”அதான் எங்க போறன்னு கேட்கறேன்”
”தெரியல”
”தெரியாம எங்க போற எங்கயும் போக வேணாம்”
”இல்ல நான் இங்கிருக்கறது தப்பு, இது உங்க வீடு நான் எதுக்கு” என அவள் பேசவும் அவளது பேச்சில் ஏதோ ஒன்று குறைவதை கண்டவன்
”இப்ப நீ என்ன சொன்ன” என கேட்டான்
”என்னால உங்களுக்கு கஷ்டம் வேணாம் நான் போறேன்”
அவள் பேச்சில் அத்தான் என்பது காணாமல் போயிருப்பதை கண்டவன் ஒரே எட்டில் அவளை திருப்பி அவளது முகத்தை கோபமாக பார்த்துவிட்டு
”காலையில இருந்து அத்தான் அத்தான்னு கூப்பிட்ட, இப்ப என்னாச்சி ஒரு முறை கூட கூப்பிடல ஏன்? காரணத்தை சொல்லு” என கத்தவும் அவன் கத்திய குரலை கேட்டு வேகமாக உள்ளே வந்தான் அர்ஜூன்.
”அண்ணா அவளை என்ன செய்றீங்க விடுங்க, அவளே பாவம் அந்தாளு திட்டிட்டார்ன்னு மனசு உடைஞ்சிப் போய் அழறா, அவளை போய் திட்டறீங்க விடுங்கண்ணா” என அதட்டவும்
அவனும் சற்று விலகி தன் அறைக்கு சென்றுவிட்டான். அவன் கோபமாக செல்வதை கண்டவள் மீண்டும் அழ ஆரம்பிக்க அர்ஜூன் அவளிடம்
”இதுக்குதான் நான் காலையில இருந்து அடிச்சிக்கிட்டேன் கேட்டானா, சரி வா உனக்கு ரூமை காட்டறேன், நீ எந்த முடிவு வேணும்னாலும் எடு ஆனா அதை காலையில எடு, இந்த ராத்திரியில வேணாம்” என கூறவும் அவளும் சரியென தலையாட்டிவிட்டு அவனோடு நடந்தாள்.