(Reading time: 11 - 22 minutes)

06. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

இதயத்தின்  லப் டப் ஓசை அதன் நான்கு வால்வுகள் மூடுவதினால் எழும் ஒலியாகும்

ரண்டு வருடங்களுக்கு முன்

“என் செல்ல அத்தை இல்ல என் பட்டு அத்தை இல்ல..ப்ளீஸ் ப்ளீஸ் மாமா கிட்ட நீங்க தான் எப்படியாவது சொல்லி சம்மதிக்க வைக்கணும்” லக்ஷ்மியை அணைத்துக் கொஞ்சியபடியே என்றும் இல்லாத திருநாளாய் குழைந்து  கொண்டிருந்தாள்  வர்ஷினி.

“அம்மாடி ஆளை விடு. இந்த பூனைக்கு மணி கட்டுற வேலை எல்லாம் என்னால ஆகாது” லக்ஷ்மி வர்ஷினியை மெல்ல விலக்கியபடியே தனது சமையல் வேலையைத்  தொடர்ந்தார்.

“என் மாமாவ பூனைன்னா சொல்றீங்க. என் மாமா புலியாக்கும். தெரிஞ்சுக்கோங்க”

“அப்போ நீயே போய் உன் புலி கிட்ட ஒகே வாங்கு”

“அத்தை” சிணுங்கியவள் இனி அத்தையிடம் சொல்லி பயனில்லை என்றதும் அடுத்த இலக்காய் வருணை அணுகினாள்.

அவள் ஏதும் கூறும் முன் தானே முந்திக் கொண்டான் வருண்.

“நீ என்னோட ஒரே ஒரு அத்தை பொண்ணு என் செல்ல தங்கச்சி என் பட்டு என் சிட்டு எல்லாமே. பட் என்னால அப்பாகிட்ட வாங்கி கட்டிக்க முடியாது அம்மு” தலைக்கு மேல இரு கைகளையும் தூக்கி குவித்து பெரிய கும்பிடு போட்டான் வருண்.

“நீ சுத்த வேஸ்ட் அண்ணா. ஹ்ம்ம் அன்னிக்கு நீ உருகி மருகி பீலிங்க்ஸ கரைய விட்டுட்டு இருந்த போதே நான் வரம் கேட்டிருக்கணும். மிஸ் பண்ணிட்டேன். அண்ணனுக்கு லவ் செட் பண்ணி குடுப்பது ஒரு தங்கையின் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு அன்னிக்கு வீணா டயலாக் விட்டுட்டேனேன்னு  இப்போ ஃபீல் பண்றேன்”

“அம்முகுட்டி நான் எருமை மாடு அவதாரம் எடுத்து ரொம்ப நேரமாச்சு. நீ கவனிக்கலையா  ஹஹஹ்ஹ்ஹா” என்று சிரித்தான் வருண்.

“ஹ்ம்ம்கும் எருமைன்னு சொல்லிட்டு பிசாசாட்டம் சிரிக்கிறதை பாரு. யாரும் எனக்கு ஒன்னும் ஹெல்ப் செய்ய வேண்டாம். நானே பார்த்துக்குவேன்”

முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சோபாவில் ஓர் ஓரமாய் சென்று அமர்ந்து கொண்டாள்.

தனது செல்ல தங்கையின் முகம் வாடிப்போயிருப்பதை தாங்கிக் கொள்வானா என்ன. உடனேயே அவள் அருகில் சென்றமர்ந்து அவளின் தலையை வருடிக் கொடுத்தான்.

“அம்மு வேறே எந்த விஷயத்திலாவது அண்ணா உனக்கு ஹெல்ப் செய்யாம இருந்திருக்கேனா சொல்லு ஹ்ம்ம். அப்பா கண்டிப்பா ஒத்துக்கவே மாட்டார்ன்னு நல்லா தெரிஞ்ச பிறகும் எப்படி அவர்கிட்ட போய் ஆர்கியு செய்றது. அவர் பக்கம் சரியான காரணமும் விளக்கமும் இருக்கும் பட்சத்தில்”

மிக மிக பொறுமையாக வர்ஷினிக்கு எடுத்துரைத்தான்.

“அப்போ என்னோட ட்ரீம்ஸ் நான் அசீவ் செய்யவே முடியாதா. நான் தான் இப்போ காலேஜ் முடிச்சு பிக் கேர்ள் ஆகிட்டேன்ல”

“நீ காலேஜ் தானே முடிச்சிருக்க. நாளைக்கு பின்ன வயசாகி முடி எல்லாம் நரைத்து போய் பாட்டி ஆகிட்டாலும் எங்களுக்கு குழந்தை தான்”

“என்ன வருண் அம்முகிட்ட என்ன சொல்லிக்கிட்டு இருக்க” அலுவலகத்தில் இருந்து அப்போது தான் வந்த ராமச்சந்திரனின் குரல் ஒலிக்கவும் வருணின் கரத்தை விலக்கியபடியே அவரிடம்  ஓடிச் சென்றாள் வர்ஷினி.

“என்ன மாமா வேலை ரொம்ப ஜாஸ்தியா. டயர்டா தெரியறீங்க” கூறியபடியே அவரது அலுவலக பையை வாங்கி அருகில் இருந்த மேஜை மீது வைத்தாள்.

கணவரின் குரல் கேட்டு சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்த லக்ஷ்மி காபி எடுத்துவர சென்றார்.

“அத்தை காபி டிபன் இன்னுமா ரெடியாகலை” சமயலறையில் பிரவேசம் செய்தவள் சீக்கிரம் சீக்கிரம் என்று அவசரப்படுத்தி தானே ட்ரேயில் அடுக்கி எடுத்துப் போனாள்.

“மாமா இன்னும் கொஞ்சம் அவியல் வச்சுக்கோங்க” பார்த்து பார்த்து மருமகள் பரிமாறவும் ராமச்சந்திரனோ மகிழ்ந்து போனார்.

“நீ ஏன்டா கஷ்டப்படுற. வா வந்து உக்காரு” அவள் கைகளைப் பற்றி அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தவர் தனது தட்டில் இருந்த அடையை அவளுக்கு ஊட்டி விடவும் செய்தார்.

இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மியும் வருணும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

“உன் அப்பா ஆனாலும் ரொம்ப அப்பாவி தான்டா வருண். இப்படியா வெள்ளை உருண்டை எல்லாம் ரசகுல்லான்னு நம்புவாரு”

“ஹஹஹா வெள்ளை உருண்டை ரசகுல்லா ஹஹ்ஹஹா அம்மா சூப்பர் போங்க”

“உன் அப்பா அம்மு சொல்ற எல்லாத்துக்கும் தலை ஆட்டுவார் தான். ஆனா இதுக்கு மட்டும் சம்மதிக்கவே மாட்டார்”

லக்ஷ்மி வெகு ஆணித்தரமாக சொல்லவும் வருண் இன்னும் பலமாக சிரித்தான்.

“அம்மா உங்களுக்கு உங்க ஹஸ்பன்ட் பத்தி தெரிஞ்ச அளவு இந்த குரங்கு குட்டிய பத்தி தெரியல. இந்த கேடி ராக்கம்மா ஆஸ்கார் ரேஞ்சுக்கு எப்படி எல்லாம் அள்ளி விடுவான்னு வெயிட் அண்ட் சீ”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.