கதிர்:தினமும் மூணு கட்டு பீடி குடிப்பாரு சார்,ரெண்டு கட்டிங் மட்டும் சாப்டுவாரு சார்,மத்த பழக்கம் ஏதும் இல்ல சார்.
இன்ஸ்பெக்டர்:போதும் போதும்.கொலை நடந்த ராத்திரி பாண்டி எங்க இருந்தான்?
கதிர்:சார் அன்னைக்கு ராத்திரி சுமார் 11 மணிக்கு நாங்க ரெண்டு பேரும்தான் சார் கடையை அடச்சிட்டுக் கிளம்பினோம்.அவர நேரா வீட்ல விட்டுட்டு நான் என் வீட்டுக்குப் போனேன் சார்.
இன்ஸ்பெக்டர்:தினமும் நீ தான் அவன வீட்ல விடுவியா?
கதிர்:ஆமா சார்.அவர்ட்ட வண்டி கிடையாது சார்.அவர் வீடு என் வீட்டுக்குப் போகிற வழில தான் சார் இருக்கு.அதனால் தினமும் ராத்திரி நான் தான் சார் அவர வீட்ல விட்டுட்டுப் போவேன் சார்.
இன்ஸ்பெக்டர்:அன்னைக்கு ராத்திரி அதுக்கு அப்புறம் அவன் எங்கேயாது போனானா?
கதிர்:இல்ல சார்.
இன்ஸ்பெக்டர்:அதெப்படி நீ சொல்ற?
கதிர்:அன்னைக்கு ராத்திரி 12 மணிக்கு எனக்கு அவர் போன் பண்ணார் சார் வீட்ல இருந்து.
இன்ஸ்பெக்டர்:12 மணிக்கா?ராத்திரியா?எதுக்கு?
கதிர்:ஆமா சார்.அதுக்கு முந்தின நாள் அவர் பையனுக்குப் பிறந்த நாள்னு எனக்குப் பாயாசம் கொண்டு வந்தார்.அந்த டிபன் பாக்ஸ் என் வீட்ல இருந்தது.அத மறுநாள் கொண்டு வரச் சொன்னார்.அப்போ அந்த அக்கா கூட ஏண்ட பேசுச்சு சார்.பாயாசம் எப்படி இருந்ததுன்னு கேட்டுச்சு சார்.நல்லா இருந்ததுன்னு சொல்லிடு நானும் அவங்க உடல் நலத்த விசாரிச்சேன் சார்.
இன்ஸ்பெக்டர்:சரி நீ போய்ட்டு அவன வரச் சொல்லு.
கதிர்:அவரையா சார்?வரச் சொல்றேன் சார்.
சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் அறைக்குள் வந்தார் பாண்டி அண்ணன்.
இன்ஸ்பெக்டர்:நீ தான் பாண்டியா?
பாண்டி அண்ணன்:ஆமா சார்.
இன்ஸ்பெக்டர்:உன்னைப் பத்தி கதிர் எல்லாத்தையும் சொல்லிட்டான் நீ கதிரைப் பத்தி சொல்லு.
பாண்டி அண்ணன்:அப்படியா சார்?சரி சார்.கதிர் முழுப் பெயர் கதிரேசன் சார்.ரொம்ப நல்ல பையன் சார்.ஒரு எட்டு,ஒன்பது வருசமா அவனத் தெரியும் சார்,எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது சார் அவன்ட,அப்பா கிடையாது அம்மா மட்டும் இருந்துச்சு அதுவும் 5 வருசத்துக்கு முன்னாடி செத்துப்போச்சு,ஒரே தங்கச்சி,இவன் தான் சார் கல்யாணம் பண்ணி வச்சான்.கோயம்பத்தூர்ல,மாப்ள ஏதோ மில்லுல வேலை செய்றார்.இப்போ தான் அவளுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து ஆறேழு மாசம் இருக்கும்,இவன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல.நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் இப்போதைக்கு வேண்டாம்னு சொல்லிட்டான் சார்.சுருக்கமா சொல்லனும்னா சுத்த தங்கம் சார் அவன்.
இன்ஸ்பெக்டர்:வேற ஏதாது பழக்கம் இருக்கா?
பாண்டி அண்ணன்:சத்தியமாக் கிடையாது சார்.அந்தப் பக்கமே போக மாட்டான் சார்.
இன்ஸ்பெக்டர்:திருட்டு நடந்த அன்னைக்கு அவன் எங்க இருந்தான்?
பாண்டி அண்ணனும் கதிர் கூறிய அதே சம்பவங்களை அப்படியேக் கூறினார்.
இன்ஸ்பெக்டர்:சரி போய்ட்டு வா.நான் எப்போ கூப்பிட்டாலும் நீங்க ரெண்டு பேரும் வரணும் விசாரணைக்கு.
பாண்டி அண்ணன்:சரி சார்.
11-செப்டம்பர்-2012(செவ்வாய் கிழமை)
நேரம்:காலை 10 மணி:
ஏட்டையா, பாண்டி அண்ணன் கடைக்கு டீ குடிக்க வந்தார்.
பாண்டி அண்ணன்:ஏட்டையா அந்த ரெண்டு சம்பவத்தப் பத்தி ஏதாது துப்பு துலங்குச்சா?
ஏட்டையா:ஆமாப்பா, முதல் கேசு, அது தற்கொலை தான்.அந்தப் பொண்ணுக்கு ஏதோ கள்ளத்தொடர்பு இருக்காம்.அது புருசனுக்குத் தெரிஞ்சதால தற்கொலை பண்ணிகிச்சு.ரெண்டாவது கேசு திருட்டுக் கேசு.அது ஏதோ ஒரு குடிகாரப் பய வீடு புகுந்து திருடீருக்கான்.கொஞ்சப் பணத்தைக் காணும். வீட்டு ஓனர் வெயிட் பார்ட்டினால அப்படியே டீல்ல விடச் சொல்லிட்டாரு.ரெண்டு கேசும் முடியிற நிலைமைல தான் இருக்கு.இன்னும் ரெண்டு நாள்ல file ல க்ளோஸ் பண்ணிடலாம்.
கதிர் (உள்ளே நுழைந்தவாறு):அப்போ இனி எங்கள தொந்தரவு பண்ண மாட்டேன்னு சொல்லுங்க.நக்கலாகக் கேட்டான்.
ஏட்டையா:என்னடா நக்கலா? இது இல்லேனா வேற ஒரு கேசுல நல்லா மாட்டி விடறேன் பாரு.
27-செப்டம்பர்-2012(வியாழக் கிழமை)
நேரம்:மதியம் 2.15 மணி:
கதிரும் பாண்டி அண்ணனும் பாய் கடை பிரியாணியை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
கதிரின் போன் அலறியது.எடுத்தால் மறு முனையில் தங்கச்சி.அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த கதிர்,கதறி அழத் தொடங்கினான்.