”இதுக்குத்தான் இவளை காலையில கூட்டிட்டு போன்னு சொன்னேன்”
”காலையில கூட்டிட்டு போயிருந்தாலும் அந்தாளு என்ன மாத்தியா சொல்ல போறான்”
”நான் அந்தாள் கிட்ட பேசியிருப்பேன்ல”
”நீ வேற அந்தாளு மனுசனே கிடையாது பாவம் கூட பார்க்காம இவளை கடல்ல போய் விழுங்கறான் சுனாமி இவனை மட்டும் எப்படி விட்டிச்சின்னு தெரியல அண்ணா”
”போதும் கிளம்பு நம்ம வீட்டுக்கு போலாம்” என அவளை தன் ஜீப்பில் உட்காரவைத்துவிட்டு வேகமாக வீட்டிற்கு ஓட்டலானான். அர்ஜூனும் காரை எடுத்துக்கொண்டு பின் தொடர்ந்தான்.
வழியில் நந்தினி அழுதாளே தவிர ஒரு வார்த்தை கூட பேசவில்லை அது அவனுக்கு என்னவோ போல் இருந்தது. அவனாலும் அவளை எப்படி சமாதானம் செய்வது என தெரியாமல் கோபமாக வண்டியை ஓட்டி வீட்டை அடைந்தான். வீட்டை அடைந்ததும் மெதுவாக இறங்கி வீட்டுக்குள் சென்ற நந்தினி ஹாலிலேயே நின்று கொண்டாள்.
உள்ளே வந்த ரிஷி அவளிடம்
”வா மேல கெஸ்ட் ரூம் இருக்கு அங்க போய் தங்குவ” என அவளை அழைக்க அவள் ஒரு இன்ச் கூட அசையவில்லை அதை பார்த்த அவனுக்கு குழப்பம் வந்தது
”என்னாச்சி உனக்கு வா” என அழைக்க அவளோ
”இல்ல நான் வரலை நான் போறேன்” என விசும்பிக் கொண்டே பேசலானாள்
”எங்க போற”
”எங்கயாவது போறேன்”