அவரின் வெற்றுடம்பு, கண்டு நான் நாணி நின்றதின் அர்த்தம் யாது?... என் பதியை எவ்வாறு தவறாக பேசலாம் என்று என் தந்தையையே ஒரு நொடியில் எதிர்க்க துணிந்தேனே?.. அது எதனால்?...
அவரை ஓடி வந்து அணைத்துக்கொண்ட வேளை, எனக்குள் பரவியதே அதன் பெயர் என்ன?... அவரும் என்னை தன்னுடன் சேர்த்துக்கொண்ட வேளை, எனக்குள் நான் உணர்ந்தது என்ன?... பல ஆண்டுகளாய் அந்த ஒற்றை அணைப்பிற்காய் காத்திருந்த உணர்வு எனக்குள் நுழைந்து எதனால்?...
அவர் கைகளில் வைத்திருந்த அந்த பொக்கிஷம்?... என்றெண்ணமிட்ட வேளையே, அவளையும் அறியாது அவள் கைகள் தன் கழுத்தினை தடவிப் பார்க்க, சற்றே அதிர்ந்து போனாள் அவள்…
அவள் அங்கே அதிர்ந்த தருணம், இங்கே ஜெய்யும் அப்படி ஓர் நிலையில் தான் இருந்தான்…
சதிம்ருதினி…. என்ற பெயர் அவளுடையது என அறிந்திருந்த போதும், அவளுடன் வாதிடும்போது பெரும்பாலும் அவளது பெயரை உச்சரிக்க மறுத்தான்… அதிலும் சதி என்று எப்பொழுதாவது அவளை அழைப்பவன், ம்ருதினி என தன் அறைக்குள் தவிர வேறெங்கும் அழைத்ததில்லை…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
அவளின் நினைவு அவனை வாட்டிடும் போதெல்லாம் தன் பொக்கிஷத்தை நெஞ்சோடு சேர்த்து வைத்துக்கொள்பவன், “சதிம்ம்ம்ம்ம்ருதினி…………….” என உரக்க கத்துவான்…. அவள் பெயரை உச்சரித்து முடித்த பிறகே அவன் மனம் அமைதி அடைவதும் அவனுக்கு வியப்பே…
“ம்ருதினி….” என அவன் வாய்விட்டு சொல்லும்போதெல்லாம் அவனுள் இனம் புரியாத ஓர் உணர்வு பரவிடும்… அது ஏனென்று அவனுக்கு தெரிந்ததே இல்லை சற்று முன்பு வரை…
ருத்ரன் என அவள் அழைத்ததும், நான் உன் ருத்ரன் மட்டும் தான் என்று சொன்னவன், அவளை ம்ருதினி என அழைக்கையில், அவன் கொண்ட திருப்தி இருக்கே, அதை வார்த்தைகள் கொண்டு அவனால் விவரிக்க முடியாமல் போவதையும் அவனால் ஏனென்று புரிந்து கொள்ள முடியவில்லை…
அவளைக்காணாது அவன் கொண்ட தேடல், அவளுக்கு எதுவும் நேர்ந்துவிட்டதோ என்றெண்ணி அவன் கொண்ட கோபம், ஆத்திரம், அனைத்தும் அவனின் காதலை எடுத்துரைக்க, நடனமே தெரிந்திராதவன் ஆடிய ருத்ர தாண்டவம் மட்டும் விடை தெரியா மர்மமாகவே இருந்தது அவனுக்கு... எப்படி?. அது சாத்தியமானது?...
தட்சேஷ்வரைக் கண்டால் விலகி போகுபவன், இன்று அவரின் கைகளைப் பிடித்து எதிர்க்க துணிந்த மர்மமும் அவனுக்கு விளங்கவில்லை…
அவரிடம் அவன் எழுப்பிய உரிமைக்குரலும் அவனுக்கு திகைப்பை உண்டுபண்ணியது..
பெற்ற தகப்பன் வந்து தன் மகளை அழைத்துச் செல்ல முற்படுகையில், தான் கோபமான முன் சென்று தடுத்ததும் ஏனோ?... அவரின் மகள் சதி என்ற எண்ணம் சிந்தனையில் கலந்திருக்கும் வேளை, மனதில் அவன் உன்னவள், அவளைப் போக விடாதே இனியும்…. என மனம் கூச்சலிட்டதையும் அவனால் எளிதாக ஒதுக்க முடியவில்லை….
அவள் தன்னவள்… என்ற எண்ணமே அவன் மனதினுள் பேரலையாய் எழ, அவன் அதில் இசைந்து மூழ்க ஆரம்பித்திருந்தான் கொஞ்சம் கொஞ்சமாய்…
அவளின் எண்ண அலைகளில் அவன் நீந்த ஆரம்பித்திருந்த வேளை, பிரம்மரிஷியின் இதழ்களில் புன்னகை உதயமானது….
நீண்ட நேர பயணத்திற்குப் பிறகு, அனைவரும் சென்னை வந்து சேர, அருண் ஜெய்யிடம் விடைபெற்றுக்கொண்டு தன் வீட்டிற்கு திரும்ப,
அவனை அனுப்பிவிட்டுவிட்டு, ஜெய் தட்சேஷ்வரின் வீட்டுக்குள் நுழைய,
“அங்கேயே நில்லு…” என அவனை வாசலிலேயே தடுத்து நிறுத்தினார் தட்சேஷ்வர்…
“என்னங்க… என்ன செய்யுறீங்க…”
பிரசுதி ஆதங்கத்துடன் கணவரிடம் கோபமாக கேட்க,
“என்ன செய்யுறேன்னு எனக்குத் தெரியும்… நீ பேசாம ஒதுங்கி போ….”
“அப்பா… நீங்க செய்யுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல…”
இஷான் முதன் முதலாக தகப்பனை எதிர்த்து குரல் கொடுக்க, அவனை ஒரு புருவ முடிச்சோடு பார்த்தவர்,
“ஓ… அந்த அளவுக்கு வந்துட்டீயா நீ?... எங்கிருந்துடா வந்துச்சு இந்த தைரியம் பெத்த தகப்பன்கிட்டயே குரல் உயர்த்துற தைரியம்?....”
அவரின் கேள்விக்கு இஷான் பதில் சொல்லும் முன்பே,
“எந்த தைரியத்துல நீ என் முன்னாடி இப்படி குரல் உயர்த்தி, அநாகரீகமா நடந்தக்குற தட்சா?...” என பிரம்மரிஷி கோபத்தோடு கேட்க, ஆடிப்போனார் தட்சேஷ்வர்…
அவரின் குரலில் இப்படி ஒரு கோபம் இதுவரை கண்டதில்லை தட்சேஷ்வர்…
“சிவா… நீ உள்ளவா….”
பிரம்மரிஷி ஜெய்யினை உள்ளே அழைக்க, அவன் அங்கேயே நின்றான் தயங்கி…
“உள்ளவா சிவா….”
பிரம்மரிஷியின் குரல் அழுத்தத்தோடு மீண்டும் ஒலிக்க, தட்சேஷ்வரை தவிர, அனைவரும் அவனை வா என்றழைக்க, அவன் உள்ளே வந்தான்….
‘’நீங்க அவனை வீட்டுக்குள்ள வேணா விடலாம்… ஆனா உங்க எல்லாரோட எண்ணமும் ஒருநாளும் நிறைவேறாது…”
தட்சேஷ்வர் ஆத்திரத்துடன் கூற,
“யாருக்குடா வேணும் உன் அனுமதி?... அந்த எம்பெருமானோட ஆசிப்படி எல்லாம் நிறைவேறப்போகுதுடா… அதுவே எங்களுக்கு போதும்…” என பிரம்மரிஷி சொன்னதும்,
“நிறுத்துங்கப்பா…..”
அதிர்ந்து கத்தினார் தட்சேஷ்வர்…
அனைவரும் அவரின் குரலில் சற்றே அதிர்ந்து நிற்க, பிரம்மரிஷியும், ஜெய்யும் மட்டும் அப்படியே நின்றனர் அமைதியாக தேக்கி வைத்த கோபத்துடன்…
“அந்த ஈசன் புராணத்தை விடுங்கப்பா… முடிவா சொல்லுறேன் கேட்டுக்கோங்க… என் பொண்ணை நான் இவனுக்கு கட்டித்தர மாட்டேன்…”
உறுதியுடன் தட்சேஷ்வர் கூற, திகைப்பு அனைவரின் முகத்திலும் அப்பட்டமாய் தெரிய,
“சிவாக்கு சொந்தமானவளை அவங்கிட்ட கொடுக்கமாட்டேன்னு சொல்லுறதுக்கு உனக்கு எந்த உரிமையும் இல்லை தட்சா… அத முதலில் தெரிந்துகொள்…”
“யாருக்கு யார் சொந்தம்?... அவ என் பொண்ணு… அது மட்டுமே சத்தியம்… கண்ட அநாதைக்கெல்லாம் என் பொண்ணை உரிமை கொண்டாடுற துணிவு எப்படி வந்துச்சு?...”
“அப்பா………………………………” என சதி கத்திய அந்த வேளை,
“தட்சா……………….” என உரக்க அழைத்தார் பிரம்மரிஷி….
பிரம்மரிஷியின் சத்தம் தட்சேஷ்வருக்கு பயத்தை வரவழைக்க,
கண்களில் கனலை சுமந்து கொண்டு மகனை நெருங்கிய பிரம்மரிஷி,
“யார் அநாதை?... சிவாவா?... அவன் யாரென்று உனக்கு தெரியுமா?... நீ யாரென்று உனக்கு தெரியுமா?... உன் மகள் சதியாகப் பிறந்தவள் அவனுக்கு என்ன உறவென்று தெரியுமா? தட்சா?... சொல்லு… தெரியுமா?...”
அனல் தெறிக்க அவர் கேட்க, அப்படியே வாயடைத்துப் போனார் தட்சேஷ்வர்…
“உன்மகளாகப் பிறந்த சதிம்ருதினி சிவாவின் தர்மபத்தினி…. இறைவன் சாட்சியாக, பல தேவர்களின் சாட்சியாக, பஞ்ச பூதங்களின் சாட்சியாக, கோடிக்கணக்கான மக்கள் சாட்சியாக, என் சாட்சியாக, உன் கண் முன்னாடியே, சிவா தன்னவளுக்கு கட்டிய மங்கல நாண் தான் இது….”
சொல்லிக்கொண்டே ஜெய்யிடமிருந்து வாங்கிய திருமாங்கல்யத்தை தூக்கி காண்பித்தார் பிரம்மரிஷி…
அனைவரும் சிலையாக நின்ற வேளையே,
“அவனை யாரென்று நினைத்தாய் பிரஜாபதி?.....” என பிரம்மரிஷி சொல்லிவிட்டு தட்சேஷ்வரைப் பார்க்க, அவரின் விழிகள் விரிந்தது…
‘என்ன பார்க்கிறாய்?... நீ யாரென்று நினைவு வருகிறதா?... தட்ச பிரஜாபதி?....”
கேட்டுவிட்டு தட்சேஷ்வரைப் பார்க்கையில், அவரின் விழிகளில், சில நிகழ்வுகள் காட்சியாக தெரிய காத்திருந்தது…
தட்ச பிரஜாபதி… என்ற பெயர், ஜெய்யினுள் எதனையோ உணர்த்த முயன்ற நேரம்,
“சிவசதியை அறிய முற்பட்டாயா நீ?...”
என பிரம்மரிஷி கேட்டு முடிக்க, சட்டென ஏற்பட்ட ஓர் அதிர்வில் பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தார் தட்சேஷ்வர்…
தட்சேஷ்வரோடு சேர்த்து நாமும், அவர்களின் உறவு முடிச்சுக்களை தெரிந்து கொள்ள பின்னோக்கி பயணிக்க தயாராவாமோ?...
மீண்டும் அடுத்த வாரம், சிவ-சதியின் முன் ஜென்ம மருவக்காதல் கொண்டேனில் சந்திக்கலாம்… நன்றி….
{kunena_discuss:1001}