தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 16 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ப்ரியா மேகத்தை பார்த்து ரசிப்பதாக காட்டிக் கொண்டாலும், பேச்சை தொடராமல் தவிர்க்க தான் அவள் அப்படி அமைதியாக இருக்கிறாள் என்பதை வர்ஷா புரிந்துக் கொண்டாள்... சில வினாடிகளுக்கு முன் ப்ரியா ரசனை கலக்க பேசிய விதம் வர்ஷாவின் மனதில் நிழலாடியது... அதனால் ப்ரியாவை மீண்டும் இப்படி ‘அமைதி சொரூபிணி’ ஆக விட்டு விட வர்ஷாவிற்கு மனம் வரவில்லை... யோசித்து, வர்ஷாவே பேச்சை தொடர முனைந்தாள்.
“நீங்க ரொம்ப சிம்பிள் ப்ரியா... ஹேர் அழகா இருக்குன்னு சொல்றேன்... அதை இவ்வளவு ஈஸியா எடுத்துக்குறீங்க...”
ப்ரியாவிற்கு வர்ஷாவின் முயற்சி புரிந்ததோ, என்னவோ, மீண்டும் வர்ஷாவை பார்த்து மெலிதாக புன்னகை மட்டும் புரிந்தாள்...
பால்கனியின் ஓரம் இருந்த மஞ்சள் நிற ரோஜா செடியில் பூத்து நின்ற அழகிய மலர் ஒன்றை பறித்த வர்ஷா, அதை ப்ரியாவிடம் நீட்டினாள்.
“இந்த எல்லோ ரோஸ் உங்க ஹேருக்கு அழகா இருக்கும் ப்ரியா, வச்சுக்கோங்க...”
“இல்லை வர்ஷா, நான் பூ வைக்குறதில்லை... எனக்கு வேண்டாம்... நீங்க வச்சுக்கோங்க... உங்களுக்கு அழகா இருக்கும்...”
சாதாரணமாக பேச முயன்றாலும், ப்ரியாவின் முகமும், குரலும் மாறிய விதம் வர்ஷாவை யோசிக்க வைத்தது! ப்ரியா எதனால் பூ வேண்டாம் என்று சொல்கிறாள் என்று அவளுக்கு ஒரு ஐடியா இருந்ததால், ப்ரியாவின் மனதை மாற்றி விடுவது என்ற முடிவிற்கு வந்தாள்!
“ப்ரியா, இவ்வளவு நாள் நீங்க பூ வைக்கலை, அவ்வளவு தானே? இன்னைக்கு வைங்க...”
ப்ரியா அமைதியாக நின்றாள்... ஆனால், அவள் பொறுமையை கஷ்டப்பட்டு இழுத்து பிடித்து வைத்துக் கொண்டிருப்பது வர்ஷாவிற்கு புரிந்தது! அவளை இயல்பாக்க விரும்பி சிரிப்பு மின்ன பேசினாள்!