அறையின் வாயிலைத் தாழிட்டுவிட்டு, “என்ன இது?” கோபத்துடன் அவள் அருகில் வந்து கேட்டாள் வர்ஷினி.
“……..”
“கேட்கறேனே… சொல்லு… எதுக்கு இப்படி இருக்கே?”
அவள் அதட்டியதும் மீண்டும் கண்ணில் குளம் கட்டியது ப்ரியாவிற்கு. மெல்ல தன் இதழ் அவிழ்த்து கூறினாள், “எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்…”
“ஏன்??” புருவம் உயர்த்திக்கேட்டாள் வர்ஷினி.
“ம்ம்ம்….” என தானும் அவள் முகம் நோக்கினாள் ப்ரியா.
“சொல்லு… ஏன் வேண்டாம்னு சொல்ற? தெளிவான காரணம் வேணும்.”
“நான் வேலைக்கு போகனும்”
“மேரேஜுக்கு பிறகும் போகலாம்.”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மதுவின் "துடிக்கும் இதயம் உனதே உனது!!!" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
“விடமாட்டாங்க”
“விடுவாங்க. ஒரு வேளை விடலைன்னா நான் பேசறேன். கண்டிப்பா சம்மதிக்க வைக்கிறேன். தென்?”
“எனக்கு அந்த பையனை பிடிக்கலை.”
“ஏன்?” இந்தக் கேள்வி காதில் விழுந்ததும் யோசித்தாள் ப்ரியா. என்னவென்பாள்? அவன் என்னை பார்ப்பது சரியில்லை என்றா?
அதற்கு கட்டாயம் ‘உரிமையாகப்போகிறவள் என்ற எண்ணத்தில் பார்த்திருப்பான்’ என்பர். அப்படியா பார்த்தான்? பட்டிக்காட்டான் பஞ்சுமிட்டாய் கடையைக்கூட இவனை விட நல்லாதான் பார்த்திருப்பான் என எண்ணியது அவள் மனம். ஆனால் வர்ஷினி புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கையில் அவளிடம் கூறினாள் ப்ரீயா.
“அவன் பாக்குறதே ஒரு மாதிரி உறுத்துதுடி. எனக்கு என்னமோ uneasiness-ஆ இருக்கு” என்றாள். ஆனால், அவள் எதிர்பார்த்தபடியே வர்ஷினியும் “இவ்வளவுதானா? நான் என்னமோன்னு நினைத்து பயந்துட்டேன். மோஸ்ட்லி எல்லா பொண்ணுகளுக்கும் இருக்குற ஃபீல்தான் இது. போகப் போக சரியாகிடும்” எனக் கூறினாள் வர்ஷினி.
உண்மையை சொன்னால், அவள் முதலில் எதற்காக மறுத்தாளோ, அந்த காரணமே சிறியதாகிப் போயிருந்தது அவனைக் கண்டதும். இதுவரை திருமணமே வேண்டாம் என நினைத்திருந்தவள், இவனுடனான திருமணம் வேண்டாம் என எண்ணுமளவுக்கு வந்திருந்தாள். அவனுடன் நிச்சயம் என்ற பெயரில் செலவளித்த மூன்று மணி நேரமும் அவளை அவ்வளவு நோகடித்திருந்தது. சுருக்கமாகக் கூறினால், திருமணம் எண்ணைச் சட்டி, அவனுடனான திருமணம் அனல் பறக்கும் அடுப்பு. இதுதான் ப்ரியாவின் தற்போதைய எண்ணம்.
வர்ஷினியின் பதிலைக் கேட்டு சோர்ந்தது ப்ரியாவின் மனது. ‘ஒருவேளை வர்ஷினி கூறுவது போல் பிற்காலத்தில் பழகிவிடுமோ?’ என்று நினைப்பே வயிற்றில் புளியைக் கரைத்தது. இருந்தும் வர்ஷினிக்காக சிரித்து வைத்தாள்.
ஒரு மணி நேரத்திற்குப் பின்பு, அனைவரும் டைனிங் ஹாலில் அமர்ந்திருக்க, பவானியும் மீனாட்சியும் அவர்களுக்கு பரிமாற உணவை எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர்.
“இவ்வளவு ஐட்டம்ஸா?” என வாயைப் பிளந்தான் ப்ரனிஷ். அவனை அதிசயமாக பார்த்தனர் இளையவர்கள். ஏனென்றால் இதுவரை அவர்களுக்குத் தெரிந்து அவன் இவ்வாறு சொன்னதே இல்லையே!
“டேய்… நீயா சொல்லற?” என பிரமிப்பு தாளாமல் ப்ரனிஷின் கையில் கிள்ளினான் யாதவ். “ஆஆஆ… உன் கையில் கிள்ள வேண்டியதுதானே? என்னை ஏன்டா கிள்ளுற?” என கரத்தைத் தேய்த்துக்கொண்டே கடுப்புடன் கேட்டான் ப்ரனிஷ்.
“ஹீஹீ…. எனக்கு வலிக்குமே மச்சி…” என்று கூறி ப்ரனிஷின் கோபப்பார்வையைப் பெற்றுக்கொண்டான் யாதவ்.
‘உன்னை அப்புறம் பார்க்கிறேன்’ என்று பத்திரம் காட்டியபடி, பவானியிடம் திரும்பி, “ஆன்ட்டி, எனக்கு மட்டும் தான் இங்கே இருக்கு? இவங்களுக்கும் பசிக்குமே!” எனக் கேட்டானே பார்க்கலாம். “அடப்பாவி!!!” என்று கோரஸாக கத்தினர் இளையவர்கள்.
“வளர்ற பையனை கண்ணு வைக்காதீங்க எல்லாரும். நீ எவ்வளவு வேணுமோ சாப்பிடு தம்பி. இன்னும் இருக்கு” என்ற மீனாட்சியை “தேங்க்ஸ் ஆன்ட்டி” என்று கொஞ்சியபடி தனக்குத் தேவையானதை எடுத்துக் கபளீகரம் செய்ய ஆரம்பித்திருந்தான் ப்ரனிஷ்.
“அம்மா… இவரை நம்பி அப்படி சொல்லாதீங்க. அடுத்த வேளைக்கு எதுவும் மிஞ்சாது” என வர்ஷினி எச்சரிக்க, “அதை அப்போ பார்த்துக்கலாம்” என்று ப்ரனிஷுக்கு ஸ்வீட்டை வைத்தார் மீனாட்சி.
“இவன் காலி பண்றதுக்குள்ளே அந்த நெல்லுக்கு போறதை இந்த புற்களுக்கும் போடுங்கள்” என்று அங்கிருந்த அனைவருக்கும் பரிமாறச் செய்தான் அருள்.
இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் தேமே என அமர்ந்திருந்தாள் ப்ரியா. அவளைக் கண்ட ப்ரனிஷின் நெற்றியில் ஒரு முடிச்சு விழுந்தது.
தொடரும்
{kunena_discuss:1075}