தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 05 - லதா சரவணன்
என் வீட்டு வாயிலில் உனை வரவேற்கப் பூக்களால் ஆன படுக்கை விரித்திருக்கிறேன். ஆம் ! பூவிலும் மெல்லிய பாதம் தரையில் மிதிபடக்கூடாதே! ஏனெனில், விழிகளைத்தாண்டி வரும் என் கண்ணீர் நிலத்தில் விழாமல் விரல்களால் துடைத்தவன் நீயல்லவா? அழைப்பு மணியோசைக் கேட்க என் செவிகள் காத்துக் கொண்டு இருக்கின்றன. உன் அழகிய பிம்பத்தை தேக்கிக் கொள்ள விழிகள் ஏங்குகின்றன. நான் ஒரு விநாடி கூட கண்களை இமைப்பதில்லை, அந்த இமைப்பொழுதில் என் வாசலை நீ கடந்து விட்டால்...! என் மனம் போல் கருமைபடிந்து விட்ட வானத்தில் உன் முத்துச் சிதறல்களாய் அந்த நிலவில் தான் எத்தனை அழகு! காரணமின்றி விலகிப் போன உனைப் போல்! உன் நினைவுகள் என்னுள் எத்தகைய மாற்றத்தை தோற்று விக்கறது. பார்த்தாயா அன்பே? முழுநிலவாய் நீ உனைத் தொடத் துடிக்கும் வெண்ணிற தேவதையாய் நான். உன் காதல் அலைகளில் கால் பதித்தவுடன் என் உடலில் புதிய சிறகு முளைத்துவிட்டது. இதோ பறந்து வருகிறேன். எத்தனை ஆயிரம் மைல் கடந்து நீ இருந்தாலும் உனை நோக்கி! இனிக்கும் கனவு கலைந்தாலும், இனி கலையாத நம் காதலுடன் நீயும் நானும் ?!
அந்தவீடு அலங்கார விளக்குகளை உயிர் பெறச் செய்து கொண்டு இருந்தது. மாடிப்படிகளின் விளிம்பில் அவன் ஒருபடிக்கு மேல் நின்றிருந்த அவள் அவனின் சட்டையைக் கொத்தாகப் பற்றியிருந்தாள். இப்படி நம்ப வைச்சுக் கழுத்தறுத்திட்டியே?! உன்னை நான் உயிரா நினைச்சிருந்தேன். என்னை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வந்தது. அவளின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் ஊற்றியது. ஏமாற்றத்தின் வேதனையில் உடல் முழுவதும் குலுங்கிற்று.
கட்....கட்...என்று கையெழுப்பினார் இயக்குநர் கவின். நல்லா நடிச்சிருக்கேம்மா ஆனா இன்னும் கொஞ்சம் எமோஷன்ஸ் தேவைப்படுது. கதைப்படி நீ ஒரு கிளாஸிக்கல் டான்ஸர் நீ உன் கோபம் கூட நளினமா வெளிப்படணும். ஒ.கே.....
மிஸ்டர் உன் பெயர் என்ன சுதனா மதனா?
மதன் ஸார்?
ம்...அவ ஒரு கிளாஸிக் டான்ஸர் அவளுடைய அழகில் மயங்கி அவளையும் உன் வலையில் விழவைச்சே. இப்போ உன் மயக்கம் தெளிஞ்சதும் அவளை விட்டு விலக நினைக்கிறே? அதை தெரிந்து கொண்ட அவள் உன்னைக் கோபமாய் திட்டறது இதுதான் ஸீன்.! அவ உன்கிட்டே கோபமா பேசும் போது, முதலில் நீ திமிரா பார்க்கணும் அப்பறம் ஏளனமான பார்வை இறுதியில் அவளின் உக்கிரம் கண்டு மிரளறா மாதிரி ஆக்ஷன் தரணும். என்று காட்சியை விலக்கிக் கொண்டு இருந்த இயக்குநரிடம் அவனின் உதவியாளன் வந்து நின்றான்.
போலீஸா ? இங்கே ஏன் வந்தாங்க?
தெரியலை ஸார் பர்சனலா ஒரு என்கொயரி உங்ககிட்டே வைக்கணுமாம். அவரின் அசிஸ்டெண்ட். சொல்லிட, சரி இந்த ஸீனை முடிச்சிடு நான் போய் என்னன்னு விசாரிச்சிட்டு வர்றேன்.
இயக்குநர் கவின் அந்த வீட்டின் மற்றொரு மூலையில் சற்றே சந்தடியில்லாத அறையில் தனக்காக காத்திருந்தவர்களை நோக்கிப் போனார்.
கமல். அசோக், வீரா மட்டும் யூனிபார்மில் இருந்தார்.
வணக்கம் என்று கைகுவித்தான் கவின், எதற்காக இவர்கள் வந்திருப்பார்கள் என்ற கேள்வி மனதைக் குடைந்தாலும், முகம் மாறாமல் என்னிடம் என்ன விசாரணை என்று வீராவைப் பார்த்துக் கேட்டான்.
வீரா அவனை ஏற இறங்கப் பார்த்தார். 40களின் தொடக்கத்தில் இருந்தான். கருப்புத் தொப்பியைக் கழற்றியபோது 15வருட சினிமாவாழ்க்கையில் அவன் இழப்பினைக் காட்டியிருந்தான்.
இவர் அசோக் பிரைவேட் டிடெக்டிவ், மாயாவோட கேஸை திரும்ப எடுக்கப் போகிறோம். ஹியரிங் வருது?
மாயான்னா கிளாஸிக்கல் டான்ஸர் மாயாதானே.....!
எஸ்....!
நல்ல டான்ஸர் ஸார் அந்த பொண்ணு நான் கூட ஒருமுறை அது நடனத்தைப் பார்த்து பாராட்டியிருக்கிறேன். ஆனா அதற்கும் என்னிடம் விசாரணைக்கு வந்ததற்கும் என்ன ஸார் சம்பந்தம் ?! கவின் வியர்வையைத் துடைத்தபடியே கேட்டான்.
சம்பந்தம் இருக்கு மிஸ்டர் . கவின் இவர்தான் கமல் இறந்துபோன மாயாவின் காதலர் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக இருந்தபோதுதான் மாயா இறந்தது. மாயாவின் இறப்பு மீது அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. தற்கொலை என்று முடிவானதால் போலீஸ் கேஸை முடித்துவிடப் போவதாய் பேப்பரில் பார்த்தேனே?!
அது நேற்றைய செய்தி மாயாவை உங்கள் படத்தில் நடிக்கச் சொல்லி நீங்கள் துன்புறுத்தியதாய் ஒரு செய்தி அடிபடுகிறதே ? அதைப்பற்றி மாயாவே ஒருதடவை கமலிடம் சொல்லியிருக்கிறார்களாம்.
அய்யோ ஸார்....! என் படத்தில் நடிக்க அவர்களை வற்புறுத்தியது. என்னவோ உண்மைதான் ஆனால், நான் எந்த தொந்தரவும் செய்ததில்லை, இன்பேக்ட் இந்தபடம் தான் அவங்களை நடிக்கக் கேட்டது.