“ஹாய் ண்ணா,... அண்ணியை பார்த்து பேசினியா…?”
“யா நேஹா”
“அப்புறம்…” என்று புருவத்தை உயர்த்திய தங்கையை பார்த்தவன்,...
“வேற என்ன தெரியணும் உனக்கு…?”
“ம்ம்… சுட சுட ஜூசி நியூஸ் குடு அண்ணா…! தமிழகத்தோட இளம் பெண்களின், கனவு கள்ளனான உனக்கு, நிச்சயமாகிடுச்சுங்கற நியூஸ் கேட்டு, எவ்ளோ பொண்ணுங்க அப்செட் தெரியுமா…? நீ என்னடானா, ‘யா’ன்னு ஒத்தை வார்த்தையில் உப்பு சப்பில்லாம முடிக்கற. டீடைல்ஸ் ப்ளீஸ்...”
“என்னோட அடுத்த படத்துக்கான காஸ்ட்யூம் பத்தி பேசினோம்.”
“தோ… டா… யார் கிட்ட… எனக்கு ஒன்பது மாசத்துலயே காது குத்தி, வைரக் கம்மல் போட்டுட்டாங்க.”
“நிஜமா நேக்ஸ்… திடீர் நிச்சயம், இப்போ முடியற கட்டத்துல இருக்க படத்தோட டப்பிங் வேலை, அப்புறம் கல்யாணம்…! இப்படி அடுத்த சில மாசம் நான் ரொம்ப பிசி. இனி ஸ்வேதா தான் எனக்கு காஸ்ட்யூம் டிசைனர்னு, அப்பா வேற பத்திரிகைக்காரங்க கிட்ட வெளிப்படையா சொல்லிட்டார். அதான் இந்த மெகா பட்ஜெட், பீரியட் படத்துக்கு நிறைய வர்க் பண்ணனும். சோ அதை பத்தி மட்டும் தான் பேச நேரமிருந்தது.”
“நம்பிட்டேன் நிக்கி… நீயும், உன் வருங்கால பொண்டாட்டியும் கடமையில கண்ணா இருக்குறவங்கன்னு, நம்பிட்டேன்…! எங்க அண்ணி ஏற்கனவே அவங்களோட முதல் படத்துலையே காஸ்ட்யூம் டிசைனிங்குக்காக தேசிய விருது வாங்கினவங்க…! அவங்களுக்கு நீ பாடம் எடுக்கறியா.?”
“லூசு… ஏற்கனவே ஒரு பீரியட் படத்துக்கு ஸ்வே, விருது வாங்கிட்டா. என் படத்துல அதோட சாயல் எங்கேயும் வராம கவனமா பார்க்கணும். சோ,... கூடுதலா வேலை பண்ணனும். உனக்கு இதெல்லாம் எங்கப் புரிய போகுது.”
“எனக்கு ஒண்ணு மட்டும் நல்லா புரிஞ்சுடுச்சு நிக்கி… நம்ம அப்பா, பெரிய ப்ரொடியூசர்…! அம்மா, வெள்ளிவிழா படங்களா கொடுத்த வெற்றி இயக்குனர்…! அவங்க காம்பினேஷன்ல வந்த நீ,… இளம் புயல்…! நடிப்பு சுனாமி…! அப்போ நாளைக்கு, உனக்கு பொறக்க போற பிள்ளையை நினைச்சுப் பாரு…! அந்தக் குட்டி, பிறக்கும் போதே ‘ஸ்டார்ட்… கேமரா… ஆக்க்ஷன்’ தான்” என்று சொன்ன தங்கையை பார்த்து சிரித்தவன்,... அமைதி காக்க…
“ஆனாலும், உன்னை மாதிரி ஒரு ஆளை பார்த்ததே இல்லை டா…”
“நேஹா,... படிக்காம என்ன அரட்டை…?”
“டைரக்டரம்மா வந்துட்டாங்க… இனி நான் ஜூட்” என்று அண்ணன் காதில் முனகியவள்,... “சின்ன ப்ரேக் முடிஞ்சுது… பை ம்மா…” என்று தன் அறைக்கு போனாள்.
“ஹாய் கண்ணா…”
“ஹலோ ம்மா…”
“நிக்கி,... அந்த சுரேஷ் கொடுத்த ஸ்க்ரிப்ட்டுக்கு இன்னும் நீ பதில் சொல்லலை…?”
“ஓ காட்… மறந்துட்டேன் ம்மா… நான் இன்னும் படிக்கலை.”
“இப்படி பொறுப்பில்லாம இருந்தா எப்படி நிக்கி…? இந்த துறையில நிறைய வருஷம் நிலைச்சு நிக்கணும்னா, நாம செய்யற சின்ன வேலையில் கூட ஒரு ஒழுங்கு இருக்கணும். அப்போ தான் உழைப்புக்கேத்த உயர்வு வரும். மூணு படம் சக்சஸ் கொடுத்துட்டோம்னு, திமிர் தலைக்கேறிட கூடாது கண்ணா. உனக்கு டைம் இல்லேன்னா, அதையாவது அந்த டைரக்டர் கிட்ட சொல்லணும். இப்படி, இழுத்தடிக்க கூடாது.”
நிகிலிடம் கண்டிப்பாக பேசிய நிர்மலா, தமிழ் திரையுலகத்தின் தங்க மகள்…! ஆம்… அவர் எடுத்த எல்லா படங்களும் வெள்ளி விழா கொண்டாடியவை. குடும்பத்தோடு முகம் சுழிக்காமல் பார்க்கக் கூடிய தரமான, சிரிக்க, சிந்திக்க வைக்கும் படங்களை கொடுத்து, தனக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டம் கொண்டிருப்பவர். திரையுலகின் மேஜிக் தம்பதியர் தான் சக்கரவர்த்தி - நிர்மலா ஜோடி.
“சாரி ம்மா… இனி இந்தத் தவறு நடக்காது. நான் ரெண்டு நாள்ல அவருக்கு பதில் தரேன். இப்போவே அவருக்கு மெசேஜ் பண்ணி சொல்லிடறேன்.”
“ஹாய் நிம்மி, நிக்கி… என்ன சூடான விவாதம்” என்றவாறே மனைவியின் அருகே அமர்ந்தார் சக்கரவர்த்தி.
“ஒண்ணுமில்லைங்க…”
“நிக்கி, நாளைக்கு நம்ம ஸ்டூடியோவுக்கு மறக்காம வந்துடு கண்ணா. சாரி, சண்டே அன்னைக்கு கூட உனக்கு ரெஸ்ட் இல்லாம தொந்தரவு கொடுக்கறேன்.”
“தட்ஸ் ஓகே ப்பா. எப்படி போயிட்டு இருக்கு ஷோ…? பிசி ஷெட்யூல்னால என்னால தொடர்ந்து பார்க்க முடியலை.”
மகனிடம் நிகழ்ச்சியை பற்றிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார் சக்கரவர்த்தி.
பெற்றவர்கள் இருவரும் திரைத்துறையில் சாதனையாளர்களாக இருந்தாலும், நிகில், நேஹா இருவரையும் கண்டிப்போடு வளர்த்திருந்தார் நிர்மலா.
அவர்களின் துறையோடு இரண்டற கலந்து விட்ட புகழ், பணம், மற்றும் சில வேண்டத்தகாத கெட்ட பழக்கவழக்கங்கள் தங்கள் பிள்ளைகளை தீண்டாதவாறு கவனமாக பார்த்துக் கொண்டனர் இந்த வெற்றி தம்பதி.