பதாகவும், அவனுடன் வந்துவிடுவதாகவும் அருண் சொல்லி, ஜெய்யை வற்புறுத்தி போக சொல்ல, ஜெய் சம்மதிக்கவில்லை…
பின்னர், தட்சேஷ்வர், பிரம்மரிஷி, சதி, சிதம்பரம், காதம்பரி, ஆகிய ஐவரும் ஒரு காரிலும், தைஜூ, ஜெய், இஷான், பிரசுதி, சோமநாதன், அருண் ஆகிய ஆறு பேரும் ஒரு காரிலும் ஏறிக்கொள்ள கார் சென்னையை நோக்கி பயணித்தது….