மிகச் சின்ன முறுவலாக ஆரம்பித்த அந்த மென்னகை அரசுவின் முகத்தை முழுவதுமாக மலரச் செய்து விட்டது.அன்றைக்கு அப்படித்தாண்டா நான் சும்மா உங்களுக்காக காத்துக் கிட்டு இருந்தேனா....
எதிர்ல வந்த அவ......அவதான் பனியரசி .....என் அரசிடா எங்கிட்ட வந்து பேச ஆரம்பிச்சிட்டா...
எனக்கு முதலில் ஒன்னுமே புரியல...
அப்போதான் சொல்றா,
"ப்ளீஸ் ஏதாவது பேசிக்கிட்டு இருங்க ஒரு ஜொள்ளுகிட்ட இருந்து எஸ்கேப்பாகி இங்க வந்திருக்கேன்னு...."
அது யாருடா அந்த ஜொள்ளுன்னு பார்த்தா ...அது நம்ம பரசு.......கூட்டத்திலிருந்த பரசு கோபத்தில் எழவும்.
மற்ற நண்பர்கள் தம் சிரிப்பை மறைத்தவாறே "சும்மா உக்காருடா இப்போ அவங்க நம்ம சிஸ்டர். என்ன இருந்தாலும் வலிய வலியப் போயி பேசினா எந்தப் பொண்ணும் அப்படித்தான் சொல்லுவாங்க"..
போக வழியில்லாமல் முணுமுணுத்துக் கொண்டு அமர்ந்தான் பரசு.
அதற்குமேல் அங்கு அரசுவின் வாய்ப்பேச்சு தொடரவில்லை, நிகழ்ந்தவற்றை சிந்தித்தவாறே எங்கோ கனவுலகில் மிதக்க ஆரம்பித்தான் அவன். அவன் நண்பர்களும் அவனை தொந்தரவுச் செய்யாமல் தங்கள் பேச்சுக்களைத் தொடர்ந்தார்கள்.
அதென்ன அவனைப் பார்த்து ஜொள்ளுன்னு சொல்லிக்கிட்டு எங்கிட்ட வந்து பேசறீங்க, ஏன் நானும் கூட ஜொள்ளா இருக்கலாமே.
ச்சே ச்சே நீங்கள்லாம் அப்படி இருக்க முடியாது........
ஆச்சரியமாய் அவளை நோக்கினான் அரசு.
"நான் கூட முதல் தடவை காலேஜ் சேர்ந்தப்போ எல்லோரும் உங்களைக் காட்டி அவன் ரொம்ப பொல்லாதவன்னுச் சொன்னாங்க...".
"அப்புறம்"....முதல் முறையாக ஒரு பெண்ணிடம் சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்கிறோம் என்றுப் புரிந்தது அவனுக்கு.
"நானும் 2 வீக்ஸா உங்களைக் கவனிக்கிறேன்"...
இப்போது ஆச்சரியமாய் புருவம் நெரித்தான் அவன் .
"நீங்க உங்கபாட்டுக்கு வர்றீங்க போறீங்க யார் கிட்டயும் பிரச்சினை செய்தா மாதிரி தெரியலை. யாராவது வம்பு பேசினா தான் உங்களுக்கு கோபம் வரும்னு புரிஞ்சிக்கிட்டேன்."
அவன் ஆச்சரியத்தின் அளவு கூடிக் கொண்டேச் சென்றது.
"எந்த கர்ள்ஸ் கூடவும் அனாவசியமா பேசுறதும் இல்ல..அப்புறம் உங்களை ஜொள்ளுன்னு நான் ஏன் சொல்லப் போறேன்?".
பதில் பேசாமல் புன்னகைத்தான் அவன்.
"ரொம்ப நல்லவங்க மாதிரி ஆக்ட் கொடுக்கிறவங்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது தெரியுமா?. அதுக்கு உங்கள மாதிரி வெளிப்படையா நடந்துக்கிறவங்களே பரவாயில்லை.சரி அப்போ நாம ஃபிரண்ட்ஸ் ஆகிடலாமா?"
கேட்ட அவளை நோக்கி தன்னையறியாமல் இவன் கை நீண்டது.
கைக்குலுக்கி விட்டு அவன் மனதையும் பூகம்பமாய் அசைத்துச் சென்று விட்டாள் அவள்.
அவன் செய்கைக்கெல்லாம் அர்த்தம் புரிந்து அமைதி காக்கும் அம்மாவைத்தவிர உறவில் மற்றெல்லாராலும் நீ பொல்லாதவன் , கோபக்காரன், உருப்படவே மாட்ட என்னும் வெறுப்பான வார்த்தைகளால் ஒதுக்கப்படும் அவனுக்கு இந்த அங்கீகாரம் மிகப் புதியது.அப்போ நானும் நல்லவன் தானோ? என்னும் நினைவே மனதில் ஆயிரம் பூக்கள் ஒன்றாய் பூத்த மலர்வையும் , நறுமணத்தையும் பரப்பியது.
தொடர்ந்த நாட்கள் அவள் நட்பில் களித்திருந்த இனிய காலமாயிற்று.அவன் நண்பர்கள் கூட்டத்தில் எல்லோருடனும் வந்து பேசுவாள்.அவளது வெகுளியான சிரிப்பாலும், நட்புணர்வாலும் அவர்களால் மற்றப் பெண்களைப் போல அவளிடம் கிண்டலடிக்க இயலவில்லை. அரசு... அரசு என்று அவனோடு பத்து நிமிடமாவது அரட்டை அடிக்காமல் அவளால் போகவே முடியாது.
அரசுக்கும் அந்த பத்து நிமிடங்களுக்காகவே தான் நாள் முழுதும் காத்திருப்பதாக புரிய வைத்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவனால் இனியும் தன் மனதில் இருப்பதை மறைத்துக் கொண்டு இருக்க முடியும் என்றுத் தோன்றவில்லை.இன்றுக் கேட்டே ஆக வேண்டும் என்று நினைத்தவனாக அவளைத் தனியே அழைத்து தன் விருப்பத்தைச் சொன்னான்.
"நீ என்னைப் பற்றி இப்படி ஏன் நினைச்சே அரசு?" குழப்பத்தில் அவள் குரல் கம்மியதோ...
"என்னை தப்பா நினைச்சுக்காத பனி...நீ காட்டுற அன்பு முழுசா எனக்கே எனக்குன்னு வேணுமின்னு தோனுச்சு"...
"சின்ன வயசில இருந்து அன்புன்னா என்னன்னே தெரியாம வெறுமையிலேயே வளர்ந்துட்டேன். நீ எங்கிட்ட பேசுறப்போ எல்லாம் இப்படியே நீ என் கூடவே இருந்திட்டா என்னன்னு தோணும் அதனால தான் கேட்டேன்".
"உனக்கு விருப்பமில்லைனா வேண்டாம் . ஆனால் எங்கிட்ட பேசாம மட்டும் இருந்திடாத ....எங்க ஃபேமிலியில யாருக்கும் என்னை பிடிக்கவே பிடிக்காது, நானும் அதைப் பற்றி பெரிசா நினைச்சதே இல்லை. நான் இப்படி கேட்டதால நீ மட்டும் என்னை வெறுத்திடாத பனி... என்னால தாங்க முடியாது..........அந்த முரடனின் கண்களில் நீர்க் கோர்த்து விட்டிருந்தது."