தொடர்கதை - கானல் நீரினால் காய்ந்த நதிகள் - 02 - ரேவதிசிவா
“நம் புறத்தே நெருங்கும் பலவற்றிற்கு
அகழ்வாராயாமல் அகம் கொடுத்தால்?
நாம் புறம்பாகி காய்ந்து போவோம்
அக்கானல் நீரினால்!”
நாம் ஏன் அனைவரும் பணத்தை நோக்கியே ஓடுகிறோம்?
என்ன கேள்வி இது? நம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு என்னும் பதில் தான், முதலில் நம்மில் பல பேருக்குத் தோன்றும்.
ஒருமனிதனின் தேவை என்று பொதுவாக நாம் நிர்ணயிப்பது உணவு, உடை மற்றும் உறையுள் அதாவது வாழ்விடம்.
இம்மூன்றுக்குப் பின்தான் கல்வி மற்றும் பிற விஷயங்கள் வரும்.
உலகில் அனைவரும் இம்மூன்றில் தன் நிறைவு அடைந்துவிட்டனரா?
விடையை பிறகு பார்க்கலாம். அதற்குமுன் வேறொரு இடத்திற்கு நாம் செல்ல வேண்டும்.என்னை தொடர்ந்து வாருங்கள்.
இடம்: நேபால்
ஏய்! அங்கென்ன தூங்கிட்டிருக்கியா! ஒழுங்கா போய் வேலையைப் பாரு என்று கொடுரமாகக் குரல் கொடுத்தான் மாதவ் பிராசாத்.
அவனின் குரலில் தூக்கம் கலைந்த அதுல் , அவசர அவசரமாக ஒடிப்போனான் கையில் கழுவியப் பல கோப்பைகளுடன்!
அவன் வேலை செய்வது சிற்றுண்டி மற்றும் பழச்சாறு அருந்தும் சிறிய உணவு விடுதி.சிறிய விடுதி என்றாலும் இரவு நெடு நேரம் வரை பல மக்கள் வருவர்.
அதுலுடன் அவனைப் போல இரண்டு பேர்.இவர்கள்தான் வருபவர்கள் அனைவரையும் கவனிக்க வேண்டும். அதுலை விட அவ்விரு மக்களும் சில வருடங்கள் பெரியவர்கள்.
அதுல் இங்கு வந்து ஒராண்டு மற்றும் இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன.
அனைத்துவேலைகளும் முடிந்து அம்மூவரும் உறங்க மணி இரண்டாகிவிட்டது. அதுல் மிகவும் விரும்பும் நேரம் இதுததான், அவன் தன்னைப் பற்றி சிந்திக்க இந்த நேரத்தை விட்டால் பிறகு கிடைக்காது.
அதுல் பின்நோக்கி செல்லட்டும் நாம் பீகாருக்கு முன்னோக்கிச் செல்வோம்!
இடம்: பீகார்
தண் பகதூர் என்றால் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். அனைவரும் அவரை தெரிந்து வைத்திருப்பதால், அவர் பெரிய ஊர் தலைவரோ இல்லை ஊரில் மதிப்பு மிக்கவரோ என்று நாம் எண்ணினால் அது நம் தவறு!
சரி,மிகப்பெரிய பயில்வானோ இல்லை ரவுடியோ என்று நினைத்தால் அதுவும் இல்லை.
பின் அவர்/அவன் யார் ?
அடுத்தவரின் சூழ்நிலையை தனக்குச் சாதகமாக்கி,நஞ்சை உள் வைத்து நாக்கில் தேன் வைத்து பேசுபவன்.
இருப்பதிலே மிகவும் கேவலமானது எது தெரியுமா? அடுத்தவரின் சுயமரியாதையை அழித்து அவர்கள் வெட்கி வருந்துபடி செய்யும் சூழ்நிலையை உருவாக்கி, அதில் தன் பிண்டத்தை வளர்ப்பதுதான்!
இந்த கேவலத்தை செய்யும் ஈனர்கள் இவ்வுலகில் பல பேர் உள்ளனர், அவர்களில் ஒருவன்தான் இவன்.
கொடுமையில் கொடுமை, இவர்கள் போன்றோரைத் தெரிந்தும் பல மக்கள் அவனை கண்டிக்காமலும் தண்டிக்காமலும் இருப்பதுதான்!
சரி, வலிமையில்லை எதிர்க்க என்றாலும் பரவாயில்லை, நம்மை அண்ட விடாமல் செய்யலாமே?
அது முடியாது அங்கிருக்கும் பலருக்கு!
நம்மில் பலர்,சில சுழ்நிலையிலோ அல்லது கிடைக்கும் சந்தர்பத்திலோ பேராசை,ஆணவம்,ஆங்காரம்,ஆதிக்கம் , பயம், சுயநலம், தலைக்கணம்,பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி என்னும் பல மாயைகளைப் புறத்தே தீண்டும் பொழுது, அவைகளின் பண்பு மற்றும் பலனை ஆராயாமல்,அகத்தில் அனுமதிக்கிறோம்!
இதனால் விளைவது என்ன ?
நல்லது போல் தோன்றும் அக்கானலினால் நாம் அன்பு,பாசம்,அமைதி, அரவனைப்பு,பொதுநலம்,மரியாதை,பிறரை மதித்தல் போன்ற பண்புகளை இழந்து பண்பாடற்றப் பித்தர்களாய் திரிந்து மனிதத்தை மறந்து, கெடுவோராய் மாறி காய்ந்து பிறருக்கும் நமக்கும் பயன் இல்லாமல் போவதுதான்!
கெடு குணங்கள் போன்ற கானலினால் நம்முள் ஊறும் நற்பண்புகள் என்னும் நதிகள் காய்ந்துப் போகின்றன.
இவன் அங்கிருக்கும் பல ஏழைமக்களுக்கும் சில நன்மனம் கொண்ட செல்வர்களுக்கும் மிகப்பெரிய எதிரி. ஆனால் வெளியே காட்டிக் கொள்வதே இல்லை.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகக் கொடுரமாகத் தெரியும் மூர்க்கன். “இவனின் பல்லை முழுவதும் சுத்தியால் தட்டி எடுத்தாக வேண்டும்”, என்னும் எண்ணத்தை பார்க்கும் பெண்கள் அனைவரின் மனதிலும் தோற்றுவிப்பதில் வல்லவன்!