தன்னுடையவளை அவளுக்குரிய மரியாதையோடு மனைவியாக தன் வீட்டில் கொண்டு வருவதற்கான போராட்டம் தற்போது நடந்துக் கொண்டிருக்கின்றது. நிச்சயதார்த்தம் முதலில் நடந்த பிறகு தான் அவளை அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக பிடிவாதமாக நின்றான். வீட்டில் எத்தனையோ பேர்கள் பேசியும் அவன் தன்னுடைய நிலைப் பாட்டில் மாறவில்லை. அப்படி இல்லையென்றால் நான் ஏற்கெனவே தாலி கட்டியாயிற்று அவள் என் மனைவியாக எங்கள் வீட்டிலேயே இருந்து விடட்டும் என்று முடிவாக கூறி விட்டான். மகளை விட்டுக் கொடுக்க இயலாமல் அனிக்கா வீட்டினர் தான் இறங்கி வர வேண்டியதாயிற்று. சாராவின் கலக்கமான நிலைப் பார்த்து கிறிஸ் அன்னை பக்கம் நிற்க தாமஸ் வேறு வழியில்லாமல் இறங்கினார்.
அப்படி இருந்தும்ஆரம்பத்திலிருந்தே தான் எதைச் சொன்னாலும் ஏறுக்கு மாறாக பேசிக் கொண்டும் எதற்கும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டும் இருந்த தாமஸ் மாமா சில நாட்களாக காண்பிக்கும் சுமூகமான நிலைக் குறித்து ரூபனுக்கு ஆச்சரியமே ஆயினும் அவருடைய மாற்றத்தால் அவனுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைத்தது என்றேச் சொல்லலாம். அப்படி அவர் திடீரென மாற காரணம் என்னவாக இருக்கும்? அவனைப் பொருத்தவரை அது ஒரு பதில் தெரியாத கேள்விதான். பதில் தெரிந்த பின் என்னவாக அதை எடுத்துக் கொள்வானோ?
கிறிஸ் இன்னும் இவனை முறைக்கிறான் தான். அனிக்காவின் கடிதம் குறித்தும், அவள் தன் மரணத்திற்காக எடுத்து வைத்திருந்த தூக்க மாத்திரைகள் குறித்தும் ஏற்கெனவே ரூபன் மூலமாக அறிந்த நேரம் முதலே ஏகத்திற்கும் மனம் கலங்கிப் போயிருந்தவனுக்கு அவள் கடிதம் சொல்லிய செய்தி பசுமரத்தாணியாக மனதில் பதிந்து விட்டிருந்தது. அனிக்கா தன் காதலுக்கும் குடும்பத்திற்குமிடையில் தனக்குள்ளாக அல்லாடியதை அவள் கடிதம் அப்படியே புலப்படுத்தி இருந்ததால். அவளை ஒரு போதும் குடும்பமா இல்லை காதலா என்கின்ற இக்கட்டான நிலைமையில் நிறுத்தக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தான் அதனால் கிறிஸ்ஸின் கோபத்தை பெரிது படுத்தவில்லை. உரிமையுள்ளவன் திட்டுகின்றான் எல்லாம் அவளுக்காக என்றே பொறுமையோடு எடுத்துக் கொண்டான்.
அவள் அப்பா, அண்ணனாக குடும்பம் முழுவதுமாக அவளை தனக்கு மணமுடித்துக் கொடுத்தாலொழிய அவளால் முழு மனத்தோடு அவனுடன் வாழ இயலாது என்பதும் அவனுக்கு புரிந்தது. ஒரு வழியாக அவளை அவளுடைய அம்மா, அண்ணியை தன் வீட்டிற்கு நிச்சயத்திற்கான ஷாப்பிங்க் காரணம் சொல்லி புறப்பட்டு வரச் செய்து அனிக்காவோடு ஒன்றுச் சேர்த்தாகி விட்டது. இனி அப்பா , அண்ணனோடும் சமாதானப் படுத்த வேண்டும். தாமஸிற்கு அவருடைய ஸ்டேடஸ் பிரச்சினை. அவராக அவனை தன் ஸ்டேடஸுக்கு ஏற்றவன் என்று எண்ணும் வரைக்கும் ஒன்றுமேச் செய்ய முடியாது. தன்னோடு சமாதானமாகா விட்டாலும் அவர் தன் மகளோடு சமாதானமாக இருந்தாலே அவனுக்குப் போதும்.
ஆனால், கிறிஸ் தங்கைக் குறித்து கொண்டிருக்கின்ற கவலைகளை அவனால் புரிந்துக் கொள்ள முடிகின்றது. உறவு முறைக்குள் திருமணம் என்பதான அவனது கவலைக் குறித்து அறிந்தே தனியாக மருத்துவரிடம் அவனும் , அனிக்காவும் மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெற்றுக் கொண்டு ஒரு சில மருத்துவ டெஸ்ட்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ரூபனுக்கு கிறிஸ்ஸிடம் தான் அவன் தங்கைக்கு ஏற்றவன் தான் என்று தன்னை நிரூபிக்க வேண்டி இருக்கின்றது. அவளை அறைந்ததாலேயே இவன் தன் தங்கையை கண்கலங்காமல் வைத்துக் கொள்வானா? என்று எழுந்துள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டியிருக்கின்றது.
கிறிஸ் அத்தான் மட்டுமா? தன் தம்பிக்கும், அண்ணனுக்குமே தன் மீது வந்த நம்பிக்கையின்மையை என்னச் சொல்வது. தனக்காக பார்த்து பார்த்துப் பேசி தாமஸ் மாமாவை ஒரு வழிக்கு கொண்டு வந்திருந்தாலும் தீபன் இவனை தனியே அழைத்து “உன் கோபத்தைக் குறைத்துக் கொள்’ என்று அரை மணி நேரம் லெக்சர் கொடுத்ததையும், ஜீவன் “நீ எவ்வாறு என் ஃபிரண்டை அடிக்கலாம்” என்று தன்னிடம் சண்டைக்கு வந்ததையும் என்னச் சொல்ல? என்னை கோபப் படுத்தி அடிக்க வைத்தவள் எல்லாம் செய்து விட்டு சுகமில்லாமல் ஆகி விட்டதால் நல்லவளாகி விட நான் தான் எல்லோரிடமும் அகப்பட்டுக் கொண்டேன் செல்லமாக அனிக்காவை மனதில் திட்டிக் கொண்டான்.
எது எப்படி இருந்தாலும் அனிக்காவை அடித்ததை அவனாலேயே சரியென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனக்கு ஏன் அன்று அவ்வளவு கோபம் வந்தது? என்று அவன் வருந்தாத நாளில்லை. அதனால் எழுந்த குற்ற உணர்ச்சியாலோ என்னமோ அனிக்காவிடம் சாதாரணமாக பேசவும் கூட அவனால் முடியவில்லை.
அனிக்கா போட்ட ஆர்டரை மீறாமல் சாப்பிட்டு, பால் அருந்தி உறங்கச் சென்றான். நாட்கள் நெருங்கியது பேசி முடிவெடுத்தபடி நிச்சயதார்த்தம் நிகழ இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தது.
நெருங்கிய உறவினர்கள் ஓரிருவர் முன்னதாகவே வந்திருக்க, பெண் எதற்காக மாப்பிள்ளை வீட்டிலிருக்கிறாள் என்று பல பேரிடமிருந்து பல விதமான கேள்விகள் வர எதையோச் சொல்லி சமாளித்தார்கள்.
அனிக்கா முன்போல உற்சாகமாகி இருந்தாள். அடிக்கடி ரூபனிடம் வந்து பேச்சுக் கொடுத்துப் பார்ப்பதும், அவன் சரியாக பதில் பேசாததும் ஏமாற்றத்தோடு திரும்புவதுமாக இருந்தாள்.
ஜீவனோடு கொட்டம் அடிக்கவும் ஆரம்பித்தாள். அவளை முன் போல உற்சாகமாகப் பார்த்து அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.