தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 02 - சசிரேகா
விடிகாலை நேரம் சூரியன் மெல்ல தன் ஒளியை வீசிக் கொண்டிருக்க அந்த ஒளியால் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட ரோஜா செடிகள் புத்துணர்ச்சியடைந்தது. அதிலும் பனிதுளிகளால் மூடப்பட்ட ஒரு ரோஜா மொட்டு மெல்ல மெல்ல ஒவ்வொரு இதழாக விரிய பூக்க தொடங்க அந்த பூ பூக்கும் அந்த தருணத்தை காண்பதற்காகவே அதற்கு வெகு அருகில் அமர்ந்துக் கொண்டு ரசித்துப் பார்த்தாள் ரோஜா. எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ அந்த பூ மொட்டில் இருந்து விரிந்து பூவாக மலர மலர அவளின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. ஒருவழியாக பூ மலர்ந்ததும் ஏய்ய்ய்ய் என சந்தோஷமிகுதியில் கூச்சலிட்டாள்
அவள் நட்டுவைத்த ரோஜா செடியில் பூத்த முதல் ரோஜா பூ என்பதால் அவளின் உற்சாகம் அதிகமானது
”தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, எல்லாரும் வாங்க சீக்கிரமா வாங்க” என அழைக்க உள்ளிருந்து அனைவரும் என்னவோ ஏதோவென வந்து பார்த்தார்கள்.
”வாங்க வாங்க வந்து பாருங்க நான் வைச்ச செடியில இருந்து முதல் ரோஜா பூ மலர்ந்திருக்கு வந்து பாருங்க” என சொல்ல மற்றவர்களுக்கு அவளின் செயல் வேடிக்கையாக இருந்தது
”இதுக்காகவா இப்படி ஒரு கூச்சல் போட்ட, நாங்க என்னவோ ஏதோன்னு பயந்து வந்தோம்” என தாத்தா சொல்ல அதற்கு ரோஜாவோ
”ப்ச் என்ன தாத்தா என்னோட சின்ன சந்தோஷத்தை உங்களோட பகிர்ந்துக்கலாம்னு பார்த்தேன் நீங்க என்னடான்னா அலுத்துக்கறீங்க“
”அலுத்துக்காம என்ன செய்யச் சொல்ற, தோட்டம் முழுக்க ரோஜா செடிகளை நட்டு வைச்சிருக்க, ஒவ்வொரு நாளும் ஒரு கூடை அளவுக்கு பூ பூக்குது இதுல புதுசா ஒரு செடி வைச்சி அதுல ஒரு பூ பூத்ததும் என்னவோ இதுதான் முதல் முறைங்கற மாதிரி சந்தோஷப்படற, எப்பவுமே நடக்கறதுதானே” என பாட்டி சொல்ல அதற்கு ரோஜாவோ