குழந்தையிடம் கொஞ்சிக் கொண்டு இருப்பது போல தன்னுடைய ரோஜாச் செடியிடம் பேசி, அடுத்த நாளைக்காக பூ ஒன்றை கேட்டுக் கொண்டிருந்தவள் மீது அளவில்லாமல் ஆசை கூடியது. இவன் பின்புறம் வந்து நிற்பதை அவள் இன்னும் உணரவில்லை. ரூபன் அளவிற்கு அனிக்காவிற்கு உள்ளுணர்வுகள் சமிக்ஜை கொடுப்பதில்லையோ? என்னவோ?
அனிக்காவின் இடது கை ஜன்னல் திட்டில் பதிந்திருக்க அவள் விரலில் அவன் முன் தினம் அணிவித்திருந்த அழகான அந்த நிச்சயதார்த்த மோதிரத்தில் ஒற்றை வைரம் ஒய்யாரமாய் அமர்ந்து கண்ணைப் பறித்ததோடு நில்லாமல் அவளுக்கும் அவனுக்குமான உறவை கட்டியம் கூற ரூபன் அக்கரத்தை பின் நின்றவனாக பற்றினான். முழுக் கையுமே அவன் வசத்திலிருக்க தனக்கு பிடித்தது அந்த மோதிரம் தரித்த விரல் மட்டுமே என்பது போல மற்றெல்லா விரல்களும் கோபிக்கும் விதமாக அவள் விரலை ஆசையாய் வருடியவாறு
“எதுக்கு இந்த ரோஜாச் செடியை பயமுறுத்திட்டு இருக்க, உனக்கு எந்த கலர் ரோஸ் வேனும்னு சொல்லு நான் வாங்கிட்டு வரேன்.” என்றான்.
அனிக்கா அவன் வருகையை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் அருகாமையும், தொடுகையும் அவளுக்கு வெகுவாக பட படப்பு ஏற்படுத்தியிருக்க என்னச் செய்வதென்று திகைத்தவள், சட்டென்று திரும்பி அவனை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.
ரூபன் கரங்களும் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டன. தற்போது எல்லாம் சுபமே என்றபோதும் மனதிற்குள் இருந்த தவிப்பு வெளிப்பட்டதோ என்னவோ? யாரும் எங்களை பிரித்து விடாதீர்களேன்? என்பது போன்ற உணர்வில் இருந்தனர் இருவரும். தனக்குள்ளே புதைந்துக் கொண்டிருப்பவளின் முகம் காணவியலாது அவள் உச்சியில் தன் முதல் முத்தம் பதித்தான் ரூபன், அனிக்காவிற்கு அந்த முத்தம் தலை முதல் கால் வரை தித்திப்பாக உள்ளூரப் பாய்ந்தது.
அந்நேரம் தன்னை அணைத்துக் கொண்டு இருப்பவளைக் குறித்து மகிழ முடியாமல் தன்னையறியாமல் ரூபனுக்கு தன்னுடையவளை தான் முதலில் அணைத்ததும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த அத்தனையும் நினைவிற்கு வந்து நெருட…….
ஸாரிடா உன்னையை அன்னிக்கு அடிச்சிட்டேன் என்று புலம்பலானான்.
அவனின் வார்த்தைகளை செவி மடுக்கும் போதே ..... தன் தலை மேல் சொட்டு சொட்டாக விழுவது என்ன? திகைத்து நிமிர்ந்தாள் அனிக்கா. அவள் தலையிலிருந்து காதோரமாய் வழிந்திருந்தது அவனது கண்ணீர் துளி , துடித்துப் போனாள் அவள். அவன் முகத்தை ஏந்திக் கொண்டாள். இப்போது அவள் கண்களிலும் கார்காலம்.
மன அழுத்தம் அத்தனையும் கண்ணின் நீராய் வெளியேற, இருவருமே ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்திக் கொண்டனர். அவர்களுக்குள்ளாக பேசவேண்டியவை நிறைய இருந்தன. அருகருகே அமர்ந்து முதல் முறை காதல் பேசுபவர்களை ஏன் தொல்லைச் செய்ய வேண்டும் என்று அந்த அறையை ஒட்டியிருந்த அனிக்காவின் தோழியான ரோஜாச் செடியும் வெளிப்பக்கமாக தன் கவனத்தை பதித்தது.
இனிமையாய் கழிந்த அந்நேரத்தில் கண்ணீர் துளிகளும், கலக்கங்களும் மாயமாகி, ரூபனின் விலகலுக்கு காரணம் அவன் குற்றவுணர்வே அன்றி அவள் மேல் அவனுக்கு கோபம் எதுவும் இல்லை என்பதை அவன் உணர்த்த, அவனது கோபமும் அவளை அறைந்தது தொடர்ந்து நிகழ்ந்த அனைத்தும் அன்றைய பொல்லாத சூழ்நிலையின் பிரதிபலிப்பு அவளுக்கு அவன் மேல் வருத்தம் எதுவுமில்லை என்பதை அவள் உணர்த்த, மொத்தத்தில் அனைத்து கெட்டதிலும் நன்மையாக இருவரும் இணைந்திருப்பதை மட்டுமே தற்போது எண்ணி அவர்கள் மகிழ்வாய் உணர்ந்தனர்.
இனிமையான புன்முறுவலும் கலகல பேச்சும் அங்கு நீண்டிருந்தன. பேச்சின் ஊடாக அவ்வப்போது முத்த பரிமாற்றங்கள் நிகழ இன்னும் அனிக்காவை தன் கைப்பிடியினின்று விடாமலேயே வைத்திருந்தான் ரூபன்.
பேசிக் கொண்டிருந்தவன் சட்டென்று எழ அதற்க்குள்ளாக செல்கிறானா என ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தன அனிக்காவின் விழிகள். எழுந்தவனோ அவளை தன் கரம் கொடுத்து எழுப்பி நிறுத்தினான்.
ஒரு நிமிடம் என்று அனுமதி கேட்டவன் வாயிலின் வெளிப்பக்கம் சென்று தான் கொண்டு வந்திருந்த மலர்க் கொத்தை கையில் ஏந்தி வந்தான். சொல்லி வைத்தார்போல அனிக்காவின் சேலையின் நிறத்தை ஒட்டி அந்த ரோஜாக்கள் இருந்தன.
அம்மலர்களின் நிறமும் அழகும் தன்னைக் கொள்ளைக் கொண்டதை விட அதனைக் கொண்டு வந்தவனின் அன்பில் உள்ளம் மொத்தமாய் கொள்ளை போனது.
அவள் எதிரில் வந்து ஒற்றைக் காலால் மண்டியிட்டவன் “இது மலர்க் கொத்து அல்ல, என் இதயம்” என்றவனாய் தன்னுடையவளிடம் நீட்டினான்.
ஆசையாய் அதனை வாங்கிக் கொண்டு தன்னோடு அணைத்தவள் உருகி நிற்க, எழுந்தவன் அவளை ஒட்டி நின்று காதின் அருகேச் சென்று
என் செல்ல அனி நல்ல பொண்ணில்ல, நம்ம மேரேஜ் அன்னிக்கு சர்ச்ல ஃபாதர் ரூபனை கட்டிக்க சம்மதமான்னு கேட்கிறப்போ சம்மதம்னு சொல்லிடுவியாம்” என்றான்.
அதைக் கேட்டவள் ஜீவனின் வேலைதானா இதெல்லாம் என்றெண்னியவளாய் ஒரு நொடி திகைத்து, உடனேயே கலகலத்துச் சிரிக்கலானாள். அவள் தலையை செல்லமாய் முட்டியவனோ அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தங்கள் பதித்தான்.
தொடரும்
{kunena_discuss:970}