வர்ஷினி பாடியதைக் கேட்டுக்கொண்டே சாலையில் கவனத்தைப் பதித்திருந்த யாதவ், தன் இடக் கையால் வர்ஷினியின் வலது கையை இதமாக பற்றிக்கொண்டே தன் மனம் பல நாட்களாக கேட்கும் அந்த கேள்வியை பாடலானான்.
இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா?
தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குறையுமா?
யாதவின் வினாவிற்கு அவனது நேசத்திற்குரியவளும் ‘இதோ, நீ எவ்வாறு கேட்டாயோ, அவ்விதமே பதில் உரைக்கிறேன்’ என்று தன் விடையை கானத்திலேயே கூறினாள்.
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
‘இதுவரை அது வென்றது போதும். இனியும் முடியாது’ என்பது போல, யாதவின் தோளில் மென்மையாக சாய்ந்திருந்தாள் வர்ஷினி. அடுத்து, அவனிடம் பல நாட்களாக கேட்க நினைத்த ஒரு வினாவை எழுப்பினாள், பாடலாகவே!
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா Vயின் "உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!" - காதல் கலந்த குடும்பத் தொடர்
படிக்க தவறாதீர்கள்..
கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதிற்குள் எப்போது நுழைந்திட்டாய்?
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்
அவளது வரிகளைக் கேட்ட யாதவ், புன்சிரிப்போடு மேலும் பாடலானான்.
உனையன்றி வேறொரு நினைவில்லை
இனியிந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே….
யாதவ் அந்த வரிகளை முழுவதாக பாடுவதற்கு முன்பே வர்ஷினியின் கரங்கள் அவன் இதழ்களுக்கு கடிவாளமிட்டிருந்தன. ‘என்ன?’ என விழிவழியே தன் மார்பில் சாய்ந்து தன்னை நோக்கியிருந்த வர்ஷினியை வினவினான். அதற்கு பதிலாக அவள் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் உருண்டோடியது. துடித்துத் தான் போனான் ஒரு கணம்.
அவளது கரத்தை மெதுவாக விலக்கிவிட்டு, “என்னடா? ஏன் அழறே?” எனக் கேட்டான். மெல்லிய விசும்பலுடன், “ப்ளீஸ் யது…. விளையாட்டுக்குகூட அப்படி சொல்லாதீங்க” என்றாள் வர்ஷினி.
‘என்ன சொல்கிறாள் இவள்?’ என அவன் கேள்வியோடு பார்க்க, அவன் உயிரினுள் கலந்து விடுபவளைப் போல மேலும் ஒண்டிக்கொண்டு அவன் சட்டையை ஈரமாக்கினாள். பின், “என்னால உங்களை விட்டுட்டு இருக்க முடியாது… இனி எப்பவும் சாவைப் பற்றி பேசாதீங்க” என கலங்கினாள்.
இப்போது புரிந்தது. அந்த பாடலின் வரிகளை யாதவ் மாற்றாமல் பாட, அதற்காக அழுகிறாள் வர்ஷினி. “ஐயோ! இவ்வளவு சின்னப் புள்ளத் தனமா இருக்கியேடி! உன்னைப் போய் லவ் பண்றான் பாரு… இவன சொல்லனும்” என்று அவளைக் கலாய்த்தது ‘எப்படியோ மாட்டிக்கிட்டேன்!’ என இவளைப் பார்த்து பாடும் மனம். “ஷூ…. பேசாம இரு… என் தங்கக்கட்டி சோகமா இருக்கு” என அதை அடக்கியது வர்ஷினியுடன் ‘நீ பாதி நான் பாதி கண்ணே!’ என டூயட் பாடும் யாதவின் மனம்.
“உன்னை விட்டுட்டு எங்கேம்மா போவேன்? அப்படி போனா நானும் இருப்பேனா?” என்று பலவாறு அவளை சமாதானப்படுத்தி யாதவ் காரை ஸ்டார்ட் செய்தபோது, இருவர் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது. சார் கொடுத்த வைத்தியம் அப்படி!
மீண்டும் டேப்பை ஓடவிட்டு யாதவ் சாலையில் கவனத்தைத் திருப்ப, வர்ஷினியும் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். முயற்சித்தாள் எனக் கூறலாம்.
சிறிது நேரம் கழித்தே அவர்களைக் கடந்த எந்த உணவகத்திலுமே யாதவ் நிறுத்தவில்லை என்பது புரிந்தது அவளுக்கு. அவனிடம் திரும்பி, “யது…. சாப்பிடனும்னு சொன்னீங்களே! நிறுத்தவே இல்லை?” என்று வினவினாள்.
வர்ஷினியிடம் திரும்பிய யாதவ், உல்லாசமாக சிரித்துக்கொண்டே, “சாப்டாச்சு” என்றான். அவன் பார்வை சென்ற இடத்தைக் கண்ட வர்ஷினிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. அந்திமாலை வானத்தைக் கடனாக வாங்கிக்கொண்டன அவளது கண்ணங்கள்.
“ஆண்டவா!! இனி இவன் இதை குறைந்தது ஒரு மாசத்துக்கு சொல்லுவானே!” என அவனை செல்லமாக வைதது அவள் மனம், தனக்கு அதில் வருத்தம் ஏதுமில்லை என்று வெளிச்சம்போட்டு காட்டியபடி.
அவளின் முகபாவங்களைக் கண்ட யாதவ், தன்நிலை இழக்கும் முன்பு அருகே இருந்த ஒரு கடையின் முன் வாகனத்தை நிறுத்தினான். அங்கேயே இருவரும் காத்திருக்கலானர் ப்ரனிஷுக்காக. சிறிது நேரத்தில் ப்ரனிஷும் அவ்விடம் வரவே, மூவரும் புறப்பட்டனர் ப்ரியாவின் ஊருக்கு.
அந்த ஊரின் மத்தியில் இருந்த பிரமாண்டமான வீட்டை அடைந்தனர் மூவரும். பழமையும் புதுமையும் கலந்து நின்ற அந்த அரண்மனை போன்ற வீட்டை காண்கையில் பிரமித்து நின்றான் பிரனிஷ். அவனது சிந்தையைக் கலைத்தது உள்ளிருந்து வரவேற்ற அருளின் குரல்.