இப்போது ஹாலில் எரிந்த விளக்கு அணைந்துவிட அவ்விடமே இருளில் முழ்கியது!. அது எப்படி அணைந்தது என்று தெரியவில்லை. ஆனால் யாருக்கும் இருக்கும் இடத்தை விட்டு அசைய தைரியம் எழுவில்லை. பயத்தில் இருந்தவர்கள்,ஒருவரை ஒருவர் நெருங்கி அமர்ந்துக்கொண்டனர். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாவது நிமிடத்தில் விளக்கு மீண்டும் எரிய, கட்டம் போட்ட இடத்தில் வினிதா அமர்ந்து இருந்தாள்!
அவள் அவர்களை எல்லாம் பார்த்து மிக சத்தமாக சிரிக்கவும் அவளின் அண்ணன் உற்காந்து இருக்கும் இடத்தை விட்டு எழமுயற்சிக்க, "பரவாயில்லையே!! இவ்வளவு சீக்கிரமா என்னை தேடி வந்துட்ட.. அவ்வளவு பாசமா என் மேல?” கேட்டாள் அவள்.
அவர் பதில் சொல்ல முனைகயில் "அண்ணா அமைதியாக இருங்க, நீங்க இருக்கும் இடத்தை விட்டு நகர வேண்டாம்னு அப்பா சொன்னார்ல?" என்று அதட்டல் போட்டான் மகேன். மகேன் அவரை அமைதிபடுத்த முனைகயில் அவரோ அவனை பார்த்து முறைத்தார்.
"நீங்க உக்காருங்க.. அவளுக்கு ஒன்னும் ஆகாது..” ரூபனின் அப்பா சொல்ல, "ஹா..ஹா..ஹா” என்ற சிரிப்பு சத்தம் கேட்டது. ஆனால் கட்டத்தில் அமர்ந்திருந்த வினிதா அமைதியாக இருந்தாள். அங்கு சிரிப்பது யார் என்று தெரியவில்லை அவர்களுக்கு.
"உன்னால் முடியுமா? முடியாது! ஏன்னா அதுக்கு அவளை நான் விடணும்!!" என்று குரல் கேட்க மீண்டும் அவ்விடம் இருளானது! இம்முறை வினிதா தான் பேசியது! ஆனால் அது அவளின் குரல் அல்ல!
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
மீண்டும் விளக்கு எரிந்தபோது வினிதா அந்த கட்டத்தில் இல்லை. அவள் சித்ராவின் அருகே படுத்திருந்தாள். சித்ராவுக்கோ பயம் கலந்த ஆச்சரியம்! எப்படி அவள் இங்கு வந்தாள்? வினிதா அந்த கட்டத்தில் அமர்ந்து பின்னரும் அவள் வெளியே வந்த பின்னரும் அங்கே மாவினால் போடப்பட்டு இருந்த கட்டம் அழியவில்லை.
அடுத்த பத்து நிமிடங்களுக்கு ஹாலில் உள்ள விளக்கு எரிவதும் அணைவதுமாக இருக்க, அதே போல் வினிதாவும் அந்த கட்டத்தில் இருப்பதும் இவர்கள் அருகில் இருப்பதும் என இருந்தது.
இதற்கு இடையில் ரூபனின் அப்பா எழுந்து அந்த கட்டத்தின் அருகே சென்றார். வலது கையால் ஏதோ தூளை எடுத்து சென்று அந்த கட்டத்துக்குள்ளும் வெளியேயும் தூவிவிட்டார். இம்முறை விளக்கு எரிய, அந்த கட்டத்தினுள் வினிதா அமர்ந்திருந்தாள்.
ரூபனின் அப்பாவை பார்த்து மிக ஆவேசமாக சிரித்தாள். அந்த சிரிப்பின் எதிர் ஒலியை மற்றவர்களால் கேட்க முடியவில்லை. ரூபனின் அப்பாவை தவிர மற்றவர்களின் கைகள் தன்னிச்சையாக காதை மூடிக்கொண்டன.
அவரும் அவளை பார்த்து மௌனமாக புன்னகைத்தார். அதன் பின்னர் அவரின் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி மந்திரம் படிக்க வினிதாவினால் அந்த கட்டத்திலிருந்து நகர முடியவில்லை. “ஏய்...என்ன..பண்ண நீ..?? நீ படிக்கறதை நிறுத்து!!” என்னால இதுல இருந்து வெளில போக முடியல... நீ சொல்லுறதை கேட்கவும் முடியல.... என் உடம்பு எரியுது...” என அவள் கத்த தொடங்கினாள்.
“நீ அவளை விட்டுவிடு .. அவள் உடலிருந்து வெளியேறு!”என்றார் ரூபனின் தந்தை.
“முடியாது நான் அவளைவிட மாட்டேன்... அவள் என்னுடைய அம்மு!!” என்னுடைய அம்மு சொல்லுகையில் அதில் ஒரு உரிமை போராட்டம் இருந்தது.
“இல்லை.. அவள் வினிதா !!”.. வினிதாவின் அண்ணனை சுட்டி காண்பித்து “இவரின் தங்கை!” என அமுதா சொன்னாள்.
உடனே அவளின் முகம் மாறியது. அவள் உட்கார்ந்து இருந்த தோரணையும் மாறியது.. கண்கள் சிவப்பு ஏற அவர்களை உற்று நோக்கினாள். அவளின் தலை இடது வலது என இரு பக்கமும் அசைந்தது. “இல்லை.. இல்லை.. இல்லை.. இவள் என் அம்முகுட்டி...” என்று சொன்னவளின் குரலும் மாறி இருந்தது. அதில் உரிமையும் பரிதவிப்பும் இருந்தது. “இவளை நான் யாருக்கும் கொடுக்கமாட்டேன்!” என்றது.
“இவளின் உடலிருந்து வெளியேறு... உன் சுய உருவத்தில் என்னிடம் பேசு”– ரூபனின் அப்பா
“இது தான் என் உருவம்.. அதோ வினிதா ரூமில் படுத்து இருக்கிறாள்” என்று அது சொல்ல வினிதாவின் அறை கதவு திறந்துக்கொண்டது. கட்டிலில் வினிதா படுத்து உறங்கிக் கொண்டு இருந்தாள்! இதை பார்த்த மற்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்க
“உன் மாய ஜாலத்தை வேறு ஒருவரிடம் காட்டு... அங்கே இருப்பது வினிதா இல்லை அது நீ என்று எனக்கு தெரியும்!!!" என்றார் ரூபனின் தந்தை.
“ஓ நீ வித்தைகாரனோ... அதான் என்னை அசைய விடாமல் உட்கார வைத்து இருக்கிறாயோ?”
“நீ அவளை விட்டு உன் உருவத்தில் பேசு... உனக்கு என்ன வேண்டும் என சொல்... உன் கோரிக்கை நியாயமாக இருந்தால் உனக்கு நான் உதவி செய்யறேன்!”
“ஹா ஹா ஹா என்னிடம் இருந்து அவளை காப்பாற்ற முயற்சியா? மாட்டேன்! இவளை நான் விட மாட்டேன்... நீ யார் எனக்கு உதவி செய்ய?. என் வேலையை நானே முடித்துக் கொள்ளுவேன்..”. முடித்துக் கொள்ளுவேன் என்ற வார்த்தையை சொல்லுகையில் அழுத்தம் அதிகமாக இருந்தது!