தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 11 - தேவி
மறுநாள் காலையில் தங்கள் வீட்டில் செழியன் இருந்தபோது போன் அடித்தது.
போனில் செந்திலே..
“செழியா.. நீதான் துணை மாப்பிள்ளையாம்.. உன்ன வேட்டி சட்டை உடுத்தி வர சொல்லி ..வீட்டிலே சொல்றாங்க டா..” என,
“மச்சான்.. இந்த ஆட்டத்துக்கு நான் வரல.. நான் இது வரைக்கும் வேட்டியே கட்டினதில்லை.. நான் கட்டிட்டு வந்தா உன் கல்யாணம் நடக்குரதுக்குள்ளே... ஒரு காமெடி ஷோ தான் நடக்கும்... என்னை ஆள விட்டுடா.... மக்கா.”
“டேய்.. நான் உன்னதண்டா நம்பி இருக்கேன்..’
“அடேய்.. இந்த விஷயத்துலே நான் ரிஸ்க் எடுக்க விரும்பல...”
“டேய்.. மச்சா. நீ தான் ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாபிடுற மாதிரின்னு டயலாக் விடுவியே...”
“அது வடிவேலு டயலாக் ... நான் அத அப்போ அப்போ dubsmash தான் பண்ணிட்டு இருப்பேன்..”
“ப்ளீஸ் டா.. மச்சான்.. இப்போ வேற யாரும் இந்த போஸ்ட்க்கு கூப்பிட முடியாது..”
“ஆமா.. பெரிய ஐ.நா சபை தூதுவர் போஸ்ட்.. இதுக்கு selection கமிட்டி வேற வைக்கிறாங்க... ஏன் உன் மாமனார் வீட்டு சைடுலே பசங்க இருப்பாங்களே.. அவங்கள கேக்க வேண்டியது தானே..”
“டேய்.. அந்த சைடு எல்லாம் ஸ்கூல் போற பச்ச பிள்ளைங்க.. அதுங்கள போய் துணை மாப்பிள்ளையா நிக்க சொல்ல முடியுமா?”
செழியன் வீட்டில் கீழே காபி குடித்துக் கொண்டே இவை எல்லாம் செந்திலோடு பேசிக் கொண்டு இருந்தான்.. அவன் அப்பாவும் இதை கேட்டுக் கொண்டு இருந்து,
“செழியா .. என்னாலே அங்கிட்டு பேச்சு.. ? கல்யாண மாப்பிள்ள கிட்டே என்ன வாக்குவாதம்..?”
“ஒன்னுமில்லப்பா.. அவன் என்னிய துணை மாப்பிள்ளைய நிக்க சொன்னான்.. நானும் சரினேன்... இப்போ வேட்டி கட்டிட்டு வர சொல்லுதான்.. எனக்கு அது பழக்கமில்லேலே.. அதான் அவன்கிட்ட சொல்லிடு இருக்கேன்..” என்றான்..
“ஏன்.. அவன்கிட்ட சரின்னு சொல்லும் போது உனக்கு தெரியாதோ... வேட்டி கட்டணும்னு.. ஊர் பக்கம் அதுதான் வழக்கம்வே.. “
“என்ன வழக்கமோ? என் கல்யாணத்துக்கு வேட்டி கட்ட சொன்னாலும் பரவா இல்லை.. அடுத்தவன் கல்யாணத்துக்கு எல்லாம் சொல்லுங்க..”
“உனக்கு மட்டும் என்ன பச்ச புள்ள வயசோ.. நீயும் அடுத்து கல்யாணம் கட்டிக்க வேண்டிய நேரம்தான்.. அதுக்கு வேட்டி கட்ட இப்போ பழகறதா நினைச்சுக்கோ “ என
மனசுக்குள் “ஆத்தி.. இப்போ இவரு என்கதைய ஆரம்பிச்சா.. நாம தொலைஞ்சோம்.. இவர்கிட்டே வாய் கொடுக்கரதுக்கு அந்த வேட்டியோடவே மல்லு கட்டலாம்.. “ என்று எண்ணியவனாக.
இருவருக்கும் பொதுவாக “சரி... நான் அப்படியே வரேன்.” என , இங்கே அவன் அப்பா தன் மீசைய முறுக்கி “அது” என்ற பார்வை பார்த்து விட்டு சென்றார்.
அங்கே செந்திலோ “நண்பன்டா” என்ற டயலாக்கை “நீதாம்லே என் நண்பன்” என்ற modulation னில் சொல்லிக் கொண்டு இருந்தான்.
செந்திலிடம் பேசி முடித்து தன் அறைக்கு சென்ற செழியன் குளித்து, தன் அப்பாவிடம் சென்று நல்ல வேட்டியாக வாங்கி வந்தான். அவன் அப்பா தான் கட்டி விடவா என்று கேட்க, வேண்டாம் என்று மறுத்து, தன் அறைக்கு சென்றான்.
வேட்டி எப்படி கட்டுவது என்று முழித்தவன் பிறகு கூகிள் கடவுளிடம் கேட்க, அவரோ youtube வரம் கொடுத்தார்.. நல்ல வேளையாக அதில் வீடியோ கிடைக்க அதை வைத்து ஒரு வழியாக கட்டி முடித்தான்.. இறுக்கமாக பெல்ட் அணிந்து தன் ரூமிற்குள்ளே பூனை நடை, சிங்க நடை என்று எல்லா நடையும் நடந்து பார்த்து திருப்தியான பிறகே அறையை விட்டு வெளியே வந்தான்..
அவன் மனதிற்குள் “ஷப்பா.. இப்போவே கண்ணை கட்டுதே.. இன்னிக்கு குறைந்த பட்சம் மதியம் வரையாவது தாக்கு பிடிக்கணுமே என்று கவலைபட்டான்..”
பிறகு இவர்கள் மூவருமாக காரில் கிளம்பினார்கள்.. முதலில் செழியன் மட்டும் பைக்கில் கிளம்புவதாக இருந்தவன், வேட்டியின் மகிமையால் தன் பெற்றோரோடு காரிலேயே வந்தான்.
இவர்கள் மண்டபத்திற்கு வரவும் கல்யாண சடங்குகள் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. செழியன் பெற்றோர்கள் சொந்தம் என்பதால் அங்கே இருந்த மற்ற சொந்தங்களோடு சேர்ந்து அமர்ந்து கொள்ள, செழியன் மணமகன் அறைக்கு சென்றான்.
கொஞ்ச நேரம் செந்திலை கிண்டல் செய்து, காலையில் இவனை மாட்டி விட்டதற்கு சண்டை போட்டு என சற்று நேரம் செல்லவும், செந்திலை மாப்பிள்ளை அழைப்பிற்காக கிளம்ப சொன்னார்கள். அவனோடு செழியனும் சென்றான்.