"அவ நெற்றியிலும்,மாங்கல்யத்திலும் குங்குமம் வைடா!"-இதுதான் சமயம் என்று கூறினார் விசாலாட்சி.
அதற்கு எவ்வித மறுப்பும் அவரிடமிருந்து வரவில்லை.அமைதியாக,குங்குமத்தை எடுத்து பல்லவியின் நெற்றி வகிட்டில் வைத்தார்.சிறு தயக்கங்களுக்கு பின்னே,தனது மாங்கல்யத்தை கணவருக்காய் அவர் காட்ட,குங்குமத்தை மாங்கல்யத்திலும் வைத்தார் சங்கரன்.
சட்டென கண்ணீர் துளிர்த்துப் போனது அவருக்கு!இந்த மாற்றின் மூலக்காரணம் யார் என்பதை அங்கு எவரும் அறியவில்லை.எனினும்,அத்தகு மாற்றம் மாற்றத்தையே மாற்றி அமைத்தது.
"நிர்பயா!"
".............."
"நிர்பயா!"
"ஆ..என்ன பாட்டி?"
"பூஜை ஆரம்பிக்கப் போகுது!கீழே வா!"
"நீங்க பண்ணுங்க பாட்டி!நான் எதுக்கு?"
"கீழே இறங்கி வா!உன் கோபத்தை காட்ட வேண்டியவங்கக்கிட்ட காட்டு!தெய்வத்துக்கிட்ட காட்ட நினைக்காதே வா!"-சற்றே கோபமாய் பார்வதிக் கூற,வேறு வழியின்றி அவள் பின்தொடர்ந்தாள்.
பலர் கூடியிருந்த அந்தச் சபையில் மௌன ஸ்வரூபினியாய் வந்தாள் நிர்பயா.
"என்னம்மா?நல்லா இருக்கியா?"-நலம் விசாரித்தனர் பலர்.
"ஆ..நல்லா இருக்கேங்க!"-போலிப் புன்னகையோடு பதிலுரைத்தாள் அவள்.
"ம்..பூஜையை ஆரம்பிங்க!"-இங்கும் அதே போல சடங்குகள் நிகழ்ந்தேறின.
ஆனால்,இங்கு துர்க்கைக்கு ஆரத்தி எடுக்கும் சச்சரவுகள் எழவில்லை.பார்வதியும்,வைத்தியநாதனும் அப்பணி ஆற்றிவிட்டனர்.
"நீயும் எடு நிர்பயா!"
"ஆ???"
"அந்த துர்கா தேவி ஆசியால,சீக்கிரமே நல்ல வரன் கைக்கூடி வரும் பார்!எடு!அந்த இறைவனோட ஆசி உன் கூடவே என்னிக்கும் இருக்கும்!"-அந்த ஆசீர்வாதத்தால் அவளது மனம் சுக்கலாய் உடைந்துப் போனது.பொங்கி வந்த கண்ணீரை கட்டுப்படுத்தியப்படி,
"இல்லை...அதான்,பாட்டி எடுத்துட்டாங்களே!"
"பரவாயில்லை...அதனால,என்ன?நீயும் எடு!"-அனைவரும் வற்புறுத்த,மீண்டும் ஒரு நிர்பந்தம்!!
மனம் முழுதும் அச்சமயம்,ஜோசப்பின் நினைவுகள் குடியேறிக் கொண்டன.
அவள் தடுத்தும் பயனில்லாமல் ஆனது!!!
அவனது நினைவுகளோடு அவள் ஆரத்தி எடுக்க,அச்சமயம் அங்கு பெரும் காற்று வீசியது.
சூறைக்காற்றுப் போன்ற அக்காற்று அவள் கரத்தில் இருந்த தாம்பூல தட்டில் வைக்கப்பட்டிருந்த குங்குமத்தை சிதற வைத்து,அதை அவளது நெற்றி வகிட்டில் பதிக்க வைத்தது.அடுத்த சில நிமிடங்களில் வந்தப்பணி ஈடேற,அக்காற்று வந்த வழியே திரும்பி சென்றது.
அதிர்ந்து போய்,தன் நெற்றியை தொட்டுப் பார்த்தாள் நிர்பயா.
அவளது விரல்களில் நிறைந்திருந்தது குங்குமம்.
"நான் சொல்லலை?அந்த கௌரியோட ஆசி,உனக்கு சீக்கிரம் நல்ல வாழ்க்கையை அமைத்து தரப்போகுதுப் பார்!"-மனமார வாழ்த்தினார் ஒரு பெண்.அப்போது அவள் அனுபவித்த மனவலியை அவள் பார்வையின் வழியே அந்த ஆதிசக்தியை தவிர,வேறு எவராலும் அறிந்திருக்க இயலாது.
அப்படியென்றால்????
அங்கே ஜோசப்பின் மனநிலை அவனிடம் இல்லை.குறுக்கும் நெடுக்குமாக நடந்தப்படி இருந்தான்.எதையோ எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது தெளிவாக தெரிந்தது.
அவனது உடைமைகள் யாவும் ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டிருந்தது.மேசையின் மீது ஒட்டு மொத்த ஆஸ்தியையும் எட்வர்டின் பெயரில் மாற்றிய பத்திரம் பத்திரமாய் இருந்தது.அவனது தேடலை பூர்த்தியாக்கும் பொருட்டு அவனது கைப்பேசி அலறியது.
"யா..சொல்லு விஜய்!"
"ஸாரி சார்!ஃலைட் டிக்கெட் கேன்சல் ஆயிடுச்சு!"
"வாட்?"
"எஸ் சார்!மும்பைக்கு போற ஃலைட் எல்லாம் பத்து நாளைக்கு கிளைமட்டிக் சேஞ்ஜ் காரணமா ஸ்டாப் பண்ணி வைக்கப்பட்டிருக்கு!"
"ச்சே..டிரையின் டிக்கெட் கூட கிடைக்கலையா?"
"இல்லை சார்!டிரையின் டிக்கெட் எல்லாம் புல் ஆயிடுச்சு!பெட்டர் நான் 10 நாள் கழித்து புக் பண்ணி தரேன் சார்!"
"ஓ.கே.தேங்க்யூ விஜய்!"-இணைப்பைத் துண்டித்தான் அவன்.
எல்லாம் கைக்கூடும் வேளையில் எனை தடுப்பது எது??புரியவில்லை அவனுக்கு!!