மூங்கில் குழலானதே – 26 - புவனேஸ்வரி
மனிதனைப் பாருங்கள்! உங்களுடன் வாழும் சக மனிதனை பாருங்கள்! நீங்கள் நேசிக்கும் அம்மனிதனைப் பாருங்கள்! அதே போல நீங்கள் வெறுக்கும் இன்னொரு மனிதனையும் பாருங்கள்! காற்றில் ஒவ்வொரு வேகத்தில் அசைந்தாடும் மேகம் போல மனிதரிலும் தான் எத்தனை விதத்தானோர்?
நினைத்தாலே இனிக்கும் குணங்கள்! நினைக்க நினைக்க வலிக்கும் செயல்கள்! கடமையின் சிகரமென ஒரு மனிதன்! காலத்திடம் பொறுப்பை விட்டுவிட்டு கவலையற்றவனாய் இன்னொருவன்!
கொஞ்சம் யோசித்து பாருங்களேன்! இவர்களை இப்படி தனித்துவங்களுடன் உருவாக்கியது யார்? படைத்த இறைவானா? அவன் எழுதிய தலையெழுத்தா? அவனை ஈன்ற அன்னையில் வளர்ப்பா? சேரும் நண்பர்களின் தாக்கமா? அல்லது வாழ்க்கை தரும் அனுபவமா?
கோபம்,காதல், காமமென ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல உணர்வுகளெனும் அத்தியாயங்கள் குவிந்து கிடைக்கின்றன. உணர்வு ஒன்றே என்றாலும் அதை வெளிப்படுத்தும் செயல் ஒன்றா? இல்லவே இல்லை!
வளவளவென பேசுபவளின் கணவன் பேசவே கணக்கு பார்ப்பான். அவனது மகனோ பேச்சிலேயே ஊரை பேரம் பேசுவான். அவனது தங்கையோ ரகசியங்களின் மறு உருவாய் இருக்கலாம்! இது அனைத்துமே சாத்தியம்தான்!
உங்கள் கையில் ஒரு குழந்தையை கொடுத்து வளர்த்து காட்டுங்கள் என்று சொன்னால், எந்த பாதையை தேர்ந்தெடுப்பீர்கள்?
உங்கள் சிசு அன்பின் மொத்த உருவாய் மனதின் பேச்சை கேட்கும் மென்மையானவானாக இருக்க வேண்டுமா? அல்லது கண்ணுக்குத் தெரியாத எதிரிகளையும் பந்தாடத் தெரிந்த திறனாளியாக மூளைக்கு மட்டும் வேலை கொடுக்க வேண்டுமா?
எப்படி திட்டங்களை வகுத்து வளர்த்தாலுமே அவர்களின் வாழ்க்கை என்னவோ அவர்களின் பாதையில் தான்!
காடுகளில்வளர்திருக்கும் மூங்கில்கள் எல்லாமே ஒரே தோற்றத்தில் இல்லை. அப்படியே ஒரே தோற்றத்தில் இருந்தாலும் எல்லா மூங்கில்களும் ஒரேகானத்தை இசைப்பதில்லை.
காற்றின் இயக்கமும்,மூங்கிலின் அடிப்படை தன்மையும் தான் இனிமையான நாத்த்திற்கு ஆணிவேராகிறது!
அதுபோலவே மனிதனின் மனமானது அன்பின் வழியில்தான் இனிய தருணங்களுக்கு வித்திடுகின்றது என்பதை அறிவோமா நாம்?
சிந்திக்கிறேன் சகிதீபன்.
கையில் செல்ஃபோனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மைத்ரேயி. தான் இருக்கும் இட்த்தில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாய் நடந்தேறிக் கொண்டிருக்க,அவளின் விரல்களோ அலைப்பேசியில் சகிதீபனின் எண்ணை தட்டின.
அதிரடி! அனைத்திலும் அதிரடி! அங்கு நடக்கும் அனைத்திற்கும் காரணமே அவந்தான்! எதையும் சொல்லிவிட்டு செய்யும் பழக்கமே இல்லை! கள்ளன் என் கீதன்! என்று மனதில் அவனைக் கொஞ்சியபடி அவனை அழைத்தாள்.
“கீதன்”
“மாயா.. என்ன் திடீர்னு ஃபோன்? எல்லாம் ப்ளான் படி நடக்குதா?”என்றான் அவன் கடமை வீ (பே)ரனாக.
“ம்ம் ம்ம்..நான் அண்ணா,கயலு எல்லாரும் மண்டபத்தில் தான்பா இருக்கோம். இன்னும் சில மணி நேரம்தான் இருக்கு..”
“ஆமா,நம்ம கிட்ட அதிகம் டைம் இல்லை. அடுத்த கட்ட ப்ளானை ஆரம்பிக்கனும் மாயா..”
“ம்ம்”
“மாயா”
“என்னப்பா?” காதலுடன் அவள் கேட்க சட்டென ஃபோனில் முத்தமொன்று வைத்துவிட்டு
“சீக்கிரம் உன்னை தேடி வரேன்டா”என்று ஃபோனை வைத்தான் சகிதீபன்.
“கள்ளன்..கொஞ்சம் கூட பொறுமையே இல்லை!” என்று சிரித்துக் கொண்டாள் மைத்ரேயி. அவளின் எண்ண அலைகள் கொஞ்சம் பின்னோக்கி பாய்ந்திட, அன்று நிகழ்ந்தவைகளை நினைவு கூறினாள் அவள்.
சென்னையில் இருந்து தனது ஊருக்கே மைத்ரேயி திரும்பி வந்து மூன்று வாரங்கள் கடந்திருந்தன.
சகியின் முகத்தை பாராமலேயே திரும்பி வந்திருந்தாள் அவள்.
“வருவான் அவன்! என்னை தேடி அவனாகவே வருவான்! கனவில் வந்தவனுக்கு,நேரில் வந்தவனுக்கு என் வாசல் வர தெரியாதா?” உள்ளமது கேள்வி கேட்க, அவனுக்காகவே காத்திருந்தாள்.
விஷ்வானிகாவின் மாறுதலையும், அபிநந்தன் மற்றும் நந்திதாவின் இணக்கத்தையும் கண்டவனுக்கு மனம் குளிர்ந்து போனது. காதல் கொண்ட மனமானது யாருக்கும் அஞ்சி தயங்கி நிற்பதில்லை!அதற்கு அவன் மட்டுமென்ன விதிவிலக்கா?
மைத்ரேயியின் தந்தையை நேரடியாகவே சந்தித்து தன் காதலைச்சொல்லியிருந்தான் சகி. உடனே சம்மதம் கிட்டவில்லைத்தான்.ஆனால் கரைப்பார் கரைத்து கல் கரைந்திடாமல் இருக்குமா?