பெண்மைக்கே உரிய
நாணம் தடைபோட…
திடுமென விலகினேன்….
உன் கிறக்க குரல்
என் பின்னே தொடர்ந்தது…
ஏதோ ஒரு வெறுமை மனதில்…
விலகிவிட்டோமே என்று
எண்ணிய மாத்திரத்தில்…
என் விரல்களைப்
பற்றிக்கொண்டது உன் விரல்கள்…
திரும்பவில்லை நான்…
அடுத்த இதழ் தீண்டல்
என் விரல்களில்…
நடுக்கத்துடன் பெற்றுக்கொண்டு
முணகினேன் வேண்டாம் என…
விரல் சுண்டி இழுத்த வேகத்தில்
உன் மேல் மோதாமல்
சுதாரித்து தள்ளி நின்றுவிட்டேன்…
நூல் அளவு இடைவெளி தான்
உனக்கும் எனக்கும்…
எங்கே என்னைத் தீண்டிவிடுமோ
உன் மூச்சுக்காற்று???
பயத்தில் உடல் தூக்கிப்போட,
உன்னை விட்டு ஓரடி எடுத்துவைத்தேன்…
உன் நீண்ட கரங்கள்
என் கைகளைப் பிடித்து இழுத்தது…
அடுத்த கணம்
பூமாலை போல்
உன் மார்பில் சரிந்தேன்…
பற்றிக்கொள்ள கொழுகொம்பாய்
நீ கிடைத்ததும்
கொடிபோல் பரவி விட்டேன்
உன் நெஞ்சமதில்…
என் இடைகளில் தவழ்ந்தது
உன் கரங்கள்…
கூச்சம் தடை போட
விலக்கிய என் செயலை,
அடக்கினாய் நீ….
என்னை உன் கைச்சிறைக்குள்…
நாணங்கள் படைஎடுத்து சூழ,
உன் மஞ்சத்தில் என் முகத்தை
ஆழமாக புதைத்தேன்…
இன்ப வெள்ளத்தில்
நான் மூழ்கி
கொண்டிருக்கும் நிமிடம்…
என் முகம்
நிமிர்த்த பார்த்தாய்…
மறுத்தேன்…
பலவந்தமாக என் முகத்தை
கைகளில் ஏந்தினாய்…
நீர் துளிக்காக
காத்திருக்கும் நிலம் போல்…
உன் ஒரு துளி முத்தத்திற்காக
ஏக்கத்துடன் நின்றேன்…
கொட்டும் மழைச்சாரலாய்…
என் முகமெங்கும்
முத்த மழை பொழிந்தாய்…
புயலில் சிக்குண்டதை போல்
கட்டுண்டு கிடந்தேன்…
விழி மூடி
கிறங்கினேன்….
மகிழ்ந்தேன்…
தாயின் சிறகுக்கடியில்
அடைக்கலம் தேடும்
சிறு பறவை போல்…
உன் மார்பிலே
தஞ்சம் புகுந்தேன்
மறுபடியும்…
மெல்ல அணைத்தாய்…
உன் விழி பார்க்க செய்தாய்…
காதலுடன் குறும்பும்
மின்னியது உன் பார்வையில்…
நெற்றியில் விழுந்த
கூந்தல் சுருளை ஒதுக்கிவிட்டாய்…
கன்னங்களை வருடினாய்…
தாங்கினாய்…
மூடிய இமைகளுக்குள்
போராடிக்கொண்டிருந்தேன்…
இமைகள் அடித்துக்கொண்டது
பட்டாம்பூச்சியின் சிறகை போல்…