தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 12 - சசிரேகா
டிபன் சாப்பிட்டு எழுந்த தாத்தா அந்த 4 பெண்களையும் அழைத்தார்
”சோனா, வந்தனா, மிருதுளா, நந்தினி இங்க வாங்க” என சொல்ல அவர்களும் வந்தார்கள்.
”கவனமாக கேளுங்க மதியம் 1 மணிக்கு சாப்பாடு தயாராயிருக்கனும். இதுவரைக்கும் வேலைக்கு போறவங்க அங்கயே சாப்பிட்டாங்க ஆனா இந்த முறை நான் அவங்களையும் வீட்டுக்கு வந்து சாப்பிட சொல்லிட்டேன். அதனால அவங்க 1 மணிக்கு வந்துடுவாங்க நீங்க அதுக்குள்ள சமைச்சிடுங்க. இப்பவும் சொல்றேன் சரியான அளவில சமைங்க பத்தும் பத்தாமயும் சமைக்க கூடாது அதுக்காக அதிகமாகவும் சமைக்க கூடாது. நிறைய டிஷ்கள் சமைக்க வேணாம் ஒரு டிஷ் போதும். தனித்தனியா சமைங்க அடுத்தவங்களை பார்க்காம சமைங்க உங்க திறமையை காட்டுங்க” என சொல்லிவிட்டு சென்று ஹாலில் அமர்ந்துக்கொண்டார். ரிஷியும் வந்து அமர அவனுடைய தந்தை அவனை அழைத்தார்
”டேய் வாடா ஆபிஸ்க்கு போலாம்”
”ஏன் ஏதாவது மீட்டிங் இருக்காப்பா” என்றான் ரிஷி
“இல்லை”
“அப்புறம் ஏன் கூப்பிடறீங்க”
“இந்த கருணாவும் தினாவும் 1 மாசம் லீவு எடுத்துக்கிட்டாங்க”
“எதுக்காக”
“இந்த 1 மாசம் வீட்ல நடக்கப்போறதை பார்ப்பதற்க்காம்” என்றார் மோகனசுந்தரம்
“ஓ சூப்பர் அப்ப மொத்த வேலையும் நீங்கதான் செய்யனுமா”
“அதுக்குத்தான் துணைக்கு கூப்பிடறேன் வாடா”