(Reading time: 14 - 28 minutes)

ஆனாலும் அவளது முழுமையான அழகை ஏதோ ஒரு விஷயம் தடை செய்கிறது என எண்ணினாள் மேகலா. அது என்னவாக இருக்கும் என அவளுக்கு சட்டென பிடிபடவில்லை. பின்பு காரணத்தை புரிந்துகொண்டாள்.

எப்பொழுதும் கலைந்த கேசத்தோடு திரியும் அமேலியாவிற்கு பின்னல் போட ஆசைப்பட்டு அவற்றுக்கான ஏற்பாடுகளை செய்ய ஆயத்தமானாள் மேகலா. அவள் என்ன செய்கிறாள் என்று அமேலியாவிற்கு புரியவில்லை.

அமேலியாவை திரும்பச் சொல்லி அவள் கேசத்தை சீவி பின்னல் போட துவங்கினாள் மேகலா. எனக்கு பிடிக்காது என்பது போல் தலையை வலதும் இடதுமாய் ஆட்டினாள் அமேலியா. 'பேசமா இருக்கணும்' என்று அதட்டிய மேகலா, தான் செய்ய விரும்பிய அலங்காரத்தையெல்லாம் அமேலியாவிற்கு செய்து இறுதியாக நெற்றியில் பொட்டு வைத்தாள்.

மேகலாவுக்கு தான் காணும் காட்சி நம்ப முடியாததாக இருந்தது. தேவதைகளின் அழகை எல்லாம் விஞ்சி நிற்கும் அளவிற்கு அமேலியா காட்சி தந்தாள்.

"நீ இப்போ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா? என்னாலேயே நம்ப முடியல"

அமேலியாவிற்கு புரியவில்லை. அவளை அழைத்துச் சென்று கண்ணாடி முன் நிறுத்தினாள் மேகலா.

கண்ணாடியில் நாம் தான் தெரிகிறோமா என்று அமேலியாவாலேயே நம்ப முடியவில்லை. "இவ்வளவு அழகாக என்னை இப்பொழுது தான் காண்கிறேன்" என அரபி மொழியில் கூறி சிரித்தாள் அமேலியா. தன் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று அமேலியாவிற்கு தோன்றியது.

"வா கிளம்பலாம்" என்று அமேலியாவின் தோளைப் பற்றி வெளியே அழைத்து வந்தாள் மேகலா. வசந்த் மேகசனில் மூழ்கியிருந்தான்.

ஹாலில் பந்து விளையாடிக்கொண்டிருந்த நிலா, "வாவ்! அக்கா எவ்வளவு அழகா இருக்காங்க!" என்று மகிழ்ச்சி ததும்ப கத்தினாள்.

வசந்த் அமேலியாவைப் பார்த்தான். அவன் கண்கள் இமைக்க மறந்தன. தான் ஒரு மானிடப் பிறவி என்பதை மறந்து சிலையென மாறிப் போனான். எப்பொழுதும் திருட்டுத்தனமாக அமேலியாவின் முகத்தை ரசிப்பவன் நேரடியாக அவளின் அழகில் மயங்கிப் போனான். பெண்மைக்குரிய நாணமும் அவளுக்கு போடப்பட்ட அலங்காரமும் அவளது அழகை பன்மடங்கு மெருகேற்றியிருந்தன.

"வசந்த் புறப்படலாம்" மேகலா அழைத்தாள்.

வசந்த்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

"வசந்த்"

திடுக்கிட்டு விழித்ததைப் போல் மேகலாவைப் பார்த்தான் வசந்த். "என்ன அக்கா?"

"புறப்படலாமான்னு கேட்டேன்"

"ம் ......" என்று அமேலியாவைப் பார்த்தபடி, "புறப்படலாம்" என்றான் வசந்த்.

ஏதோ யோசனையோடு தன் அறையில் இருந்து வந்த நாராயணன், அமேலியாவின் தோற்றத்தின் மாற்றத்தைக் கண்டு வியந்தார். அவரை அறியாமலே புன்னகையும் புரிந்தார். அமேலியாவும் புன்னகை புரிந்தபடி அவர் முன்னே சென்று நின்றாள். 

"மேகலா"

"சொல்லுங்க அப்பா"

"இந்த பொண்ணு ஏன் இந்த கோலத்துல நிக்குறா?"

"அது வந்துப்பா..."

"அவளே கேட்டாளா? இல்ல, நீயே போட்டு விட்டியா?"

'நான் அலங்காரம் செஞ்சேன்னு சொன்னா. எதுக்கு செஞ்சன்னு அப்பா திட்டுவாரு, அவளே விரும்பினானு சொன்னா அமேலியாவை திட்டுவார். அவர் திட்டு அமேலியாவுக்கு புரியவா போகுது'

"என்ன அமைதியா இருக்க?"

"அமேலியா தான் அப்பா ஆசைப்பட்டா. அதான் அலங்காரம் பண்ணினேன்"

"இந்த கோலத்தில லட்சுமி கடாக்ஷமா இருக்கா. பெண்களுக்கு பொட்டு தான் அழகு"

நாராயணன் கூறியதை மேகலா மட்டுமல்ல வசந்தும் எதிர்பார்க்கவில்லை. இருவரும் வாயடைத்து போனார்கள்.

"சீக்கிரம் இவளைக் கொண்டுபோய் விட்டுட்டு வாங்க"

"சரிப்பா" என்றான் வசந்த்.

"மேகலா நீயும் கூட போ"

"அக்கா எதுக்குப்பா? அவங்களுக்கு நிறைய வேலையிருக்கும். நான் கொண்டுபோய் விட்டுட்டு வரேன்"

வசந்த்தை சில நொடிகள் முறைத்த நாராயணன், மேகலாவையும் முறைத்தார். தான் ஆரம்பத்தில் கூறியது உண்மையாகிக்கொண்டு வருகிறது என பார்வையால் கூறினார் நாராயணன். மேகலா தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.

அவர்களின் பார்வை மொழியைப் புரிந்துகொண்ட வசந்த், "எதுக்கு சொல்லுறேன்னா, அமேலியாவை விட்டுட்டு நான் அப்படியே ஷூட்டிங் போயிடுவேன். அக்கா கூட வந்தா அவங்களை வீட்டுக்கு திரும்ப கூட்டிட்டு வந்து விடணும். என் வேலை கெட்டு போயிடும்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.