அவர் கூறியதும், அவள் சிந்தனையில் மூழ்க, அடுத்ததாக வாயு மற்றும் ஆகாயத்தை அழைத்தவர், அந்த கதிரினை சுமந்து செல்லும் படி கூற, அவர்களும் முயற்சித்துவிட்டு, தோல்வியினை தழுவ,
புன்னகையுடன் மகளிடம் திரும்பியவர், “மகளே சதி… உனக்கு இன்னும் பயம் இருக்கிறதா?...” என வினவ,
“இல்லை தந்தையே… பயம் அறவே இல்லை… எனினும் நான் இதுவரை சந்தித்த சம்பவங்கள் எப்ப்டி நிகழ்ந்தது?... அவர்கள் நினைத்தபடியே நான் நடந்து கொண்டதும் எவ்வாறு?... எப்படி நான் கட்டுப்பட்டேன்?...”
“உன்னை குழம்ப செய்து, கலங்க வைத்து, உன்னை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே அவர்களின் திட்டம்… நீ அவர்களின் சூழ்ச்சியிலிருந்து விலகி, பயம் கொள்ளாமல் மீள்கிறாயோ அந்நொடியே அவர்களின் தோல்வி ஊர்ஜிதமாகிறது…”
அவர் தெளிவாக கூற, அவள் எதுவும் பேசாமல் நின்றாள்…
“நான் சொல்வதின் அர்த்தம் உனக்கு புரியவில்லையா சதி?... அன்று நடந்தவற்றை நினைத்துப்பார்… ஏதோ ஒரு சக்திக்கு ஆட்பட்டவளாய் அன்று நீ ததீசி ஆசிரமத்திற்கு சென்றாய்… அங்கு நீ சென்றதும் ததீசி தன் வார்த்தை மாயங்களினால் உன்னை அவன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான்…”
அவர் கூற, கூற, அவள் அந்த நாளின் நினைவில் மூழ்கினாள்…
“அது தான் அவர்கள் செய்த முதல் சூழ்ச்சி… அதன் பின் அறியாமையால் சிவலிங்கத்தை விஷ்ணு சிலையில் பிரதிஷ்டை செய்தாய்… அதற்கு எனது கௌரவத்தினை காரணம் காட்டினார்கள் அவர்கள்… நீயும் அதனை நம்பிவிட்டாய்… அதன் பின் அந்த சிவனை வரவைக்க கூறினான் ததீசி… நீயும் அவனை அழைத்திட, அதனை சந்தர்ப்பமாக்கி அவனும் உன்னை சந்தித்தான்…”
“இது அனைத்தும் எதற்காக தந்தையே?...”
“உன்னை அவனுடன் இணைத்து கொள்ளும் பொருட்டே அனைத்தும் நிகழ்ந்தது மகளே… உன்னை அவன் வசப்படுத்தி, என்னை விட்டு உன்னை விலக்கி, எனக்கு எதிராக உன்னை திருப்பி, என்னையும் துன்பத்திற்கு ஆளாக்குவதே அவர்களின் திட்டம்… நீயும் அறியாமையினால் இதுவரை அவர்களின் கட்டுப்பாட்டிற்கே செவிசாய்த்தாய்… உன் பிரயாசித்தத்தினையும் நீ நிறைவேற்றுகையில், அவனது வசத்தில் உன்னை வைத்திருந்து, உன் மனதினை தேவையற்ற சஞ்சலங்களை விதைத்து, தாமரை மலர்களில் அவனது பெயரினை இயற்ற வைத்தான்… அது எதுவுமே நீ சுயநினைவோடு செய்தது அல்ல மகளே…”
அவர் அவ்வாறு கூறியதும், அவளுக்கு அந்த நாளின் நினைவு வந்தது… கனவினால் அவள் அடைந்த துன்பம், மலர் சேகரிக்க சென்ற போது, அவள் கண்ட அந்த பர்வதம், சிவனிடம் அவள் நிகழ்த்திய கோப உரையாடல், மலரில் தன்னையும் அறியாமல் குழம்பிய மனதோடு சிவனின் பெயரினை இயற்றிய தனது பரிதாபகரமான நிலை… அனைத்தையும் அவள் மனது நினைத்து, தனது அறியாமை நிலையை வெளிக்கொணர, அவள் முகம் தெளிவடைந்தது…
“நிகழ்ந்த அனைத்துமே அவனது சூழ்ச்சி… இதில் இறுதியாக நந்திக்கு மாறுவேடம் அணிவித்து இங்கு அனுப்பி வைத்தான்… இது அனைத்துமே அந்த மகாதேவனின் நாடகம்…”
“ஆம் தந்தையே… அனைத்துமே அவர்களின் சூழ்ச்சிகள் தான்… நான் தான் அதனை அறியாமல் போய்விட்டேன்… என்னை மூலமாக்கி தம்மை அழிப்பதே அவர்களின் எண்ணம்… நான் தான் அதனை உணர்ந்திருக்கவில்லை இதுநாள்வரை… இனி அவரின் சூழ்ச்சிகள் யாவும் இந்த சதியிடத்தில் அரங்கேறிடாது…”
அவள் உறுதியுடன் உரைக்க, நிறைவுடன் பிரஜாபதி தனது மந்திரியினை அழைத்து, மகா மண்டல சபைக்கு அழைப்பு விடுத்ததாக அறிவித்திடுமாறும், அதனூடே அது குறித்த விவாதங்களை நிகழ்த்த சப்த ரிஷிகளுக்கும், தேவேந்திரன் இந்திரன், மற்றும் சந்திரனுக்கும் அழைப்பு விடுங்கள் என்றும் கூற, மந்திரியாரும் சரி என்றார்….
பின் பிரஜாபதியின் அறையில், பிரசுதி பிரஜாபதியிடம் கேள்விக் கேட்டுக்கொண்டிருந்தார்…
“எதற்காக நந்தியைக் கண்டதும் கோபம் கொண்டீர்கள்?.. பிரஜைகளின் முன்னிலையில் தமது சக்தியை வெளிப்படுத்தி, அதோடு மகா மண்டல சபைக்கும் அழைப்பு விடுத்தீர்க்ளாமே?.. எதற்காக சுவாமி?...”
அவர் கேட்டுக்கொண்டிருக்கையிலே, மகரிஷி பிருகுவும், காசியப்பரும் வந்தனர்…
“மகாராணி பிரசுதி கேட்ட கேள்வியினை கேட்கவே நானும் இங்கு வந்தேன்… நந்தியின் வருகைக்கும், மகா மண்டல சபையின் அழைப்பிற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா மகாராஜா?...”
“அப்படி எதுவும் இல்லை… மகா மண்டல சபை நிகழ்ந்து வெகு காலம் ஆகிவிட்டது… அகிலத்திலுள்ள பிராணிகள், ஜீவராசிகள் நலன் குறித்து அறிந்து கொள்ளவும், அதில் ஏதேனும் குறை இருந்தால், அவற்றை அழித்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவுமே இச்சபையிற்கு அழைப்பு விடுத்திருக்கிறேன்….”
அவர் அழுத்தம் திருத்தமாக கூற, பிரசுதியின் முகத்தில் புன்னகை வந்திருந்தது….
“மகா மண்டல சபை அழைப்பில், நான் வசந்த விழா ஏற்பாடுகளை மறந்தே போனேன்… அந்த ஏற்பாடுகளை எப்போது துவங்குவது சுவாமி?...”
“சப்தரிஷிகள், இந்திரன் மற்றும் சந்திரனோடு மகா மண்டல சபையின் ஆலோசனை கூட்டம் நடந்த பிறகே வசந்த விழா ஏற்பாடுகளை கவனித்திட முடியும்…”
அவர் கூறியதும், அங்கு தன் சகோதரிகள், அதிதி மற்றும் கியாத்தியுடன் வந்த சதி,
“தந்தையே, நானே இம்முறை மகா மண்டல சபைக்கான ஏற்பாடுகளை செய்யவா?...” எனக் கேட்டாள்…
“உன் சகோதரிகளுடன் இணைந்து நீயே செய் மகளே…” என்றவர் நினைவு வந்தவராக, மகள்கள் மூவரையும் பார்த்து, “சப்தரிஷிகளோடு சேர்த்து சந்திரனுக்கும் அழைப்பு விடுத்தாயிற்றா என கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்… ஏனெனில் என் மகளான ரேவதி மற்றும் ரோகிணி இருவரும் இங்கு வருகை தர வேண்டுமே….” என்றதும்,
“ஆம் தந்தையே… நாங்கள் தான் உங்களுக்கு நன்றி கூற வேண்டும்… ஏனெனில் வெகு காலமாயிற்றே… எங்கள் சகோதரிகளை பார்த்து…” கியாத்தி புன்னகையுடன் கூற, மற்றவர்களின் முகத்திலும் புன்னகை வந்திருந்தது…