08. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்
அவளை நினைத்து அவன் துடித்திட, அங்கே அவள் நிலைமையோ வேறு விதமாய் இருந்தது…
தன் கழுத்திலிருந்த செயினை விரல்களினால் பிடித்து பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு தன்னை மீறி துக்கம் தொண்டை அடைக்க, மனக்கண்ணில் த்ன்னவன் முகம் வந்து போக, அதிலிருந்து வெளிவராமல் தன்னை அவனது நினைவுகளிலேயே மூழ்கடித்துக்கொண்டவள், மெல்ல தன் வயிற்றினைத் தொட்டுப் பார்த்திட, அழுகை பீறிட்டு வெளிவந்தது அவளையும் அறியாமல்…
“என்னை மறந்துட்டீங்கல்ல….”
அவளது உதடுகள் தெளிவாக உச்சரித்து முடித்திட, அவளைத் தேடி வந்த இளவரசியின் காதுகளில் தெளிவாக விழுந்தன அவ்வார்த்தைகள்…
துக்கம் தொண்டையை அடைக்க, மெல்ல தங்கையின் அருகே வர எண்ணினாள்….
தன்னை சரி செய்து கொண்டு, குரலில் உற்சாகத்தை வரவழைத்தபடி,
“சந்தா… அப்பா வந்திட்டாங்க…” என கூற, சத்தம் கேட்டு கண்களை துடைத்தபடி சுவரைப் பார்த்து திரும்பினாள் சந்தா..
“நீ போக்கா… நான் வரேன்…”
சந்தா அமைதியாக கூற, இளவரசி அவளது தோளைப் பிடித்து தன் புறம் திருப்பினாள்….
தங்கையின் அழுத்தமான முகத்தினைப் பார்த்த்வளுக்கும் மனம் நோக,
“நடந்ததையே இன்னும் நினைச்சிட்டிருக்காத சந்தா…” என்றாள் தன்மையாக…
“வேற எதை நினைக்க சொல்லுற அக்கா??….”
சந்தாவும் எதிர்கேள்வி கேட்டிட,
“இப்படியே எதிர்கேள்வி கேட்டிட்டிருந்தா என்ன தான் சந்தா செய்ய முடியும்?...”
“எதுவுமே செய்ய வேண்டாம்னு தான் நானும் சொல்லுறேன்க்கா…”
“லூசாட்டம் பேசாத… உன் வாழ்க்கையை நீ தான் வாழணும்…”
இளவரசி சற்றே ஆதங்கத்துடன் கூற,
“வாழ்ந்த வரைக்கும் போதும்க்கா….”
சந்தாவின் குரலில் இளையோடிய விரக்தி, இளவரசிக்குப் புரிய, மேற்கொண்டு தமக்கை பேசுவதற்குள்,
“ப்ளீஸ்க்கா… இதுக்கு மேல இதைப் பத்தி எதுவும் பேச வேண்டாம்…”
வேகமாக அங்கிருந்து வெளியேறியவள், ஹாலுக்கு வர, அங்கே அவளுக்காக காத்திருந்தார் அவளின் தந்தை…
“சந்தா… வாம்மா… எப்படியிருக்குற…”
முகமெங்கும் சந்தோஷத்துடன் அவர் கேட்டிட,
“நல்லாயிருக்குறேன்ப்பா… நீங்க….” என்றாள் அவள்…
“அப்பா அம்மா நியாபகமே வரலையாம்மா உனக்கு இத்தனை நாளா?...”
“அப்படி எல்லாம் இல்லப்பா…”
அவள் பதில் சொல்லிக்கொண்டிருக்கையிலே,
“அப்பா, விடுங்க…. அதான் வந்துட்டால்ல….” என்றாள் இளவரசி…
அந்நேரம்,
“மாமா… அந்த பையனைப் பத்தி விசாரிச்சீங்களா?...” என தன் மாமனாரிடம் கேட்டான் இளவரசியின் கணவர் சுதாகர்…
மருமகன் சொல்லும் பையன் யாரென்று தெரிந்ததும், அவரும் சட்டென பதில் கூறினார்…
“ஆமா மாப்பிள்ளை… விசாரிச்சிட்டேன்… நல்ல பையன் தான்…”
“அப்புறம் என்ன மாமா பேசி முடிச்சிடலாமே…”
“முடிக்கணும் தான் மாப்பிள்ளை….”
அவரின் பதில் மருமகனுக்காக இருந்தாலும், பார்வை சந்தாவை நோக்கி இருந்தது…
அவர்கள் பேச்சு செல்லும் திசையை உணர்ந்தவளாய் அவ்விடம் விட்டு நகர முயன்றாள் சந்தா…
“சந்தா… நீ எங்க போற?... உன் பதிலை சொல்லிட்டுப் போ…”
சுதாகர் சந்தாவிடம் வினவ,
“என் பதிலை நான் என்னைக்கோ சொல்லிட்டேன்…” என்றாள் அவளும் சட்டென…
“பச்… இதையே இன்னும் எத்தனை நாள் தான் சொல்லிட்டிருக்கப்போற சந்தா… உனக்குன்னு ஒரு குடும்பம் வேண்டாமா?...”
அவன் கேட்டதும், அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“கண்டிப்பா உங்க குடும்பத்துக்கு இடைஞ்சலா நான் இருக்க மாட்டேன் மாமா… என்னை நம்பலாம் நீங்க…”
பட்டென அவளும் கூறிவிட்டு நிற்காமல் செல்ல, அனைவரும் அவள் செல்லும் திசையையேப் பார்த்துக்கொண்டிருந்தனர்…
எழில் பூக்கும்...!
{kunena_discuss:1122}