“எனக்கு கொஞ்சம் டைம் வேணும் மாயா.. எல்லாத்தையும் சரி பண்ணிட்டு நானே உங்களை தேடி வருவேன்..” என்றான் சகிதீபன்.
இதுதான் காதலா ? சகிதீபன் தனது காதலைத்தான் இப்படி மறைமுகமாக சொல்கின்றானா? கேள்வி கேட்கவில்லை மைத்ரேயி.. பதில் சொல்லவில்லை சகிதீபன். ஆனால் இருவருமே அக்கணத்தில் மனம் மாற்றிக் கொண்டனர். எவ்வளவு காலம் கடந்தாலும், உனக்கென நான் இருக்கிறேன் என்று சொல்லியிருந்தான் சகி. மைத்ரேயியும், தனக்கென உரிய இடத்தில் வீற்றிருப்பது போல நம்பிக்கை கொண்டாள். அங்கு காதல் எனும் விதை சத்தமே இல்லாமல் உடைந்து வளர தொடங்கியது.
அலுவலகத்தில் தனக்கென ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி நடைப்போட்டாள் சதீரஞ்சனி. எத்தனை முறை எச்சரித்தாலும், கௌதமின் அறையை கடக்கும்போது, அவள் விழிகள் அவனைத் தேடத் தான் செய்தன.
மறைமுகமாக அவனுக்கு அதிர்ச்சி கொடுத்து தன் மனதையும் கோடிட்டு காட்டியவள் கௌதமின் பதிலுக்காக ஒவ்வொரு நாளுமே காத்திருக்க தொடங்கினாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்..
அப்படியே அவள் சொன்னது புரியாமல் போனாலும், அவன் தன் திருமணத்தைப் பற்றி கேள்வியாவது கேட்பான் என்று எதிர்ப்பார்த்தாள் ரஞ்சனி. ஆனால் கௌதமோ, அவள் தன்னிடம் எதை பற்றியுமே பேசவில்லையே என்று சொல்பவன் போலவே நடந்துகொண்டான்.
இதோ இப்போதும் அவள் தன்னை பார்ப்பதை அறிந்ததும் வலது கரத்தை உயர்த்தி, “இங்கே வா” என்று சமிக்ஞை செய்தான் அவன். பாராங்கல்லாய் கனக்கும் மனதை சுமந்து கொண்டு அவன் முன் நின்றாள் சதீரஞ்சனி.
“ மச்சி குட் மார்னிங் டா!” பெரிதாய் புன்னகைத்தான் கௌதம்.
“குட் மார்னிங் டா.. சாப்பிட்டியா?”
“ஓ..யெஸ்… உனக்கும் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன்!” என்றான் உற்சாகமாய்.
“இதெல்லாம் மட்டும் சரியாக செய்வானே!”என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.
“என்ன விஷயம் மச்சி ?”
“ஆ..ஆங்? ஒன்னுமில்ல டா ..சும்மா”
“என்ன சும்மா? ஒரு வாரம் லீவ்னு எனக்கே மெயில் அனுப்பி இருக்கியே அதை பத்தி தான் கேட்குறேன் மச்சி!” என்றான் கௌதம்.
“ஓஹோ நான் முணுமுணுத்தது இவனுக்கு கேட்கலையாம்!” என்று மனதிற்குள் சொன்னவள்,
“கல்யாண விஷயமாக மாமா ஊருக்கு கூப்பிடுறாங்க” என்றாள் சதீரஞ்சனி. முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் கூட கௌதம் பதில் ஏதும் பேசாமல் மௌனமாய் இருந்தான்.ரஞ்சனியின் காதல் மனது அதை சாதகமாகவே எடுத்துக் கொண்டது. உடனே உற்சாகமான குரலில்,
“சரியா தெரியல மச்சி.. ஜாதகம் பார்ப்பாங்க.. ஒருவேளை நான் கல்யாணமே முடிச்சிட்டு கூட வரவேண்டியதாக இருக்கும்” என்றாள் .அதை சொல்லும்போதே அவளது குரல் நாவிலிருந்து நழுவி பிசறியது.
“இன்னொரு ஆடவனுக்கு நான் மனைவியாக போகிறேன் என்று விளையாட்டிற்கு கூட சொல்லமுடியவில்லையே.. இவன் இல்லாமல் நான் எப்படித்தான் வாழப் போகிறேனோ பரமேஷ்வரா!” என்று மனதினுள் சொல்லிக் கொண்டாள்.
“நல்ல விஷயம் தானே மச்சி..உனக்கு நல்லது நடந்தா எனக்கு ரொம்பவே சந்தோஷம்.. அப்பாவும் சந்தோஷப்படுவாரு..நீ முன்னாடி போ மச்சி.. எல்லாம் செட் ஆச்சுன்னா நானும் வந்துடுறேன்” என்று கௌதம் சொல்லி முடிக்க ரஞ்சனிக்கு அய்யோவென்று இருந்தது.
“வேஸ்ட்டுடா நீ..கடைசியில சாமியாரா தான் நீ சுத்தபோற!” என்று அவளின் உள்மனம் பரிகாசிக்க, அவளின் மூளையோ கௌதமை காவி உடையில் கற்பனை செய்து பார்த்து அவளை பட்டென சிரிக்க வைத்தது.விழிவிரிய அவளைப் பார்த்தான் கௌதம்.
“என்ன மச்சி கல்யாணம் நடக்க போகுதுன்னு ரொம்பதான் சந்தோஷம் போல!”
“பின்ன என்னவாம்?” என்று சிரித்து கண்சிமிட்டினாள் சதீரஞ்சனி. என்ன நினைத்து அவள் அதை செய்தாளோ, அது சரியாய் கௌதமின் மனதை துளைத்தது. தாடை இறுகிட,
“நீ எப்போ கிளம்பனும்?”என்றான்.
“நாளைக்கு டா..”
“நானே கொண்டு போயி விடுறேன்..”என்றான் அவன்.
“ ஹும்கும் மனசுல ப்ரியமானவளே விஜய்ன்னு நினைப்பு..சிம்ரனை விஜய் தானே வந்து அவங்க அம்மா வீட்டுல விட்டுட்டு போற மாதிரி,இவன் என்னை விட்டுட்டு போக போறானாம்” என்று அவனைத் திட்டிவிட்டு, வெளியில் சரியென்று சொல்லிவிட்டு சென்றாள்.
அருண் தாத்தாவில் தொடங்கி,அபி நந்தன் வரை ஒவ்வொருவருமாய் விஷ்வானிகாவின் கைகளை பிடித்து பேசிக் கொண்டிருப்பதை கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் சகிதீபன். காலையில் அவள் மீது கொலைவெறியில் இருந்தவன் தான் அவன்.
ஆனால், இப்போதோ அந்த கோபம் மொத்தமாய் மறைந்திருந்தது. இதற்கு மைத்ரேயியின் காதல் ஒரு பக்கம், காரணம் என்றால் இன்னொரு பக்கம் விஷ்வானிகாவின் வார்த்தைகள் காரணமாகின.