அவள் சொன்னதும், மறு பேச்சு பேசாமல் சொக்கநாதனும் அவளுடன் கிளம்ப,
“ஏய்… வந்ததும் வராம எங்கடி கிளம்பி போற?...”
ரித்தியை வழிமறித்தார் வசுந்தரா…
“தாத்தா… வரீங்களா இல்லையா?...”
அவள் கோபமாக கேட்க,
“இதோ வந்துட்டேன்மா…” என்றார் அவர்..
“ஏய்… கேட்குறேன்ல பதில் சொல்லுடி முதல்ல…”
“வெட்டிப் பேச்சு பேச எல்லாம் நேரமில்லைன்னு சொல்லுங்க தாத்தா….”
கையினை கட்டிக்கொண்டு முகத்தினை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு பதில் சொன்னாள் ரித்தி…
வசுந்தராவிற்கு புரிந்தது இது தன் கணவருக்கான பதிலடி என…
மனதிற்குள் மகளினை நினைத்து புன்சிரிப்பு சிந்தியவர், மெல்ல தன் கணவரைப் பார்க்க,
“அப்பா நானும் வரேன்…” என்றார் ராகேஷ்வர்…
தகப்பன் தன் வழி வந்துவிட்டதை உணர்ந்தவளுக்கு இதழ்களில் புன்னகை உதிக்க, அதை மறைத்தபடியே,
“தாத்தா… நம்ம இரண்டு பேரும் மட்டும் தான் போறோம்… வேற யாரும் வரக்கூடாது…” என்றாள் அவள் கோபமாக நடந்தபடி…
“ஏங்க என்னை விட்டுட்டு போறீங்களா?.. நானும் வரேங்க….”
வசுந்தரா தன் கணவரிடம் கெஞ்ச,
“நீ இல்லாமலா?...” என்றார் அவர்…
“ப்ளக்ஸ் போர்ட் அடிக்க சொன்னவங்களே வரக்கூடாதுன்னு சொல்லிட்டிருக்குறேன்… இதுல அவங்க வொய்ஃப் வேறயா?... வேணும்னா அவரோட வொய்ஃபை தனியா வெளிய கூட்டிட்டு போக சொல்லுங்க… நம்மோட எல்லாம் வரக்கூடாது… அப்புறம் அவங்க நிம்மதி கெட்டு போயிடும்…”
இது தன் மனைவிக்கான பதிலடி என்பதனை தெரிந்து கொண்ட ராகேஷ்வருக்கு வெளிப்படையாகவே சிரிப்பு வர, வசுந்தராவோ அவரினை முறைத்தார்…
“என்ன?....”
“ஒன்னுமில்ல… லேசா புரை ஏறிட்டு…”
“ஏறும்.. ஏறும்…”
வசுந்தரா தன் கண்களை உருட்ட,
“அப்பா நீங்க பேசிட்டே வாங்க… நான் போய் காரை எடுக்குறேன்….”
ராகேஷ்வர் சைக்கிள் கேப்பில் அங்கிருந்து நகல, “ஏங்க கொஞ்சம் நில்லுங்க… உங்க கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு….” என தன் கணவரை விடாது பின் தொடர்ந்தார் வசுந்தரா கோபத்துடன்…
அவர்கள் இருவரும் சென்றதும், சொக்கநாதனும் ரித்தியும் ஒருவரை ஒருவர் பார்த்திட, இருவருக்குமே சிரிப்பு வந்தது…
“என்னடா வந்ததுமே அதிரடியா இறங்கிட்ட… கொஞ்சம் விட்டு பிடிக்கலாமே…”
“இல்ல தாத்தா… இரண்டு பேருக்கும் நான் இல்லாம குளிர் விட்டுப்போச்சு… பார்த்தீங்கல்ல… நான் வந்ததும் இரண்டு பேரும் மாத்தி மாத்தி என்னை கலாய்ச்சதை…”
“சரி விடுடா… பாவம் ஏதோ தெரியாம செஞ்சிட்டாங்க… மன்னிச்சு விட்டுடலாம்….”
“தாத்தா… நீங்களும் அப்பா, அம்மாக்கு சப்போர்ட்டா?...”
“சே… சே… இல்லடா நான் என்னைக்கும் என் பேத்திக்கு தான் சப்போர்ட்…”
“இப்போதான்… நீங்க என் செல்ல தாத்தா….” என்றவள் அவரின் கன்னம் தொட்டு கொஞ்ச, வெளியே ஹாரன் அடித்தார் ரித்தியின் தந்தை…
பின் இருவரும் சென்று காரில் அமர, போகும் வழியெங்கும் எதுவும் பேசவில்லை ரித்தியின் தந்தை… மகளையே கவனித்துக்கொண்டு வந்தார்…. தன் தந்தையிடம் அவள் சிரித்து பேசிக்கொண்டே வர, அதனை ரசித்தபடியே அந்த பெரிய வீட்டிற்குள் நுழைந்தார் அவர்…
“வாங்கய்யா… வாங்கம்மா…” காவலாளி வரவேற்க, புன்னகையுடன் அவனிடம் நலம் விசாரித்துவிட்டு உள்ளே சென்றனர் அனைவரும்…”