30. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி
இரவில் வெகு நேரம் கழித்து ஃபேக்டரியின் வேலைகள் முடித்து வந்த ரூபனுக்கு பசியை விட தூக்கமே பெரிதாகப் பட ஃப்ரிட்ஜை திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் சரித்து விட்டு திரும்புகையில் யாரோ வருகின்ற அரவம் கேட்க, அம்மாவாக இருக்கும். எனக்காக விழித்திருக்க வேண்டாமென்றுச் சொன்னால் கேட்டால் தானே? என்றெண்ணியவனாக முன் நடக்க , சட்டென்று ஒளி பரவியது. எதிரில் யாரையோ மோதுகிற நிலையை சமாளித்து நின்றால் வந்தது யார்? என்னவளாகிய மோகினிப் பெண்ணா? மோகினியே தான். கண்ணை உருட்டிக் கொண்டு நிற்பதைப் பாரேன் மனதிற்குள்ளாக பேசிக் கொண்டான்.
நீயெல்லாம் ரொமான்ஸ் லுக் விடுகிறாய் என்று சொல்லி விடாதே முட்டைக் கண்ணி………. உள்ளுக்குள் சிரிப்பாக வந்தாலும் அடக்கிக் கொண்டான் ரூபன். இதில் நல்லதொன்று இருகின்றது இன்று அவளை ஒளிந்துப் போய் பார்க்கும் சங்கடம் ஏற்படாமல் அவளே தரிசனம் தந்து விட்டாள். எதிரில் அவள் நின்றாலும் அவளிடம் வெளிப்படையாக பேச முடியாமல் அழுந்தியது உள்ளத்தில் இருக்கும் ஆயிரம் வலியுணர்வுகள். பேச வேண்டும் இவளிடம், ஒவ்வொன்றாக பேச வேண்டும். எனக்கும் அவளுக்குமான தனிமையில், எங்களை யாரும் தடைச் சொல்ல இயலாத உரிமை நிஜமாகவே வந்த பின்னர் ஒரு நாள் பேச வேண்டும். இப்போது சென்று ஓய்வெடுப்போம் என்றெண்ணியவனாக நகர்ந்தான்.
அத்தான் இன்னிக்கு இவ்வளவு லேட் ஆகிட்டா?
…………ம்ம்
சாப்பிட்டீங்களா?
..இல்ல நேரமாச்சு போய் தூங்கப் போறேன்.
…ஆ..ஹான் நோ நோ அத்தான் உட்காருங்க சாப்பிடாம எல்லாம் தூங்க கூடாது கொஞ்சமாச்சும் சாப்பிடுங்க…. வலுக்கட்டாயமாக அவனை சமையலறையை அடுத்து இருந்த டைனிங்க் டேபிளில் அமர வைத்தாள்.
உடனே எழுந்தவனை அதட்டினாள்.
கை கழுவப் போறேன் என தான் எழுந்த காரணத்தைச் சொல்லியவனாய் தாண்டிச் செல்லவும் தன் நாக்கைக் கடித்துக் கொண்டு “ஸாரி” சொல்லிக் கொண்டாள்.
அனிக்காவோடு ரூபன் அறையில் படுத்திருந்த இந்திரா வீட்டில் பேச்சு சப்தம் கேட்டு எழுந்து வந்தார். அங்கு நிகழ்பவற்றை பார்த்த பின்னர் தான் வந்த மாதிரியே சத்தம் காட்டாமல் மறுபடி போய் படுத்துக் கொண்டார்.
அனிக்கா ஹாட் பாக்ஸிலிருந்த இட்லிகளை எடுத்து தட்டில் வைத்தாள். கை கழுவி வந்தவன் அவள் அதிகமாக எடுத்து வைத்திருந்தவைகளை மிகுதியானவைகளை எடுத்து ஹாட் பாக்ஸிலேயே திரும்ப வைத்தான். உடனே சட்னியை எடுத்து வைத்தவள், சாம்பாரையும் சூடாக்கி எடுத்து சாப்பிடும் படி வைத்து விட்டு ஒரு பெரிய கிளாஸ் பால் சூடு செய்து டேபிளில் வைத்தாள்.
அவளது பரிமாறிய வேகம் பார்த்து மிரண்ட ரூபன், ஹேய் இது என்ன எனக்கு ராத்திரி கொஞ்சம் சாப்பிட்டாலே போதும். பால் எல்லாம் வேணாம் என பதறினான்.
வேணும்னா ஒரு இட்லி குறைவா சாப்பிடுங்க , ராத்திரி பால் குடிக்கணும்னு அம்மா சொல்லிருக்காங்க என்று திடீர் நாட்டாமையாக மாறி தீர்ப்புச் சொன்னாள் அனிக்கா.
சரி சரி நீ போய் தூங்கு, நான் சாப்பிட்டுக்குவேன்’ என அவளை விரட்டினான்.
பாத்திரம்லாம் எடுத்து ……….
அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். போ என ஒரு வழியாக அவளை அங்கிருந்து விரட்டிய பின்னரே அவனுக்கு ஆசுவாசமாயிற்று. வீட்டில் யாராவது இந்த இரவில் இவர்கள் இருவரும் கிட்செனில் சேர்ந்து நிற்பதை பார்த்தால் என்ன நினைப்பார்கள்? என்று அவனுக்கு மனதில் தவறாக தோன்றிக் கொண்டிருந்ததே அதற்கு காரணம். ஏற்கெனவே தன்னால் அவளுக்கு ஏகப்பட்ட மன உளைச்சலாக இருந்திருக்கும். இன்னும் புது பிரச்சினைகள் எதற்கு?
இதற்கு முன்பாக நடந்த சம்பவங்கள் அனைத்தும் அவனுடைய கட்டுப் பாட்டை மீறி நடந்து விட்டிருந்தன. அவள் ஃபேக்டரி நோக்கி வருவதாக அறிந்த நேரம் அவனுடைய திட்டமே வேறாக இருந்தது.
அனிக்காவிற்கு விக்ரமோடு திருமணம் நிச்சயமாகப் போவதாக தெரிந்த நாள் முதலாக விக்ரமிடமிருந்து அவளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் அவள் எப்போது வீட்டை விட்டு வெளியே வந்தாலும் அவளைக் கடத்துவதாக முடிவுச் செய்திருந்தான். தவறாகவே தெரிந்திருந்தாலும் அவளுடைய நலனுக்காக அதைச் செய்தே ஆக வேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்திருந்தான். அவள் தன்னை நேசிப்பதை தெரிந்துக் கொண்ட பிறகும் யாருக்கும் அவளை அவனால் விட்டுக் கொடுக்க இயலாதே. அதிலும் விக்ரமின் பழிவாங்கும் படலம் அறிந்த பின்னும் அவளை காவு கொடுக்க அவனால் எப்படி முடியும்?
சர்ச்சில் திருமணம் செய்ய வேண்டுமானால் ஆணும் பெண்ணும் சென்று பங்கு குருவானவரை சந்தித்து பேசுவது தான் முறை. தற்போதைய நிலையில் அது சாத்தியப் படாது எனவே முதலில் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து அவளை தன்னுடையவளாக்கிக் கொண்டு பாதுகாத்த பின்னர் சர்ச்சிலும் திருமணம் செய்துக் கொள்ளலாம். அப்படி பட்ட வழிமுறைகள் இருக்கின்றனவே என்றெண்ணியவனாக ரெஜிஸ்டர் திருமணம் செய்வதற்காக ஏற்கெனவே முன்பதிவுச் செய்து வைத்திருந்தான். அப்படி இருக்கும் போது தேவைப் படுமே என்றெண்ணி அனிக்காவிற்காக ஸ்பெஷலாக செய்த தாலி தான் அது. அவர்கள் குடும்ப வழக்கப்படி நன்கு பருமனான ஓரளவு பெரிய தாலி செயின்கள் அணிவதே வழக்கம். ஆனால், அவள் ஏதேச்சையாக அவள் அண்ணியிடம் பேசியதைக் கேட்ட போது அவளுக்கு எளிமையான ட்ரெண்டியான சின்ன செயின் அணிவதில் விருப்பம் என்று அறிந்ததால் வெகுவாக தேடி அந்த சின்ன அழகான செயின் மாடலையும், மறவாமல் அதற்கேற்ற வகையில் சின்னதான ஹார்ட் ஷேப்பின் நடுவே சிலுவைக் கொண்ட குடும்பத்தில் அம்மா, அக்கா, அண்ணி அணிகின்ற வகையிலான திருமாங்கல்யத்தையும் செய்யச் சொல்லி அவன் ஆர்டர் செய்து வந்திருந்தான்.