18. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி
ஆயிஷாவை தோளோடு அணைத்தபடி அமர்ந்திருந்ததால் அவள் செல்ஃபோனின் எதிர்முனையில் உரையாடும் தமிழின் குரல் கொஞ்சமாக அவனுக்கும் கேட்டது. தமிழின் கேள்வி புகழை திடுக்கிட வைத்தது.
“என்ன மூன்று வருடங்களாக இருவரும் பேசிக்கொள்ளவில்லையா? ஏன்?” குழப்பத்துடன் ஆயிஷாவைப் பார்த்தான் புகழ்.
“அதனால என்ன தமிழண்ணா? பேசலன்னா அன்பில்லைன்னு ஆகுமா என்ன? இப்போத்தான் அவன் வந்தாச்சுல? இனி எல்லாம் பழைய மாதிரி இருக்கும்..” என்று ஆயிஷா உரைக்க, இரு ஆண்களுமே என்ன செய்வதென்று அறிந்திடாமல் அமைதி காத்தனர்.
ஒரு நொடி மௌனத்திற்கு பின் பேச்சினை தொடர்ந்தான் தமிழ்.
“புகழ் அங்கயா இருக்கான்?”
“ம்ம்.. ஆமாண்ணா..சாரி..ஜாகிங் போனவரை அப்படியே கடத்திட்டு வந்துட்டேன்..”
“ஹா ஹா..நீ பாட்டுக்கு கடத்திட்டு வந்துட்ட..இங்க ஒருத்தி என்னை படுத்தி எடுக்குறா!” யாழினியைப் பார்த்துக் கொண்டே தமிழ் அதை சொல்லவும் புகழின் முகத்தில் ஒளி கூடியது. அதை இனம் கண்டுகொண்டாள் ஆயிஷா.
“ஹ்ம்ம் இதுதான் உங்க நட்பின் ஷக்தியா? எங்க பேச்சு வரவழைக்காத தேஜசை யாழியின் தேடல் வரவழைக்கிறதா?” மனதினுள் நினைத்தவள் கொஞ்சமும் பொறாமையை உணரவில்லை.!
“ஃபோனை புகழ்கிட்ட தரவாண்ணா?” அவனை அண்ணார்ந்து பார்த்தபடி வினவினாள் ஆயிஷா.
“வேணாம்னா..நீங்க பேசுங்க.. எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு..அப்பறம் பேசுறேன்”என்று ஃபோனை வைத்தான் தமிழ். அவன் வைப்பதற்கு காத்திருந்தவன் போல ஆயிஷாவை கேள்வி கேட்க தொடங்கினான் புகழ்.
“நீ தமிழ்கிட்ட பேசவே இல்லையா ஆயிஷா?”
“ஃபோன்ல பேசினது உனக்கும் கேட்டுச்சு தானே ? அப்பறம் என்ன புகழ் மறுபடியும் கேட்குற?”
“ அவன் என்ன தப்பு பண்ணான்? நான் ஏன் போனேன்னு கூட அவனுக்கு தெரியாது. அவன்கிட்ட மட்டும்தான் பேசலயா?” என்று அவளை துளைக்கும் பார்வையுடன் கேட்டான் புகழ்.
“கு..குமரன் அண்ணா தவிர உன் சம்பந்தபட்ட யாருக்கிட்டயும் நான் பேசல புகழ்..” உள்ளே போய்விட்ட குரலில் பதில் வந்தது அவளிடமிருந்து.
“ஏன்?”
“..”
“நீ ரொம்ப தெளிவான பொண்ணு..காரணம் இல்லாமல் எதையும்செய்ய மாட்டன்னு நம்பித்தான் கேட்குறேன்மா..சொல்லு ஏன் இப்படி பண்ண?”.
“உன்னாலத்தான் புகழ்..உன்னை சுத்தி என்ன நடந்துச்சுன்னு தெரியல.. ஏன் எல்லாத்தையும் விட்டுட்டு போனன்னு தெரியல.. உன் அம்மாவுக்கு கூட நீ எதையும் சொல்லல..எங்க போன?எப்படி இருக்க எதுவும் தெரியல..என் இடத்துல இருந்து யோசிச்சு பாரு..
மனசார காதலிச்சு இனி வாழ்க்கை உன்னோடன்னு நினைக்குறநேரத்துல ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஓடிட்ட நீ..காரணம் எதுவாக வேணும்னாலும் இருக்கட்டும்..என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல? வர மாட்டேன்னு சொல்லியிருப்பேனா?”
“நிச்சயம் இல்லை!”புகழின் உள்மனம் மின்னல்ம்வேகத்தில் பதில் சொன்னது!
“நான் அப்பவும் நம்பினேன்..நீ வருவ.. எனக்கு ஃபோன் ஆச்சும் பண்ணுவ.. யாருக்கும் சொல்லாதேன்னு சத்தியம் வாங்கிட்டு என்ன ஆச்சுன்னு என் கிட்ட சொல்லுவ.. நானும் வரேன்னு சொன்னதும் நீ என்னை தேடி வந்துகூட்டிட்டு போவன்னு நினைச்சேன்.. பேஸ்பூக், வாட்ஸ் அப் எதுலயாவது மெசெஜ் வரும் நினைச்சேன்.. தெரியாத நம்பரில் கால் வந்தாலே அது நீயாதான் இருக்கும்னு பைத்தியம் மாதிரி போனையே பார்த்துக்கிட்டு வாழ்ந்தேன்.. அந்த அளவுக்கா நான் வேண்டாதவள் ஆகிட்டேன்னு யோசிப்பேன்.. எது செஞ்சாலும், எங்க பார்த்தாலும் உன் ஞாபகம்தான் எனக்கு.நீயும் நானும் சேர்ந்து உருவாக்கியது தானே அந்த நினைவுகள்? அந்த நினைவுகள் என்னை கொல்லும்போது உனக்கும் அதே உணர்வு இருக்காதா?அதில் பாதியாவது இருக்காதான்னு மருகுவேன்!”
எனக்கே என்ன நடக்குதுன்னு தெரியாத நேரத்துலே எல்லாரும் என்னை கேள்வி கேட்க ஆரம்பிச்சுடாங்க டா.. யாழினியின் அப்பா உட்பட! நீ எங்க போனாலும் எனக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை அது இதுன்னு அவங்க பேசுறப்போ எனக்கு உன்மேலதான் கோபம் வந்துச்சு.. எல்லாரும் என்னைய கேள்வி கேட்குறப்போ,தெரியாது தெரியாதுன்னு சொல்லுறதே ஒரு மாதிரி அசௌகரியமா இருந்துச்சு..
அதுமட்டுமில்லாம, உன் பேச்சுக்கு கட்டுபட்டு நான் உன்னபத்தி யார்க்கிட்டயும் பேசாமல் மறைக்கிறென்னு நினைச்சாங்க தெரியுமா? குமரன் அண்ணாவுக்கு மட்டும்தான் என் தவிப்பு உடனே புரிஞ்சது.. அதனாலத்தான் அவர்கிட்ட மட்டும் பேசினோம்.. கிட்டதட்ட எனக்கும் அவருக்கும் ஒரே மாதிரியான வலிதான்.
இவ்வளவு நாளா நீதான் எல்லாம்னு சார்ந்தே இருந்துட்டு திடீர்னு நீ காணோம்னா எப்படி இருக்கும் சொல்லு?” என்று ஆயிஷா கேட்கவும் பதில் பேச முடியாமல் இருந்தான் புகழ்.