அவர்கள் அங்கு சென்று அடைவதற்கு 1 மணி நேரம் ஆனது, அதற்குள் அவள் தனது தோழனிடம் கூறி அங்கிருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கூறி அத்துனை பேருக்கும் படிக்கும் நோட்டு புத்தகம் மற்றும் சில உபயோகப்படும் பொருட்களை வாங்கி வர சொன்னாள். வண்டி அடுத்து சென்று நின்றது அந்த ஆஷரமத்தில் தான். அவர்கள் இறங்கவும் தோழன் வரவும் சரியாக இருந்தது.. மேலும் அந்த ஆஷரமத்தின் தலைமை அதிகாரியிடம் பேசியதற்கு ஏற்ப வெளியே காத்திருந்தார்.
உள்ளே சென்று ஓவ்வொரு பிஞ்சின் முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்க்கையில் மனம் அவ்வளவு நிம்மதியாக இருந்தது. என்ன தவறு இழைத்து இந்த குழந்தைகள் இங்கு வந்தனர் என்று கடவுள் மட்டுமே அறிந்தது ஆனால் அவர்களின் வாழ்க்கையை தன்னால் ஒரு மணி நேரமேனும் மாற்ற முடியும் என்றால் அவ்வளவு திருப்தி வரும் என்று அன்று தான் முழுமையாக உணர்ந்தனர்.
ஒவ்வொரு குழந்தைக்கும் வாங்கிவந்த பொருட்களை கொடுத்து அவர்களோடு சகஜமாக பேசி பழகும் பொழுது இந்த சுகத்தையா இவ்வளவு நாள் தள்ளிப் போட்டோம் என்று இருந்தது சிவத்திற்கு.
“அம்மா... வீட்ல யாராவது இருக்கிங்களா...”
“யாருப்பா என்ன வேணும்...”
“மாங்காடு அம்மனுக்கு வேண்டுதல் பண்ணி பூஜை செய்யுறோம்மா உங்களால முடிஞ்சதை குடுங்கம்மா”
....
“என் பிள்ளைக்கு முடியமா இருக்கும்மா, உங்களால முடிஞ்ச உதவி பண்ணுங்கம்மா... உங்க வீட்ல இருக்க குறையெல்லாம் போயிடும்மா...” இப்படி உருக்கமாக பேசவும் பார்வதி கையில் வைத்திருந்த 500 ரூபாவை எடுத்துக்கொடுத்தார்.
புதியவர் கடந்து சென்றதும் வெளியே வந்த இளமதி. “அவங்க பொய் சொல்றாங்களா இல்லையானு தெரியல எந்த நம்பிக்கைல தரிங்க. இதுக்கு எத்தனை தடவை ஆஷரமம் போகலாம், நீங்க உதவி பண்ணின மாதிரியும் இருக்கும், நிம்மதியாவும் இருக்கும்னு சொல்றேன்.”
“எனக்கும் ஆசையா தான் இருக்கு மதி, உங்க அப்பா தான் எப்போ கேட்டாலும் போலாம் போலாம்னு கடத்துராங்க... பாப்போம்...” என்று இழுவையாக பதில் சொன்ன அன்னையின் வார்த்தைகள் காற்றில் கரைந்துப்போக நிகழ்காலம் வந்தாள் மதி.
ஒருவாறாக அவர்கள் மன திருப்தியோடு அங்கிருந்து கிளம்பும் பொழுது மாலை பொழுதை தொட்டிருந்தது. அடுத்து அவர்கள் மூவரும் சேர்ந்து கோவில் சென்றனர். கண்மூடி யோசித்தால் கூட அன்றைய நாளில் அவர்களால் எதுவும் குறை கண்டுபிடிக்க முடியாமல் போக, மனம் நிறைந்த நன்றிகளை கடவுளுக்கு தந்தனர்.
அருகில் அமர்ந்திருந்த தன் வயதை ஒட்டிய ஒரு பெண் அவளது கணவனுக்கு ஆசையாக திருனூர் வைத்துவிட்டு அழகு பார்க்க, அதை கண்டவளின் இதழ்களில் லேசான முறுவலும் கண்ணில் ஏக்கமும் வினாடியில் கடந்து சென்றது இளமதிக்கு. எங்கே பெற்றோர் பார்த்துவிடுவார்களோ என்று நொடியில் அவள் சுதாரிக்கும் முன் அது சிவம்மின் கண்ணில் பட்டுவிட்டது. ஒருவாறு மூவரும் வீடு திரும்ப காரில் ஏறவும், அவளை சிவம் அழைத்து சென்ற இடம் அவள் எதிர்பார்க்காதது தான். வீட்டை பார்த்ததும் கண்ணில் நீர்கோடுகள் தென்பட அடக்க கூட முயற்சிக்காமல் கதவை மெல்லமாய் தட்டினாள்.
கதவை திறந்தவனோ கதிர், அவளது கதிர்... அவளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று அவனது தாடியும் சோர்ந்த தோற்றமும் காட்டிக்கொடுக்க ஒரு நிமிடம் நம்பாமல் நின்றான். அவளை தொடர்ந்தே அவளது பெற்றோரும் வரவும் அமைதியாய் வழிவிட்டு வீட்டுக்குள் சென்றான்.
யாரும் பேசாமல் சில மணி துளிகள் கரைய, சிவம் தான் “நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க கொஞ்ச தூரம் வெளிய போயிட்டு வரோம்” என்று கூறிவிட்டு மனைவியுடன் சென்றார்.
“எப்படி மதி?”
“என்னது எப்படி?”
“என்ன சொல்லி சம்மதிக்க வச்ச?”
“நான் வீட்டுக்கு வந்தால் உடனே சம்மதிசிட்டாங்கன்னு அர்த்தமா???” என்று கிண்டலாக புருவம் உயர்த்தி எப்பதும் போல அவனை கிண்டல் செய்தவள். “சரி சரி சீக்கரம் சொல்லு உனக்கு என்ன பிடிக்கும் நான் சமைச்சு தரேன்...”
“அட பாருடா... என்ன அதிசயம் என்னைக்கும் இல்லாத அதிசயம்... சரி இரு சொல்றேன்” என்று கிண்டல் செய்ததோடு பலமாக யோசித்தான்.
“ஹலோ ஹலோ என்ன பெரிய யோசனை சும்மா ஒரு டிபன் வகையாய் சொல்லு பெருசா யோசிக்காத எனக்கு நேரம் இல்லை சீக்கரம் போகணும்.”
“ஹே அதான் அவங்களே ஒன்னும் சொல்லலை நீ ஏன் ஓவரா சீன் போடுற...” என்று கிண்டல் செய்து பல நாட்களுக்கு பிறகு சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். பேசியபடியே இருவரும் சேர்ந்தே சமைத்துவிட ஒரு மணி நேரத்தில் பெற்றோரும் வந்து விட்டனர்.
தந்தையின் அருகில் சென்றவள், “அப்பா... இங்கேயே சாப்பிட்டுட்டு போகலாம்ப்பா...”
...
“ப்ளீஸ்பா”