நான் நேரடியாகவே மாயாவிடம் என் பேரத்தை தொடங்கினேன். நீ வாழ்நாள் முழுவதும் ஆடினாள் எவ்வளவு சம்பாதிப்பாயோ அதை நான் ஒரே செக்கா தருகிறேன் நீ ஆடுவதை நிறுத்தவேண்டுன்னு
மேடம் நான் ஆட வந்தது கெளரவத்திற்காக அல்ல, சிறந்த நடன பெண்மணியா நான் வலம் வரணுமின்னு எங்கம்மாவோட ஆசை அதற்காகத்தான் நான் பரதம் ஆடறேன். இந்த துறைக்கே விளக்கு மாதிரி நீங்க, நானெல்லாம் உங்களுக்கு ஒரு போட்டியா ? உங்க பெருமையும் திறமையும் ஊருக்கேத் தெரியும் என்னோட தனிமையை போக்கத்தான் நான் இதை தொடர்ந்து வருகிறேன். எனக்கு இருக்குறே ஒரே ஆறுதல் நடனம் அதையும் விட்டுட்டு என் தனிமை என்னைக் கொன்னுடும்.
விடலைன்னா நான் கொன்னுடுவேன் பரவாயில்லையா ? மாயா நான் இந்த இடத்திற்கு வளர்ந்து இருக்கேன்னா அதற்கு நான் எத்தனை கஷ்டப்பட்டு இருப்பேன் என் இடத்தை தக்கவைத்துக் கொள்ள நான் எந்த எல்லைக்கும் போகத் தாயார் யோச்சிப்பாரு ?
என் உயிரைப் பற்றி நான் என்றுமே கவலைப்பட்டது இல்லை வாழனுமின்னு ஆசையிருக்கிறவங்க தான் அதைப் பற்றி யோசிக்கணும், அதுக்காக ஒரு கோழையா என்னை என்னைப் பெற்றவங்க வளர்க்கலே, உங்களால முடிந்ததை பார்த்துக்கோங்க, நான் இனிமேல் இன்னும் அதிகமா நிகழ்ச்சிகள் ஒத்துக்கப்போறேன், வயசுலே பெரியவங்க அனுபவசாலின்னு மரியாதை தந்தா இப்படி பேசறீங்களே ? உங்களோட உயர்வுக்கு நிச்சயமா குறுக்குவழிதான் அதனால் தான் என்னையும் மற்றவர்கள் மாதிரி விலை பேச ஆரம்பிச்சிட்டீங்க ?! மாயா நீங்க நினைக்கிறமாதிரியில்லைன்னு புரிஞ்சுப்பீங்க நான் வர்றேன். அடுத்த நடனத்திற்கான அழைப்பு உங்களை தேடி வரும்ன்னு நக்கலா என்கிட்டே பேசிட்டுப் போனா ?!
எனக்கு புகழ் இருந்துட்டே இருக்கணும், என்னை தினம் தினம் யாராவது பாராட்டிட்டே இருக்கணும் சாகும் வரையில் நான் நடனம் ஆடிட்டிடே இருக்கணும். அதற்கு மாயா இடைஞ்சல் செய்தா ?! அப்போதான் வினிதா மூலம் அவளுடைய நடவடிக்கைகளை ஆராய்ந்தேன், ஆனால் என்னைப் போலவே வேறு யாருக்கோ அவள் தொல்லை தந்திருக்ககூடும் அதனால்தான் அவளுடைய வாழ்க்கை முடிந்து போச்சு. அதை மறுநாள் என்னோட நாட்டிய நிகழ்வில் விக்டர் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன் . அவள் மேல் கண்மூடித்தனமான கோபம் இருந்ததே ஒழிய அவ சாகணுமின்னு நான் நினைக்கலை, ஒரு பேச்சுக்கு கொன்னுடுவேன்னு சொன்னா உடனே கத்தியை எடுத்து சொருக முடியுமா என்ன ? என்னைப் பொறுத்தவரையில் மாயாவின் இறப்பு எந்தவிதத்திலும் என்னை பாதிக்கலை, நான் பொய் சொல்றதா நினைத்தால் தாரளமாய் நீங்கள் என்னை கைது செய்து விசாரிக்கலாம்.
நிரஞ்சனாவின் வார்த்தைகள் உண்மையைத்தான் பிரயோகித்தன.
லாயர் சண்முகம் கண்ஜாடையில் நாளைக்கு ஒரு ஸ்டேட்மெண்ட் மட்டும் எழுதித் தந்துவிடுங்கள் மாயாவின் வழக்கிற்கு இது கொஞ்சம் உதவி புரியும் அதன்பிறகு, இனிமேல் வினிதாவிற்கு உங்களால் எந்த தொல்லையும் இருக்கக் கூடாது. மீறினால்...
மாயாவின் பொருட்டு எறியப்பட்ட அம்பு வினிதா மரமே சாய்ந்தபிறகு அம்பிற்கு என்னிடம் வேலை இல்லை,
நிரஞ்சனாவின் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு, அவள் மேல் ஒரு கண் வைக்கும் படி இரண்டு காவலர்களை மப்டியில் நிறுத்திடச் சொல்லியிருந்தார் இன்ஸ்பெக்டர்.
வழக்கின் கோணம் முற்றிலும் மாறுபட்டு கொண்டே இருக்கு, என்ன செய்றது, குற்றவாளியினை நெருங்கிவிட்டோன்னு நினைக்கும்போது மறுபடியும் ஆரம்பிச்ச இடத்திற்கே வந்திடறோம் என்ன செய்யறதுன்னே தெரியலை ?!
இங்கே வருவதற்கு முன்னால் எனக்கு அசோக்கிட்ட இருந்து போன் வந்தது வீரா, உங்கள் நம்பர் கிடைக்கலைன்னு எனக்கு பண்ணினார், ஏதோ முக்கியமான விஷயமாம் உடனே நம்மை கிளம்பி பெங்களூர் வரச்சொல்றார். வினிதாவையும் நம்ம கூடவே கூப்பிட்டுப் போயிடலாம். நிரஞ்சனாவை விசாரித்ததுக்கு காரணம் வினிதாங்கிறதால அவளுக்கும் ஆபத்து வரலாம் என்று லாயர் சொல்ல மூவரும் அசோக் சொல்லியிருந்த இருப்பிடத்திற்கு புறப்பட்டனர் மூவரும்.
கமல் மாயாவின் அருகில் அவள் முகத்தைப் பார்த்தபடியே நின்றிருந்தான். அசோக்கின் சொல்லியிருந்ததை போல் அனைவரும் பெங்களூர் கிளம்பி வந்துவிட, எல்லாவிவரங்களும் அவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டன. வீரா தன் தொழில் ரீதியாக ஏதும் தகவல்கள் கிடைக்கும் என்று அந்த ஏரியா காவல் நிலையத்திற்கு சென்று அன்றைய விபத்திற்கான தகவல்களை சேகரிக்கச் சென்றிருந்தார். வினிதாவும் லட்சணாவும் மீண்டும் சுப்ரியாவின் டைரியைப் படிக்கத் துவங்கினார்கள்.
நடந்த எல்லாம் கமலிடம் தெரிவிக்கப்பட்டாலும் இறந்தது மாயா இல்லை என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். கண்மூடி தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே அறியாமல் பதுமையாய் உறங்கிக்கொண்டு இருக்கும் இவள்தான் மாயா என்று அவன் மனதில் ஆழமாய் நம்பியிருந்தான்.