"ஏன் நிறுத்தனும்?"
"என்ன...” என எதுவோ சொல்லத் தொடங்கிய ப்ரியா மனதை மாற்றிக் கொண்டவளாக, “ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க, இதெல்லாம் சரியா வராது," என்றாள்.
அவள் சொன்ன வார்த்தைகளில் தோய்ந்திருந்த வருத்தத்தைப் புரிந்துக் கொண்டவனாக அவளை ஆழமாகப் பார்த்த விக்கிராந்த்,
"என்ன சரியா வராதுன்னு நினைக்குற நீ?" என்றான்.
அதுவரை பேச்சில் இருந்த போலி மரியாதை பன்மையை அவன் விட்டதோ, அல்லது, அவனின் கேள்வியில் இருந்த அழுத்தமோ, ப்ரியாவை நிமிர்ந்துப் பார்க்க வைத்தது!
"எதுவுமே சரியா வராது! நீங்க சொல்ற மாதிரியான வாழ்க்கை எல்லாம் எனக்கு செட் ஆகாது. அதும் உங்க ஃபேமிலி மாதிரி ஒரு ஸ்வீட் ஃபேமிலில நான்... ஹுஹும்... வேண்டாம்..."
"ஏன்?"
"உங்களுக்கு தான் எல்லாம் தெரியும்னு சொல்றீங்களே அப்புறமும் ஏன் என்னை இப்படி ஏன், ஏன்னு கேட்டு என்னை கொடுமைப் படுத்துறீங்க? எனக்கு இது எதுவும் பிடிக்கலை அவ்வளவு தான்!"
ப்ரியாவின் குரலில் இருந்த கோபமும், விரக்தியும் அவனை தாக்க, சிறிது நேரம் அமைதியாக இருந்தான் விக்கிராந்த். அவளின் மனநிலை புரிந்ததால், இந்தப் பேச்சை தொடராமல் விட்டு விடலாமா என்ற எண்ணம் கூட அவனுக்குள் எழுந்தது. அவளாக கல்யாணம் எக்ஸட்ரா எக்ஸட்ரா பற்றி எல்லாம் யோசித்து முடிவெடுக்க சொல்லி விடலாமா, என யோசித்தவன்... இறுதியாக, ஒரே ஒரு தடவை அவளிடம் மனம் விட்டு பேசி விடுவது என முடிவு செய்தான்!
"இதை நாம பேசி ஆகனும் ப்ரியா! இந்த ஒரே ஒரு தடவையாவது பேசியே ஆகனும்," என்றான் மிருதுவான ஆனால் திடமானக் குரலில்.