தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 08 - தேவி
செழியன் மனதில் மலரின் மேல் விருப்பம் இருந்தாலும் அவள் வேலைக்கு சேர்ந்த இந்த ஆறு மாதங்களில் அதை அவன் வெளிபடுத்த எண்ணியதில்லை. அவன் தன்னுடைய doctorate முடிக்க வேண்டும். அதோடு அன்றைக்கு மலர் குடும்பத்தை சந்தித்த பிறகு சற்று யோசனை வந்தது. அவளின் பாட்டியை பார்த்தவுடன் தன்னுடைய எண்ணம் நிறைவேறுமா என்ற சந்தேகம் இருந்தது,
மலருக்கு உடனே மாப்பிள்ளை பார்க்க மாட்டார்கள் என்று அவன் உள்மனம் நம்பியது. அதனால் தான் முதலில் தன் படிப்பை முடிப்போம். அதோடு மலரோடு பழகி அவள் விருப்பமும் தெரிந்து கொள்வோம் என்று எண்ணி இருந்தான்.
ஆனால் இன்றைய அவளின் கண்ணை கவரும் தோற்றம் அவனை தடுமாற வைத்தது. என்றாலும் எப்படியோ சமாளித்தான். கடைசியில் செந்தில் பாட சொல்லவே தன்னை அறியாமல் தன்னவளின் அழகை வர்ணிக்கும் பாடல் பாடினான்.
நல்லவேளை அவன் மனகண்ணில் தன்னவளின் தோற்றத்தை கொண்டு வந்ததால் அவனின் புற கண்கள் மூடி இருந்தது. அதனால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை.
கைதட்டல் அடங்க, HOD செழியனை பார்த்து,
“என்னப்பா... செழியா ... ரொம்ப அனுபவிச்சு பாடுற மாதிரி இருக்கு? அடுத்து நீயும் அப்பாவி கணவர்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆகா போறியா?” என்று வினவ,
வளர்மதியோ “ என்ன தம்பி.. வீட்டிலே ஜாதகத்தை தூக்கிட்டாங்களா? உன்னோட எதிர்பார்ப்ப வீட்டிலே சொல்லிட்டியா? நாங்க எதுவும் ஹெல்ப் பன்னுமா?” என்று கேட்டார்.
மற்ற ஆசிரியர்களோ “ அப்போ அடுத்த bachelors பார்ட்டி கூடிய சீக்கிரம் இருக்குமா? நாங்க ரெடி தான் .. “ என்று அப்போதே தயார் ஆகினர்.
செழியனோ “அய்யா.. சங்கதலைவரே ... உங்க சங்கத்துக்கு ஆள் பலம் கம்மி என்றால்.. என்னை கோர்த்து விடுறீங்களா? நான் மெம்பெர் ஆகறதுக்கு இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்.. நீங்க போய் வருத்தபடாத மனைவிகள் சங்கத்திற்கு உங்களால ஆனத செய்ங்க..
வளர்மதி அக்கா .. நல்ல இருக்கிற வீட்டிலே வந்து கும்மி அடிச்சுட்டு போய்டாதீங்க.. கடைய நான் பார்த்துக்காம வேலைக்கு போறேன் அப்படின்ற கோபத்துலே இருக்கிற எங்க அப்பாவ இப்போ தான் மலை இறக்கி சோப்பு போட்டு வச்சுருக்கேன்.. அதுலே நீங்க வந்து வேப்பிலை எடுத்துக் கொடுத்து சாமியாட வச்சுடாதீங்க..
அய்யா தர்ம ராசாக்களா... உங்க போதைக்கு நான் ஊறுகாயா..? உங்களுக்கு மாசா மாசம் வேணும்னாலும் பார்ட்டி வைக்குறேன்.. ஆனால் கொஞ்ச நாள் என்னை நிம்மதியா விட்டுடுங்கா மக்கா... “
என்று அனைவருக்கும் சேர்த்து பதில் சொன்னான்.
எல்லோரும் ஒரே குரலில் “நீ சொல்றது நம்பர மாதிரி இல்லே. ஆனாலும் இப்போதைக்கு நாங்க சும்மா விடறோம்..” என, செழியன் கை எடுத்து கும்பிட்டான்..
எல்லோருமே அட்ஜஸ்ட் செய்து அவரவர் வண்டிகளிலே வந்து இருந்ததால் , அப்படியே கிளம்பி விட்டனர். வரும்போது வளர்மதி மலோரோடு தான் வந்து இருந்தார். ஆனால் போகும்போது வேறு ஒரு lecturer அவர் வீட்டின் வழியாக போகிறவர் என்பதால் மலரின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு அந்த மற்ற lecturer கூட கிளம்பி விட்டார்.
அதனால் மலர் தனியே கிளம்பினாள். அதே சமயம் செழியனும் கிளம்ப ,
செந்தில் வந்து “செழியா நீ மலர் மேடம் கூட அவர்கள் வீடு வரைக்கும் செல்கிறாயா? பாவம் நமக்காக வந்து தனியே அனுப்ப வேண்டாம் என்று நினைக்கிறேன் ?”
செழியன் பதில் சொல்லும் முன்பே மலர் வேகமாக “அது எல்லாம் வேண்டாம் அண்ணா.. நானே போய் விடுகிறேன் .. சார்க்கு சிரமம் வேண்டாமே “ என
செழியனோ “ மேடம்..எனக்கு சிரமம்ன்னு நான் சொல்லவே இல்லியே.. அதோட எங்கள நம்பி வந்து இருக்கீங்க.. உங்கள safe ஆ கொண்டு சேர்க்கிறது எங்க பொறுப்பு.. சோ.. நான் பின்னாடி வரேன் .. நீங்க கிளம்புங்க.. “ என்றவன்
“வரேன்.. செந்தில்.. “ என்றபடி கிளம்பி விட்டான். மலரும் செந்திலிடம் சொல்லிக் கொண்டு வண்டியில் ஏறினாள்.
சற்று நேரம் வரை இருவரும் மௌனமாகவே தங்கள் வண்டிகளை ஒட்டிக் கொண்டு இருந்தார்கள்.
கொஞ்ச தூரம் சென்றதும் ... இருவரும் ஒரே நேர்கோட்டில் வந்து கொண்டு இருக்க, அங்கே ஆள் நடமாட்டம் இல்லாததால் கொஞ்சம் மெதுவாகவே வந்தார்கள்.
அப்போது தீடிர் என்று மலர் “சார்.. நீங்க யாரையோ மனசிலே நினைச்சி இருக்கீங்களோ?” என்று கேட்க,
செழியன் sudden பிரேக் போட்டவன் , கைகளில் வண்டி தடுமாறி பிறகு நிறுத்தினான்.. மலரும் அவன் நிறுத்துவதை பார்த்து தன் வண்டியை நிறுத்தினாள்.
செழியன் மலரை பார்த்து “என்ன மேடம் கேட்டீங்க..?” என
மலரும் .. “இல்லை.. உங்க மனசுலே யாராவது இருக்காங்களான்னு கேட்டேன்..?”
“ஏன் அப்படி கேட்கறீங்க?”
“உங்க பாட்ட கேட்கும்போதும், அத நீங்க பாடிய விதத்த பார்க்கும் போதும் அப்படி தோனுச்சு..”
“அவங்க எல்லார்கிட்டயும் சொன்ன பதில் கேட்டீங்கதானே?”