தனதறையில் மௌனமாய் மெத்தையில் சாய்ந்திருந்தவனின் வாழ்வே சூன்யமாய் உருமாறியது போல் ஒரு உணர்வு தோன்றியது!மனம் முழுதும் வலிகளுடன் இருந்தவனின் கண்கள் கண்ணீரை கோர்த்தன.
"சிவா!"-மீண்டும் அவள் குரல் ஒலிக்க,திரும்பினான்.பாவமாய் கதவருகே நின்றிருந்தாள் கீதா.
"வொர்க் அதிகமா?காப்பி போட்டு எடுத்து வரவா?"
"வேணாம் கீதா!எனக்கு ஒண்ணுமில்லை!அப்பறம்,ஒரு விஷயம்!"
"என்ன?"
"உனக்கு சர்ப்ரைஸ் தரேன்னு சொல்லி இருந்தேன்ல!"-என்று எழுந்தவன்,தனது மேசை அலமாரியிலிருந்து சில காகிதங்களை எடுத்தான்.
"நீ ஊருக்கு போக டிக்கெட்ஸ்!"-என்று விமான பயணச்சீட்டை மேசை மீது வைக்க,திடுக்கிட்டாள் அவள்.
"உனக்கு நான் கொடுக்கிறேன்னு ஃப்ராமிஸ் பண்ண டிவோர்ஸ்!"-என்றவன் சில காகிதங்களின் அடியில் கையெழுத்திட்டான்.
"ஸாரி!கொஞ்சம் லேட் ஆயிடுச்சு!இனி,என்னால உன் லைப்ல எந்தத் தொல்லையும் இருக்காது!நான் எல்லாத்தையும் காலையில அம்மாக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்.உன் மேலே எந்தப் பழியும் வராது!ஹேப்பி...?"-புன்னகை மாறாமல் அவன் கேட்க,அவனை கவனித்துக் கொண்டிருந்தவளின் ஒட்டுமொத்த கனவுகளும் சிதைந்து உடைந்தன.கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்து கன்னத்தின் வழி நிலத்தை நனைத்தது.
"நான் போய் ஃப்ரஷ் ஆயிட்டு வரேன்!சைன் பண்ணிடு!"-என்றவன் டவலை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தான்.சிலையாக மேசையை நெருங்கியவள்,நடுக்கத்துடன்,அந்தப் பத்திரங்களை கையில் எடுத்தாள்.அத்தனை நாட்களாய் அவன் அனுபவித்த ஒட்டுமொத்த வேதனையையும் ஒரே நொடியில் அவளுக்கு அளித்து அவளை தண்டித்தது காலம்!!கர்மம் கண்ணாடியை போன்றதல்லவா??இயலாமை,வெறுப்பு,துக்கம் என அனைத்து வலி ஈனும் உணர்வுகளும் ஒன்றாய் அவளை தாக்க செயலிழந்து போனாள் கீதா.குளியலறையில் இருந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து வெளி வந்தான் சிவா.தரையை வெறித்தப்படி மெத்தையில் அமர்ந்திருந்தாள் அவள்.
"சைன் பண்ணிட்டியா?கவலைப்படாதே..சீக்கிரமா டிவோர்ஸ்..."-என்றப்படி அதை எடுத்து பார்த்தவனின் வார்த்தைகள் தடைப்பட்டன.அது மொத்தமாய் அடிக்கப்பட்டிருந்தது.ஒவ்வொரு பக்கத்திலும் மேலிருந்து கீழாய் அடித்திருந்தாள் அவள்.
"கீதா என்ன இதெல்லாம்?"-அதற்கு மேலும் பொறுமை இல்லாதவள்,மிகுந்த கோபத்துடன் எழுந்து அவனது சட்டையைப் பற்றினாள்.
"நீ என்ன நினைச்சிட்டு இருக்க?ஏன் எனக்கு டிவோர்ஸ் அப்ளை பண்ண தெரியாதா?இத்தனை நாளா இதுக்காக தான் காத்திருந்தேனா?"-என்று கொதித்துவிட்டாள்.
"புரிந்துக்க மாட்ட அப்படிதானே!பிராமிஸாம் பெரிய பிராமிஸ்,போய் குப்பையில போடு உன் பிராமிஸை!யார் கேட்டா இதை?பெரிய ஹீரோன்னு நினைப்பு!உன்னால உன் சொந்த மனைவியோட மனசுல என்ன இருக்குன்னு கூட தெரிந்துக்க முடியலை."-அவன் ஆடிப்போனான்.
"எவ்வளவு கனவுகளோட இருந்தேன் தெரியுமா?அத்தனையும் கொன்னுட்டியே!இத்தனை நாளா என் காதலை உன்கிட்ட சொல்ல முடியாம,சொல்லாம விடவும் முடியாம எவ்வளவு அவஸ்தை பட்டேன்னு தெரியுமா உனக்கு?கேவலம் ஒரு பேப்பர்ல என் காதலை கொன்னுட்டல்ல!"-கண்ணீர் வடித்தாள் அவள்.
"உனக்கு என்ன?நான் உன்னைவிட்டு போகணும் அவ்வளவு தானே!போறேன்!நாளைக்கே போறேன்!ஆனா,என்னால உனக்கு டிவோர்ஸ் கொடுக்க முடியாது!இந்த உலகத்துல நான் எங்கே,எந்த மூலையில வாழ்ந்தாலும் உன் மனைவிங்கிற அதிகாரத்தோட தான் வாழ்வேன்!உன்னால முடிந்ததைப் பார்த்துக்கோ!"-என்றவள் விருட்டென்று அங்கிருந்து வெளியேறினாள்.அவனால் சற்றும் அவள் தந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவர இயலவில்லை.இப்போது அவள் என்ன கூறினாள்??என்ற கேள்வி அவன் மனதை திகைக்க வைத்துக் கொண்டிருந்தது.உண்மையை உணர அவனுக்கு சில நொடிகள்,ஏன் நிமிடங்கள் கூட பிடித்தன.அப்படியே சிலையாகி இருந்தவனின் இதழோரம் குறுநகை பூத்தது!!கரம் நழுவிய பொக்கிஷம் தானே வந்து தன்னுடன் சேர்ந்ததாய் ஓர் எண்ணம்!!
"கீதா!"-அவளை தேடி ஓடினான் சிவா.அவளோ இல்லம் முழுதும் எங்குமில்லை.இறுதியாக மாடிக்கு சென்றான்.வாழ்வே கசந்துப்போக,தன்னை தானே கண்ணீரில் கரைத்துக் கொண்டிருந்தாள் கீதா.அவன் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்க,மனதில் ஏதோ உறுத்த,திரும்பினாள் அவள்.
"அங்கேயே நில்லு!பக்கத்துல வராதே!"-என்று அவனை தடுத்தாள் அவள்.
"ஏ..நான் சொல்றதை கொஞ்சம்...!"
"எதையும் சொல்ல வேணாம்.எல்லாம் முடிந்துப் போச்சு!இனி எனக்கும்,உனக்கும் எந்த உறவுமில்லை!"-முடிவாக கூறினாள் அவள்.சிவா கூர்மையாக அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.