33. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி
ரூபனுக்கு அன்றைய காலை மிக புத்துணர்வூட்டும் விதமாக அமைந்து இருந்தது. அனிக்கா எழுதியிருந்த கடிதத்தை பத்திரமாய் தன் பையில் வைத்துக் கொண்டிருந்தான். ஏற்கெனவே அக்கடிதத்தை பலமுறை படித்தாகி விட்டது. ஆனாலும் பொக்கிஷம் கையில் அகப்பட்ட உணர்வில் பரவசமாய் இருந்தான்.
காலை எழுந்ததும் வழக்கமான தன்னுடைய உடற்பயிற்சிகளைக் கூட மறந்துவிட்டு அனிக்காவைப் பார்க்கச் செல்லவா என மனம் கிடந்து அடித்துக் கொண்டிருந்தது. ஆனால், அதிகாலை 5 மணிக்கு சென்று எழுப்பபோக அவள் வீட்டிலுள்ள எல்லோரும் ரூபன் எதற்காக வந்திருக்கிறானோ? என்று அடித்து புரண்டு ஓடி வருவதற்காகவா? அது மட்டுமா உடனே அவளைப் பார்க்க செல்லவியலாதபடிக்கு பேக்டரியில் முன் தினம் தன்னுடைய நிச்சயத்திற்காக பாதி நாள் விடுப்பு கொடுத்ததனால் தேங்கிய வேலைகளையும் இன்று முடித்தாக வேண்டுமே? இன்று தன் வேலைகளை முடித்து அவளை சந்திக்கச் செல்வதானால் இரவாகிவிடும் எண்ணியவனுக்கு தன்னையறியாமல் பெருமூச்செழுந்தது.
மதியம் சாப்பாட்டு வேளைக் கடந்து வெகு நேரமாகியிருந்தது. பசியில் வேகவேகமாக பேக்டரி பகுதி கடந்து ஆபீஸிற்கான கதவை திறந்து உள்ளே வந்தான் ஜீவன். அங்கு சில நாட்களாக வழக்கமாக காணக் கிடைத்த திவ்யாவின் முகம் அவள் லீவில் இருந்ததால் இன்று மிஸ்ஸிங். அதனால் அவனுக்கும் கூட உள்ளுக்குள் ஏதோ ஒன்று மிஸ் ஆனதான உணர்வு. டெமோன் டெமோன்னு தன்னைத் தானே சொல்லிட்டு இருந்தவள் நினைவில் நின்றவன் என்னையும் காதல் டெமோன் ஆக்கிடுவா போலிருக்கு தனக்குள் எண்ணியவனாக தலையை லேசாக உதறி, தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் மற்ற ஸ்டாப்களை கவனியாதவன் போல காட்டியபடி சம நிலைக்கு வந்தான்.
கேபினுக்குள் நுழைந்தவன் பசியின் அவசரத்தில் டிபன் பாக்ஸ்களை திறந்து தனக்குத்தானே பரிமாறிக் கொண்டான்.வெளியில் வேலையாகச் சென்றிருந்த ரூபனைக் காணவில்லையே என யோசித்தவனாய் அவனுக்கு டயல் செய்தவன் மொபைலை ஸ்பீக்கரில் போட்டவாறு .ஸ்பூன் உதவியால் சாப்பிடத்தொடங்கினான்.
போன் காலோ ரிங் சென்றுக் கொண்டிருந்ததே தவிர அட்டென்ட் செய்யப் படவில்லை........தொடர்ந்து ரிங்க் சென்று தானாகவே கட் ஆகவும் அதைக் கண்டுக் கொள்ளாமல் அவன் சாப்பாட்டில் மூழ்கி இருந்தான். சாப்பிட்டு முடித்து டிபன்களை அடுக்கிக் கொண்டிருக்கும் தருணம் போன் வரவும் ஸ்பீக்கரிலேயே அட்டென்ட் செய்தான்.
டேய் ஜீவா……..
யாரென்றே பெயர் பாராமல் ,கால் அட்டென்ட் செய்திருக்க அனிக்காவின் குரல் கேட்டு முகம் மலர்ந்தான். உடனே பவ்யமாக
சொல்லுங்க அண்ணியாரே என்றான் …… குரலில் குறும்பு ததும்பி வழிந்தது,.
டேய் மரியாதையா பேர் சொல்லி கூப்பிடு …. முதல்ல போனை கையில எடு இதென்ன ஸ்பீக்கர்ல போட்டிருக்க ………
கண்டு பிடிச்சிட்டியா என் சயின்டிஸ்டு………. சாப்பிடுற நேரத்தில போன் போட்டா அப்படித்தான். இங்க கேபின்ல நான் மட்டும்தான் இருக்கேன்….. உங்க வீட்டுக்காரர் இல்லை, நீ சும்மா ஸ்பீக்கர்லயே பேசு……
உனக்கு ரொம்ப கொழுப்பு கூடிப் போச்சு...முன்னைக்கு இப்ப இன்னும் ரொம்பவே வாய் பேசற…….பொறு பொறு உனக்கு நல்லதா பனிஷ்மென்ட் யோசிச்சு வைக்கிறேன்.
யோசி யோசி சரி என்ன திடீர்னு பெரியவங்க நீங்கல்லாம் இந்த எளியவனுக்கு போன் போட்டிருக்கீங்க…….. இந்த அடியேனை இன்று அழைத்ததன் காரணம் என்னவோ? நக்கலாக பேசினாலும் அதில் அனிக்கா தன்னுடைய பிரச்சினைகளின் போது தன்னை தொடர்பு கொள்ளாத கோபம் இருந்தது.
அனிக்கா நண்பனின் கோபத்தில் சில நிமிடம் தயங்கினாலும் தொடர்ந்தாள்.
ஹேய் நேத்திக்கு பங்ஷன்ல எடுத்த பிக்ஸ் எல்லாம் அண்ணாவோட கேமரால பார்த்துட்டு இருந்தேனா அதில ஒரு கெமிஸ்ட்ரி பார்க்க கிடைச்சது…
கெமிஸ்ட்ரியா அது உனக்கு பிடிக்காத பாடமாச்சே அதெல்லாம் உனக்கெப்படி….எனச் சொல்லிக் கொண்டிருந்தவன் அனிக்கா எதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என கொஞ்சம் புரிபடவும் சட்டென பேச்சை நிறுத்தினான்.
ஹேய் பிராடு …….திவ்யாக்கும் உனக்கும் இடையில என்ன ஓடிட்டு இருக்கு? சீக்கிரம் சொல்லு பார்ப்போம்.
சுத்தமாக அவள் கூற்றை மறுத்த ஜீவன். அதெல்லாம் ஒண்னுமில்ல……… நீயா இப்படில்லாம் பேசி உன் பிரண்ட் பேரைக் கெடுத்து வைக்காத.
ஹேய் சும்மா சொல்லாத……...எனக்கு தெரியும் இது ஒன் சைட் இல்ல டூ சைட் லவ் தானே……..என அவள் சீண்டிக் கொண்டிருக்கவும் அதே நேரம் வெளியிலிருந்து வந்த ரூபன் கேபின் கதவை திறக்கவும் அனிக்காவின் குரல் கேட்டு இன்ப அதிர்ச்சியில் மிதந்தான்.
போன் ஸ்பீக்கரிலேயே இருக்கட்டும் என்று தம்பியிடம் சைகையில் ரூபன் சொல்ல, ஜீவனும்………….. தன்னிடம் வலிய வந்து இந்தா என் கழுத்து என்று நிற்கும் ஆட்டை பலி குடுக்காமல் விட முடியுமா? என எண்ணியவனாய் விஷமமாய் சிரித்தான்.
தம்பியின் விஷம சிரிப்பை புரிந்துக் கொள்ளாதவன் தனக்கு உணவை பரிமாறியவாறே அனிக்காவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.