05. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

போதிய அளவு ப்ராண வாயு மட்டும் இருந்தால் போதும். உடலை விட்டு பிரித்தடுத்தாலும் இதயத்தால் துடிக்க முடியும்
“சாரி டு கீப் யூ வெய்டிங் வருண்” அப்போது தான் சர்ஜரி முடித்து தனது அறைக்குள் நுழைந்தான் கணேஷ்.
“நோ நோ கணேஷ். நான் தான் முன்னாடியே வந்துட்டேன்”
“தட்ஸ் ஒகே வருண். வுட் யூ லைக் டு ஹாவ் சம் காபி” கேட்டுக் கொண்டே தனது செக்ரடரியை போனில் அழைத்தான்.
வருண் சரியென்று சொல்ல இரண்டு காபிக்கு சொன்னான் கணேஷ்.
“முக்கியமான விஷயம்ன்னு சொன்னீங்களே வருண். என்ன விஷயம்”
“இந்த ரிபோர்ட்ஸ் பாருங்க. உங்க ஒபினியன் வேணும்” வருண் அந்த பென் ட்ரைவ் நீட்ட அதை வாங்கி தனது கம்ப்யூட்டரில் பொருத்தி நிதானமாக ஆராய்ந்தான்.
“இவங்க”
“என் தங்கை. என் அத்தை கௌரியோட பொண்ணு”
“ஒஹ் ஹாஸ்பிடல் உங்க அத்தை பேர்ல தான் கட்டியிருக்கீங்க இல்லையா”
“யெஸ்”
“இதுல நான் என்ன ஒபினியன் சொல்லணும் வருண். எவ்ரிதிங் இஸ் பைன். உங்களுக்கு தெரியாததா”
“இல்ல கணேஷ். நேத்து அவ லேசா மயக்கமாகிட்டா. நான் எல்லா டெஸ்ட்ஸ் செய்தேன். இட் வாஸ் நார்மல். இருந்தாலும் உங்ககிட்ட ஒரு தரம் கன்சல்ட் செய்யலாம்னு” கொஞ்சம் தயக்காமாகத் தான் சொன்னான் வருண்.
கணேஷ்க்கு ஆச்சரியம் தான். வருண் ஒரு சிறந்த கார்டியாலஜிஸ்ட். இருந்தாலும் ஒரு அண்ணனாக தன் அத்தை பொண்ணுக்காக தவிப்பதைப் பார்த்து வருண் மேல் வியப்பும் மதிப்பும் பரிவும் வந்தது.
“உங்க அத்தை பொண்ணு ஐ மீன் உங்க சிஸ்டர் இஸ் சோ லக்கி. உங்க கன்சர்ன் புரியுது. ஆனா இவங்கள சின்ன வயதில் இருந்தே மாமா தான் ட்ரீட் செய்திருக்காங்க. நீங்க அவர் கிட்ட காட்டியிருக்கலாமே”
“சார் எப்படியும் என்ன செம டோஸ் விடுவார். அதான் உங்ககிட்ட வந்தேன் கணேஷ். அம்மு விஷயத்துல நான் ஒரு அண்ணன் மட்டும் தான். அங்க டாக்டர் கணேஷ் காணம போய்டுவான். எனக்கு உங்ககிட்ட கேட்டு நீங்க ஒண்ணுமில்ல நார்மல் தான்னு சொல்லிட்டா ஒரு நிம்மதி. ப்ளீஸ் டோன்ட் மைன்ட் கணேஷ்”
“நோ நோ அப்படி எல்லாம் இல்லை வருண். ஆக்சுவல்லி எனக்கு இந்த அண்ணன் வருணை பார்க்க ப்ரமிப்பா இருக்கு”
“அன்பு ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றி விடுகிறது” தனது மனதிற்குள் கணேஷ் நினைத்துக் கொண்டான். “ஏன் உன்னையும் மாத்திடலையா” என்றே அவனது மனசாட்சி கேலி செய்ய அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான் கணேஷ்.
“வருண் உங்க அத்தை பொண்ணுக்கு டீன் ஏஜ்ல இருந்து அடிக்கடி படபடப்பு மயக்கம் வந்திருக்கு. நீங்க அப்போவே சிவகுமார் மாமாவை கன்சல்ட் செய்திருக்கீங்க. அப்போ அனீமியா கொஞ்சம் சிவியரா இருந்திருக்கு. அதுனாலே தான் ஹார்ட் கொஞ்சம் வீக்கா இருந்திருக்கு. அதன் பிறகு ட்ரீட்மன்ட் எடுத்துகிட்டதும் கம்ப்ளீட்டா குணமாகிருச்சு”
“ஆமாம் கணேஷ். அம்மு ப்ரீமெச்சூர் பேபி வேற. அதுனலா அவ சின்ன வயசில் இருந்தே கொஞ்சம் வீக்கா தான் இருப்பா. அண்ட் அத்தைக்கு அப்படி ஆனதுல எங்களுக்கு கொஞ்சம் பயம் எப்போதும் உண்டு”
“அவங்களுக்கு இருந்தது இட்ஸ் நாட் ஹெரிடிடி”
“உங்க ரிசர்ச் ஆர்டிகிள் படிச்சிருக்கேன் கணேஷ். தட்ஸ் ஆல்சோ எ ரீசன் இ வாண்ட்டட் டு டெக் யுவர் ஒபினியன்”
“யெஸ் இனிமே நீங்க உங்க அம்மு அதாவது அம்ருதாவோட இதயத்தை பத்தின கவலைய விடுங்க” கணேஷ் சிரித்துக் கொண்டே சொல்ல வருணும் நன்றி தெரிவித்து விட்டு வீட்டிற்கு கிளம்பினான்.
வருண் வீட்டிற்க்குள் நுழைந்ததும் லக்ஷ்மியும் ராமச்சந்திரனும் அவனிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.
“அப்போ அம்முக்கு நல்லபடியா வரன் பார்க்க ஆரம்பிக்கலாம்” லக்ஷ்மி மகிழ்ச்சியும் நிம்மதியுமாக கூறினார்.
“அம்மா அந்த பொறுப்பை என்கிட்டே விடுங்க. நம்ம அம்முக்கு சூப்பர் மாப்பிளையா நானே பார்க்கிறேன். கல்யாண விஷயத்தில் அவசர பட வேண்டாம். அவளுக்கு பெஸ்ட்டா செய்யணும்”
“நீ இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை வருண். உன் தங்கச்சி மனசுக்கு பிடிச்ச மாப்பிளையா பாருடா” ராமச்சந்திரன் இதைக் கூறும் போது பழைய நினைவுகளில் சற்றே மனம் வாடிப் போனார்.
“அப்பா பழசை எல்லாம் போட்டு மனச குழப்பிக்காதீங்க. எல்லாமே நல்லபடியா நடக்கும். அது சரி அம்மு எங்க”