22. நிர்பயா - சகி
இப்போதெல்லாம் சங்கரனின் நடவடிக்கைகளால் பெரிதும் குழம்பி இருந்தார் பல்லவி.என்றும் இல்லாமல் அவர் காட்டும் நெருக்கம்!எடுத்துக்கொள்ளும் உரிமை!எல்லாம் அவரை வெகுவாக அச்சம் கொள்ளவே வைத்தது.அது குறித்து அவரிடம் வினவவும் நா எழவில்லை.அவர் எதாவது கேட்கும் சமயத்தில் எல்லாம் உடலெல்லாம் நடுங்கி விடும் பல்லவிக்கு!!
அன்று...
சமையலறையில் ஏதோ தயாரித்துக் கொண்டிருந்தார் பல்லவி!!
"சக்கரையை எங்கே வைத்தாங்க?-அலமாரி முழுதும் தேடினார்.இறுதியில் அது அவருக்கு எட்டாத உயரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
"இந்த மணிக்கு இதே வேலை!எப்போ பார்த்தாலும் உயரத்துல வைத்திடுவான்!"
"மணி...!"
"............."
"மணி!"
"..............."-பதில் இல்லை.வேறு வழியில்லை அவரே தான் எடுத்தாக வேண்டும்!!எவ்வளவோ எம்பி பார்த்தார்.அது முடித்தால் பிடித்துக்காட்டு என்று கைக்கு எட்டாமல் நின்றது!!
5 நிமிடமாய் பொறுமையாக போராடினார் பலனில்லை.
இறுதியாக,அவர் எட்டுவதற்குள் அந்த பாத்திரத்தை எடுத்தது வேறு ஒரு கரம்!!சட்டென அதிர்ந்தவர்,சிந்திக்காமல் திரும்ப,அவருக்கு மிக நெருக்கத்தில் நின்றிருந்தார் சங்கர்.
ஒரு நொடி சிலையாகி போனார் அவர்.அந்த குளிரிலும் வியர்த்து கொட்டியது அவருக்கு!!சில நிமிடங்கள் இருவரும் பார்த்துக்கொள்ள,அந்த பார்வையில் தீக்ஷணம் தாளாமல் சிரம் தாழ்ந்தார் பல்லவி.நகர்ந்து செல்வதற்கும் அங்கு வழியில்லை.சில நொடிகள் கடந்தப்பின் அந்த பாத்திரத்தை அவரிடம் தந்தார் சங்கர்.
சிறு நடுக்கத்தோடு அதை வாங்கினார் பல்லவி.வேறு ஏதும் பேசாமல்,தனது ஹெட்செட்டை சரி செய்தப்படி,குளிர்சாதன பெட்டியிலிருந்து தண்ணீரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர பார்த்தார் அவர்.
"என்னங்க!"-அவரை நகர விடாமல் தடுத்தது பல்லவியின் குரல்.
முழுதும் திரும்பாமல் ஓரக்கண்ணால் அவரை பார்த்தார் சங்கர்.
"இன்றிலிருந்து நவராத்திரி ஆரம்பம்!நம்ம வீட்டில முதல்முறையா கொலு வைக்கப்போறோம்!நீ...நீங்க இன்னிக்கு எங்கேயும் போகாம வீட்டிலே இருக்க முடியுமா?"-நடுங்கியப்படி ஒலித்தது அவர் குரல்.
அவர் முழுதும் திரும்பி தன் மனையாளை பார்த்தார்.
அவர்தம் இரு விழிகளில் அவ்வளவு அச்சம்!!அவரது கேள்விக்கு பதிலேதும் கூறாமல் அங்கிருந்து நகர்ந்தார்,முகத்தில் ஒரு புன்சிரிப்போடு!!!
"இன்னிக்கு நவராத்திரி ஆரம்பம்!"-தன் வீட்டிலிருந்த துர்க்கையின் சிலையின் முன்னே நின்றிருந்தாள் நிர்பயா.
"தாயே ஜெகன்மாதா!எனக்கு சக்தியை கொடுங்க!எந்த சூழ்நிலையிலும் நான் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடணும்!தெரிந்தோ,தெரியாமலோ நான் பண்ண மிகப்பெரிய பாவம் காதல் என்ற அழகான பந்தத்தை அதோட மதிப்பு தெரியாதவனிடம் கொடுத்தது!ஆனா,நான் செய்த புண்ணியங்கள் வீண் போகலை!அவனோட உண்மையான சுயரூபத்தை எனக்கு காட்டிவிட்டிங்க!"
"இனி என்னை கட்டுப்படுத்த உங்களை தவிர எந்த ஒரு சக்தியும் இந்த உலகத்துல இல்லை!நான் எதிர்த்துப் போராடணும்!இனி,எனக்காக எதுவும் இல்லை!என் பாதையை மாற்று திசையில செலுத்த தயாராகிட்டேன்.இனி,எந்த சூழலிலும் மறுபடியும் ஏமாற நான் தயாரா இல்லை!எந்த வைராக்கியம் மரணத்தோட போராடி என்னை மீட்டுக் கொண்டு வந்ததோ!அதே,வைராக்கியம் நான் சாகுற வரைக்கும் என்னை விட்டு விலக கூடாது!அப்படி,என் வைராக்கியம் உடைய வேண்டும்னா அந்த நிமிடமே நான் உயிரை விட்டுவிடணும்!"
"அசுரர்களை அழிக்க,அந்த பரமேஷ்வரனை விலகி இந்த பூமியில அவதரித்தீங்க!இன்னிக்கு என்னோட வேண்டுதலையும் ஏற்றுக்கோங்க!இனி வரும் காலக்கட்டங்களில் நிர்பயாவை உதாசினப்படுத்தினவங்க எல்லோரும் அதுக்காக மனம் ஒடுங்கி போகணும்!எனக்கு அதற்கான தைரியத்தை கொடுங்க!"-ஒருபக்கம் காதலின் பாலம் சேர தயாராக,மறுபக்கம் இணைந்த பாலத்தை தகர்க்க துணிந்தாள் நிர்பயா.
அவள் மனம் ஒரு உறுதி பூண்டது.
வாழ்வை எதிர்க்கும் மனவுறுதி!!அசைக்க இயலாத உறுதி!!
"ஹனி!"
"ஆ..!தாத்தா!"
"என்னாச்சு?எதுக்கு கண் கலங்கி இருக்கு?"
"அது..ஒண்ணுமில்லை தாத்தா!பவர் அதிகமாகி இருக்கும்!போய் செக் பண்ணணும்!"
"நடிக்க கத்துக்கிட்டியா?"
"தாத்தா?"