அவள் சொல்லாமலே அவள் ஆசைகளை நிறைவேற்றும் அவன்... அவன் மனதில் நினைக்கும் முன்பே அவனை புரிந்து செயலாற்றும் அவள்...
கண்களை திறந்து வைத்துக் கொண்டே கலர் கலர் கனவுகளை கண்டவன், மெல்ல அந்த கனவுகளின் நடுவே தூங்கிப் போனான்!
🌼🌸❀✿🌷
ஒன்றிரண்டு வாரங்களிலேயே தியாகுவும், கிருத்திகாவும் அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தார்கள்.
அவர்கள் இருவர் மட்டும் வசிக்கும் தனி வீடு என்பதால் கிருத்திகாவின் கண்டிஷன்களால் வேறு பிரச்சனைகள் வரும் என்று தியாகு நினைக்கவில்லை.
அவளுக்கு அவன் மீது அன்பு இருக்கிறது என்று நம்பினான்! அவளின் சிறு பிள்ளைத்தனமான பிடிவாதத்தை உடைத்தால் தான் அவளின் மனதை வெளிப்படையாக உணர முடியும் என்று புரிந்துக் கொண்டு அவன் பொறுமையாகவே நடந்துக் கொண்டான்!
ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை தான்...
ஜென்டில்மேனாக காத்திருக்கிறேன் என்று சொல்வது என்னவோ சுலபமாக தான் இருந்தது... ஆனால் அதை செயல்படுத்துவது தியாகுவிற்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது.
மனதிற்கு பிடித்த அழகான மனைவி கண்ணெதிரே நடமாடும் போது எந்த வித ரியாக்ஷனும் இல்லாமல் இருக்க அவன் ஒன்றும் முற்றும் துறந்த துறவி இல்லையே.
அதிலும் கிருத்திகா தினமும் காலையில் குளித்து விட்டு குருவிகளுக்கு தானியங்கள் வைத்து செல்லம் கொஞ்சுவதாகட்டும், ஆஃபிஸ் செல்லும் போது அங்கே தோட்டத்தில் இருக்கும் பூக்களை பார்த்து பேசுவதாகட்டும்... தியாகுவின் ‘கீர்த்தி மயக்கம்’ அதிகமாகிக் கொண்டே தான் இருந்தது.