'விசேஷம்.. வந்து..'
'தெரியும்டா டேய்... உன் விசேஷமெல்லாம் எனக்கு தெரியும்டா...' சிரித்தான் கௌஷிக். கொஞ்சம் திடுக்கிட்டு தான் போனான் கார்த்திக்
'அது... நான்... சாரிடா..'
'போடா... லூசு...' என்றபடி அவன் அருகில் வந்து அமர்ந்து அவன் தோள் அணைத்துக்கொண்டான் கௌஷிக் 'சந்தோஷமா இருடா. உன் வொய்ஃபையும் சந்தோஷமா பார்த்துக்கோ...' ஒரு முறை ப்ரியாவின் மீது பார்வை பதித்து விலக்கி கார்த்திக்கின் திரும்பி சொன்னான்... கார்த்திக்கின் மனதை நன்றாக அறிந்திருந்த அவனது உயிர் நண்பன்.
கார்த்திக் கொஞ்சம் தயக்கதுடன் அவன் முகம் பார்க்க 'நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் நீயும் சந்தோஷமா இருக்கணும்டா' என்றான் கௌஷிக். ஒரு அழமான மூச்சுடன் கண்களை மூடிக்கொள்ளும் ப்ரியாவின் பக்கம் சென்று வர தவறவில்லை கௌஷிக்கின் பார்வை.
சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்து விட்டு கிளம்பினார் இருவரும். இந்த முறை டாக்ஸியில் பின் சீட்டில் இருவரும் அருகருகே அமர, சந்தோஷ புன்னகை கௌஷிக்கின் முகத்தில்.
டாக்ஸி நகர ஆரம்பிக்க, எதுவுமே நடவாதது போல் ஜன்னலின் வெளியே பார்வையை பதித்திருந்தாள் ப்ரியா. அவள் இதழ்களில் குறும்பும், மகிழ்ச்சியும் கலந்த இள நகை. அவளை அள்ளிக்கொள்ளத்தான் விழைந்தது கார்த்திக்கின் உள்ளம். காரில் டிரைவரை வைத்துக்கொண்டு என்ன செய்வதாம்???
வாழ்வெனும் கோலங்கள் இன்று
வரைந்தது உன் பொன்உள்ளம்
நெகிழ்ந்தது என் பெண் உள்ளம்
பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது டாக்ஸியில்
'மத்தியானமே என் பொண்டாட்டி சாப்பிடலை. இப்போ ஹோட்டல்லே சாப்பிட்டு வீட்டுக்கு போறோமாம்'. என்றான் மென் குரலில்....'
'எனக்கு பசிக்கலை..'
'அதெல்லாம் பசிக்கும்..'
சாப்பிட்டு முடித்து வீடு வந்து சேர்ந்த மறுநொடி அவனது கைச்சிறையில் இருந்தாள் அவள். அவனுக்குள் நிறைந்திருந்த காதல் மொத்தமும் முத்தமழையாய் பொழிந்தது அவள் மீது. நான்கு கண்களிலும் அருவி.
ஈத்திசை பூபாளம் என்று
எழுந்தது பார் நம் கானம்
விடிந்தது நம் செவ்வானம்.
இரண்டு இதயங்களும் ஒன்றோடு ஒன்று கரைந்து, மகிழ்ந்து கலந்து கொண்டிருந்தன அங்கே....
'கூந்தல் மீது பூவாய்
நானும் உன்னை சூட
தோகை உன்னை நான்தான்
தோளில் இன்று வாங்க
உனக்கென நான் பிறந்தேன்
அதே நேரத்தில்...தனது தோழி கீதா வீட்டின் முன்னால் தனது காரை நிறுத்தினான் கௌஷிக்.
'ரொம்ப தேங்க்ஸ் கீதா... கொஞ்ச நேரம் என் மனைவியா நடிச்சதுக்கு...'
'தேங்க்ஸ் எல்லாம் எதுக்குடா. பட் ஒய் கௌஷிக்??? அதுதான் எனக்கு புரியலை.'
'நான் இந்த பொய்யை சொல்லலைன்னா அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்க மாட்டங்க கீதா. எனக்கு கார்த்திக்கை பத்தி நல்லா தெரியும்..' அவன் நிதானமாக சொல்ல இமைக்க மறந்து அவனையே பார்த்திருந்தாள் கீதா.
'தப்பெல்லாம் என் மேலே தான் கீதா. அப்பா இறந்ததும் நான் தங்கச்சியை ஹாஸ்டல்லே சேர்த்திட்டு....நான் யூ. எஸ்.... போயிட்டேன். பணம் சம்பாதிக்கறது ஒண்ணுதான் என் குறியா இருந்தது அப்போ. பைத்தியக்காரன் மாதிரி வேலை பார்த்தேன்.. நிறைய பணம் சம்பாதிச்சு தங்கச்சி கல்யாணம் முடிச்சிட்டுதான் என் காதலை, வாழ்கையை பத்தி யோசிக்கணும்ன்னு ஒரு வைராக்யம். அதே நேரத்திலே ப்ரியாவை பத்தியும் கொஞ்சம் யோசிச்சு இருக்கணும் இல்லையா....' கொஞ்சம் நிதானித்து ஒரு ஆழமான மூச்சை எடுத்துக்கொண்டான் கௌஷிக்.
'நான் யூ.எஸ்லே எங்கே இருக்கேன்னு கூட இவங்களுக்கு தெரியாது. ஏன்? என்னோட பழைய ஃபிரண்ட்ஸ் யாருக்குமே தெரியாது கீதா. ஐ. டுக் ப்ரியா ஃபார் கிராண்ட்டெட். அவ எப்படியும் எனக்காக காத்திருப்பான்னு ஒரு நம்பிக்கை. அவ கிட்டே ஒரு தடவை கூட பேசலை கீதா. அதுதான் பெரிய தப்பு.
'இப்போ மூணு மூன்றரை வருஷம் கழிச்சு நான் போன வாரம் இந்தியா வந்தப்போ தான் சில ஃபிரண்ட்ஸ் மூலமா இவங்க கல்யாணம் பத்தி தெரிஞ்சது, அதுக்கு முன்னாடி எனக்காக, என்னை தேடி கார்த்திக் எவ்வளவு அலைஞ்சான்னு புரிஞ்சது...'
சில நொடி மௌனதிற்கு பிறகு தொடர்ந்தான் 'எனக்கு கார்த்திக் பத்தி தெரியும். அவன் என்ன மனநிலையில அவளுக்கு தாலி கட்டி இருப்பான்னு எனக்கு தெரியும். இப்போ எப்படி வாழ்ந்திட்டு இருப்பான்னும் தெரியும். எல்லாத்தையும் சரி பண்ண ஒரு சின்ன பொய். அவ்வளவுதான். இப்போ எல்லாம் சரியாயிடுச்சு..' கண்சிமிட்டினான் கௌஷிக்.
பேச்சே எழவில்லை கீதாவிடம். மௌனமாக காரை விட்டு இறங்கி ஜன்னலருகே வந்தவள் பெருமூச்சுடன் கேட்டாள். 'சரி உனக்கு எப்போ கல்யாணம்???'
'எனக்கு என்ன அவசரம். அடுத்த ஜென்மத்திலே பண்ணிக்கலாம்..' என்று சிரித்துக்கொண்டே கண்சிமிட்டி விட்டு, காரை எடுத்துக்கொண்டு பறந்த கௌஷிக் சென்ற திசையையே வியப்புடன் பார்த்திருந்தாள் கீதா.
Manathai Thotta ragangal - 08 - Malare mounama
{kunena_discuss:748}