தாய்க்கு வாங்கியதும், “மதி நீயும் ஒரு புடவை எடுத்துக்கோ...” என்றார் பார்வதி.
“எனகெதுக்கும்மா... நான் இனிமே எங்க கட்ட போறேன்...” என்று சுவாரசியம் அற்று கூறவும் இருவரின் முகமும் வாடிப் போனது, அவ்வளவு தான் “சரி சரி இப்படி முகத்தை வச்சுக்காதீங்க...” என்று கூறி அவளின் நிறத்திற்கு ஏற்றார்ப் போல மயில் கழுத்து நிறத்தில் ஒரு புடவையை வாங்கினர். அவளும் தன் மீது அதை வைத்து அங்கும் இங்கும் நடந்து காட்டி அழகு காட்டினாள் பெற்றோருக்கு. அவளது குறும்பில் இருவரும் சிரித்துவிட அடுத்த கட்ட வேலையை துவங்கினர்.
அடுத்து அவர்கள் காரில் ஏறியதும் கையில் அவள் எழுதி தந்த காகிதத்தை பார்த்தார் சிவம். அவள் எழுதி தந்தது வேறெதுவும் இல்லை, அவர்கள் ஒவ்வொருவரும் ஆசைப்பட்டு ஆனால் செய்யாமல் விட்ட விஷயங்களே... மனநிலை மாற்றமாக ஆசைப்பட்டது எல்லாம் செய்ய அவள் ஒதுக்கிய அன்றைய நாளின் குறிப்புகள். ஆனால் அவள் அதில் அவளது ஆசைகளை குறிப்பிடவில்லை. சிறிது யோசித்தவர் வேறு திசையில் காரை ஓட்ட கூறினார்.
“அப்பா அடுத்து எங்க போகுறோம், நான் அதுல எழுதி இருக்கும் இடத்துக்கு இப்படிப் போக கூடாதே...”
“போலாம் மதி... இங்க போயிட்டு போலாம்...”
“எங்க அப்பா?” என்ற அவளது கேள்விக்கு அவர் எதுவும் கூறவில்லை.
அவர் அவர்களை அழைத்து சென்ற இடம் ஒரு ஆடல் பயிற்சி செய்யும் இடம், கார் அதன் முன் நிற்கவும் மதியின் முகம் நடப்பதை நம்ப முடியாமல் பிரகாசம் ஆனது.
“இங்க எதுக்கு அப்பா வந்திருக்கோம்...”
“இங்க எதுக்கு வருவோம் நானும் உன் அம்மாவும் டான்ஸ் ஆடவா” என்று சிரித்துக்கொண்டே மேலே அழைத்து சென்றார். இவர்கள் இங்கு வருவதற்குள் தந்தை அவளது தோழிக்கு அறிவித்துவிட, அவள் வரவேற்க தயாராக இருந்தாள்.
“வா வா மதி... எப்படிடி அப்பாவை சம்மதிக்க வைத்த... சும்மா ப்ராக்டிஸ் கூட பண்ண விடலை இப்போ என்னடான உன்னோட சேர்ந்து ரெண்டு பேருமே வந்திருக்காங்க..” என்று தோழியும் நம்பாமல் கூறினாள். மதிக்கு நடனம் என்றால் கொல்லை பிரியம், தொலைகாட்சியில் நடக்கும் பல நடன போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் அவளுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவும் வீட்டில் அவள் கேட்ட பொழுது...
“யாரு உன்னை ஆடிஷன் போக சொன்னது... அதெல்லாம் நீ ஆட போக வேணாம்.. பெரிய பொண்ணு ஆகிட்ட டிவில போயெல்லாம் டான்ஸ் ஆட கூடாது அதெல்லாம் நமக்கு ஒத்துவராது” என்று பல காரணங்கள் கூறி செல்லவிடாமல் தடுத்துவிட்டனர்.
அன்றில் இருந்து அவள் காலேஜ் நடன போட்டியில் கூட ஆடுவதில்லை, எல்லாம் நம்ம நல்லதுக்கு தான் கூறுகிறார்கள் என்று ஏற்றுகொள்ள முயற்சித்தாள் அதுவே பழகியும் போனது.
ஆனால் இன்று திடிரென்று தந்தை இங்கு அழைத்து வருவார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அந்த நடன போட்டியில் தான் கலந்து கொள்ள முடியவில்லை ஆனால் நடனம் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு இருக்கும் ஆர்வத்தை அவர் கவனிக்காமல் இருந்ததில்லை.
பல நாள் ஆசை வெளிவரவும் பாடல்களை சத்தமாக வைத்து பின்னணியில் ஓட, அவளும் அவளது தோழியும் சேர்ந்து ஆட துவங்கினர். கலை கற்று வருவது ஒருவிதம் என்றால் ஆர்வத்தின் மூலம் வெளியே வருவது இன்னொரு விதம் அவ்வகையில் இருவரும் அனுபவித்து ஒன்றாக ஆடவும் சிவம் மயங்கித்தான் போனார். தன்னையும் அறியாமல் இருவர் ஆடுவதையும் ரெகார்ட் செய்ய துவங்கினார்.
ஆடி ஆடி வேர்த்து பொத்தென விழும் வரை ஆடினாள் மதி... களைத்து போயிருந்தாலும் அவள் மனம் முழுவதும் லேசாக மாறியிருந்தது... கண்களை திருப்பி தந்தையை பார்த்தவள் ஓடி சென்று கட்டிக்கொண்டாள். ஒருநிமிடம் இருவருக்குமே கண்ணில் நீர் கோர்த்தது.
மனசு லேசாகிவிட அடுத்து எங்கு செல்வது என்பது போல அந்த காகிதத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“மதி...”
“என்னம்மா...”
“ஆஷரமம் போலாம் மதி...” என்று வேண்டுக்கோள் போல தாய் கேட்கவும், மெல்லிய முறுவலோடு தன் தோழிக்கு அழைத்தாள்.
“மீனு... எப்பவும் ஒரு ஆஷரமம் போனும்னு சொல்வோம்ல.. அதோட அட்ரஸ் அப்பறம் போன் நம்பர் அனுப்பேன்...”
....
“அதெல்லாம் அப்படி தான்...”
....