“தெரியல .. தப்புன்னு ஒதுக்கிட முடியல ..சரின்னு ஒத்து போகவும் முடியல..செல்லமாக வளர்த்த பொண்ணை ஊராரு தப்பா பேசிட கூடாது.. நல்ல நாளா பார்த்து நீங்க பொண்ணு கேட்டு வாங்க..!” கணீர் குரல் மாறாமல் தனது விருப்பத்தை சொல்லியிருந்தார் அவர். சந்தோஷம் அவனுக்கு! வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. தன்னை நம்ப பெற்றோரே தயாராகவில்லை! ஆனால் இந்த பெரிய மனிதரோ தன் மகளையே நம்பிக்கையாய் தருகிறார்.
“அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கள்காதலுக்காக மட்டுமல்ல, அவள் தந்தை என் மீது வைத்த நம்பிக்கைக்காகவும் தான்!” என்று சொல்லிக்கொண்டான் வெற்றி. முழுவதுமாய் உணர்ச்சிவசப்பட்ட குரலில்,
“ விஹாவை நான் கோவிலுக்கு கூட்டிட்டு போகலாமா?” என்று கேட்டான் அவன்.
“சின்ன பொண்ணும் கூட வரட்டும்.. யாராவது கேட்டா உறவுக்கார பையன்னு சொல்லிக்கோங்க!” என்றார் அவர்.
அதன்பின், தன் தங்கையுடனும் வெற்றியுடனும் கோவிலுக்கு கிளம்பினாள் விஹாஷினி.
அதே வேளையில், தனது வீட்டில் தனித்து அமர்ந்திருந்தான் ராகவேந்திரன். அவன் வாழ்க்கையை புரிந்து கொண்ட வயதில் இருந்தே தனித்து தான் வாழ்கிறான். அது அவனுக்கு புதிதோ அசௌகரியமோ இல்லை! சொல்லப்போனால்,அவனுக்கே தனிமை தன்னோடு வளர்ந்த இணை போல.
ஆனால், இப்போதெல்லாம் அவனுக்கு தனிமை கசந்தது! காரணம் அவன் அறிவான் (நாமும் அறிவோம்!)
அர்ப்பணா! அவளே அவனை ஆட்டிப் படைத்தாள். என்னவோ காலம் காலமாய் தன்னுடன் வாழ்ந்தவள் இப்போது தள்ளி நிற்பது போல பாரமான உணர்வது!தனக்கே உரியதை பெறாமல்வாழ்வது போல கவலை. கண்களை மூடி அவளையே யோசிக்க,அவள் மீது அவன் காதலை உணர்ந்த தினம் நினைவில் நின்றது!
அன்றும் இன்று போல் தான் அடைமழை பெய்து கொண்டிருந்தது. தனக்கு வேலை இல்லை,ஓய்வு நாள் என்பதினால் சோபாவில் சொகுசாய் அமர்ந்துகொண்டு தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
ஏதோ ஒரு அலைவரிசையில் அர்ப்பணா, ஒரு கதாநாயகனுடன் ஆடிக் கொண்டிருக்க, ராகவனின் விழிகளோ அவள் மீதே தஞ்சம்!
“ச்ச .. கொடுத்து வெச்சவன்டா ராகவா! எப்போ நினைச்சாலும் உனக்கு பிடிச்ச பெண்ணை நீ பார்க்கலாம்!” என்று சொல்லிக் கொண்டவன், இணைய தளத்தில் அவள் இதுவரை நடித்து வெளியேறிய படங்களை பதிவிறக்கம் செய்துவைத்தான்!
அதில் ஒரு குறும்படமும் அடக்கம். தனக்கு தெரிந்த நண்பன் ஒருவனுக்காக சின்ன கதாப்பத்திரம் ஒன்றி நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாள் அர்ப்பணா.அவளது பால் வடியும் முகமும், நடிப்பில் முதிர்ச்சியில்லா பாவனைகளும், இப்போது இருக்கு அர்ப்பணாவை போல் இல்லாமல் அவளை தனித்து காட்டியது.
அந்த குறும்படத்தில் ஒரு புற்றுநோய் நோயாளியாக நடித்திருந்தாள் அர்ப்பணா. புற்றுநோயினால் ஏற்படும் வலிகளை வெளிபடுத்த அவள் தன்னையே வருத்தி நடித்த காட்சிகள் அவன் மனதை வெகுவாக பாதித்தன. தனது கடைசி நிமிடங்களில் திக்கி திணறி பேசி உயிர் நீப்பது போல அவள் நடித்த காட்சிக்கு பலியானது ராகவேந்திரன் நீர் கோப்பை!
கோபத்தில் தூக்கி போட்டு உடைத்திருந்தான்.
“நோ..!! உனக்கு எதுவும் ஆக கூடாது அபிம்மா..எதுவும் ஆக விட மாட்டேன்.. இது பொய் பொய்!!” என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான். மனமே ஆறவில்லை அவனுக்கு!
அவளை உடனே பார்த்தாக வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கிட, அவளைத் தேடி சென்றான். ஆனால் அவனது நேரம் கூடி வரவில்லை! ஏதோ படக்காட்சிக்காக அவள் பக்கத்து மாநிலத்திற்கு சென்றதாக தகவல் கிடைத்தது.
“எங்கு இருந்தாலும், நீ என்னவள் அபி.. உனக்கு கெட்ட்தாக எதுவுமே நடக்காது ..நடக்க விடமாட்டேன்..”என்று முடிவெடுத்தவன், இறந்துவிட்ட்து போன்ற காட்சிகளில் அவள்நடிக்க கூடாது என்று தடை போட வேண்டும் என்று மனதிலேயே முடிவெடுத்து வைத்திருந்தான்.
அன்றைய நினைவுகள் மேகமென கலைந்திட,நிகழ் காலத்திற்கு வந்தான் ராகவேந்திரன்.. சீக்கிரமே அவளை நேரில் சந்திக்க வேண்டும்!என்று எண்ணிக் கொண்டான்.
கோவில்!
“ என்ன சுபாஷினி..?இன்னைக்கு காலை டிபன் இட்லியா?” .தனக்கும் விஹாஷினிக்கும் நடுவில் நடந்து வந்த அவளின் தங்கையிடம் பேச்சை வளர்த்தான் வெற்றி. அக்காவின் மனம் கவர்ந்தவன் என்பதையும் தாண்டி சுபாஷினிக்கு வெற்றி மீது தனி அன்பும் மரியாதையும் உண்டு. அந்த உணர்வே அவளை அவனுடன் சகஜமாய் பேச வைத்தது.
“ஐயோ மாம்ஸ்.. நீங்க கொடுத்த அதிரடி என்ட்ரியில எங்கம்மா சமைக்கவே மறந்துட்டாங்க..மதியத்துக்கு கூட சமைப்பாங்களா இல்லை, உங்க காதலுக்காக ட்ரீட் கேட்டு வயித்தை நிரப்பிடலாமான்னு நானே பலமான யோசனையில் இருக்கேன்!” என்று இளையவள் சொல்லவும், வெற்றி மலர்ந்து சிரித்தான்.
“ ஹா ஹா .. அப்பறம் ஏன் வாயில ஏதோ மாட்டிக்கிட்ட மாதிரி சிலபேரு பேசவே மாட்டுறாங்க!”