32. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி
வழக்கத்தின் படி நிச்சயதார்த்தம் அன்று பெண்ணை அலங்கரிப்பதற்கு தேவையான அனைத்தையும் மாப்பிள்ளை வீட்டினர் பெண்ணின் வீட்டிற்கு கொண்டுச் சென்று அலங்கரித்து மேடைக்கு கூட்டி வரவேண்டும். அதற்காவது அனிக்காவை அன்று தங்கள் வீட்டிற்கு கூட்டிச் சென்று வழமையை நிறைவேற்றலாம் என்று அனிக்கா வீட்டினர் கேட்க ரூபன் தன்னுடைய பிடிவாதத்தினின்று பின்வாங்கவே இல்லை. ஆனாலும், பிரச்சினைகள் வேண்டாம் என்று சாராவும், பிரபாவும் அதைப் பெரிது படுத்தாமல் செய்ய வேண்டிய முறைமைகளை நடத்திக் கொண்டிருக்க இதன் காரணமாக கிறிஸ் இன்னும் கடும் கோபத்திலேயே இருந்தான். ஆனால், தாமஸ் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று அவரது முகத்தைப் பார்த்து யாராலும் கணிக்க முடியவில்லை.
முன் தினமே கணவர், மகனோடு வந்து விட்டிருந்த ஜாக்குலின் நிகழ்ந்தவை அறிந்துக் கொண்டவளாக முடிந்தவரை பிரச்சினைகள் எதுவும் நிகழாமல் இருதரப்பிலும் பேசி சமாதானமாக அனைத்தையும் கொண்டுச் சென்றுக் கொண்டிருந்தாள், ராஜ் வெளி நாட்டிலிருக்க அவசர கதியில் நிகழ்ந்த அனைத்து ஏற்பாடுகளிலும் திணறிக் கொண்டிருந்த ரூபனுக்கு கடைசி நேரமே வருகை தந்திருந்தாலும் அக்கா, அத்தான் வருகை மிக தெம்பளித்தது.
அனிக்கா ஏற்கெனவே ஹாலிற்கு அழைத்து வரப் பட்டிருக்க, தானே முன் நின்று அத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்த ரூபன் தான் அதற்கும் முன்னதாகவே ஹாலிற்கு சென்று விட்டிருந்தான். ஏதோ ஏற்பாடுகளை குறித்து பேசிக் கொண்டு ஹாலின் பின் புறம் சென்றிருக்கும் வேளையில் அனிக்காவை ஹாலில் அழைத்து வந்திருக்க அவளை அவன் அப்போது பார்த்திருக்கவில்லை.
அதன் பின்னர் ஒவ்வொன்றாக நிகழ்வுகள் ஆரம்பிக்க தீபனும் , ஜீவனும் அவனை உட்காரச் சொல்லிவிட்டு மீதி பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர். சற்று முன்னர் தன்னிடம் வந்து தனியாக பேச வேண்டுமென்று அழைத்துச் சென்று பேசிய தாமஸ் மாமா சொன்னது குறித்து வெகுவாக அதிர்ந்து போயிருந்தான் ரூபன்.
அவரை தாம் மிக குறைவாக மதிப்பிட்டு விட்டோமோ என்று முதன்முறையாக எண்ணிக் கொண்டான். தன் மகனுக்கும் தெரியாமல் இத்தனைக் காரியங்கள் முடித்திருக்கின்றாரா? என வியந்தவன், அவர் சொன்னவிதமே தான் செய்ய வேண்டிய நிகழ்வுகளை தன் நிச்சயத்திற்கு பின்னர் செய்ய எண்ணிக் கொண்டான்.
கேமராமேன் ஹாலிற்கு வர பின் தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டினர் வரிசையாக தாம்பாளங்களில் பெண்ணுக்கான பட்டுச் சேலை, பூச்சரம், வித விதமான பழங்கள், மேக் அப் சாதனங்கள் என ஒருவர் பின் ஒருவராக நிற்க கேமரா அனைவரையும் நின்று நிறுத்தி அழகாய் உள்வாங்கிற்று. அங்கிருந்த பெண்கள் கூட்டத்தில் சாண் பிள்ளையென்றாலும் ஆண் பிள்ளையென்று கோட் சூட்டில் ராபினும் தன் கையில் தன் சித்திக்காக கனம் குறைந்த குட்டி தாம்பாளம் ஒன்றை கைகளிரண்டிலும் ஏந்திக் கொண்டு ப்ரீதா முன்பாக நின்று பெருமையாக சுற்றும் முற்றும் பார்ப்பதுவும் , அம்மாவின் சொல்லுக்கேற்ப மெதுவாக முன்செல்லுவதுமாக நின்றான். கூடவே ஹனி பாப்பாவும் அவனோடு நின்றவளாய் அவனைப் போலவே குட்டியான பொருளொன்றை கையில் வைத்திருந்தாள். ஜாக்குலின் மகன் பிரின்ஸ் தன்னை பெரியவனாக பாவித்தவனாக அந்த பெண்கள் குழுவில் சேராமல் தந்தையோடு நின்றுக் கொண்டான்.
ரூபனின் கவனம் அங்கு ஹாலில் இருந்த மற்றவர்களைப் போலவே அழகாய் அணிவகுத்து நிற்கும் அவர்கள் பால் திரும்ப, மனதை அழுத்திக் கொண்டிருந்த சிந்தனைகள் மாறி மகிழ்ச்சியான மன நிலைக்கு மாறினான். மற்றப் பிரச்சினைகள் எத்தனை இருந்தாலென்ன? இன்று அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். அவன் எத்தனையோ வருடங்களாக காத்திருந்தது இதற்காகத் தானே?!. தன்னுடைய மனப் போராட்டங்கள், தவிப்பிற்கு இனி வேலையில்லை. அவன் மனம் கவர்ந்தவள் இனி அவனுடையவள். ஏற்கெனவே ஜம்மென்று ஃபார்மலில் அசத்தலாக நின்றவன் முகம் மகிழ்ச்சியிலும் , நிறைவிலும் இன்னுமாக ஒளிர்ந்தது.
அவன் உறவினர்களும், கல்லூரி, தொழில் முறை நண்பர்களும் வருவதும், அவனோடு அளவளாவதுமாக இருந்தனர். ஜீவனோ முற்றிலுமாக விருந்தினர் கவனிப்பில் மூழ்கி போய் விட்டான். தன்னோடு கூட வந்த திவ்யாவை அனிக்காவோடு அனுப்பி வைத்து விட்டு அதன் பின் அவளை மறந்தே போனான்.
சில்ஜீ ஃப்ரெண்ட்ஸ்காகவே தனியாக இடம் ஏற்பாடு செய்து அவர்களை ஸ்பெஷலாக கவனித்துக் கொண்டான். இன்றைய நாயகனான அண்ணனை விட தனக்குத்தான் ஃபேன்ஸ் அதிகம் என அறிந்ததிலிருந்து அங்கேயே டேரா போட்டு விட்டு ஹி ஹி என அவன் எல்லோருடனும் பேசியதில், தூரத்திலிருந்து அவளைக் கவனித்துக் கொண்டிருந்த திவ்யாவிற்கு காரம் சாப்பிடாமலே கோபத்தில் முகம் செவ்வென சிவந்தது.
சித்திக்கு தான் கொண்டுச் சென்ற கிஃப்ட் குறித்து அப்பாவிடம் ஒப்பிக்க அவசரமாய் வந்திருந்தான் ராபின், பின்னோடாக ஹனியும் வந்திருந்தாள். அனிக்காவை அலங்கரிக்கும் நேரம் எதற்கு வீணாக சின்ன பிள்ளைகள் என்று பெண்கள் எல்லா சின்னவர்களையும் மணப்பெண் அறையினின்று வெளியே அனுப்பி விட்டிருந்தார்கள்.
அவ்வளவு நேரம் ஒருவர் மாற்றி ஒருவர் ரூபனிடம் வந்து பேசிக் கொண்டிருக்க நின்று நின்று கால்கள் வலித்ததால் சற்று அமர்ந்தான் ரூபன். சற்று நேரத்தில் அவனருகே வந்து அமர்ந்தனர் சின்னவர்கள் இருவரும்.
பெரியவர்கள் போல எல்லாம் தமக்கு தெரியும் எனும் பாவனையில் ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தனர் இருவரும்...அப்போது