“என்ன என்ன. எதுக்கு இப்ப இப்படி ஷாக் ஆகரீங்க. உங்களுக்கு இப்படி ஒரு அழகான பொண்ணு மாமா பொண்ணா இருக்கறதை உங்களால நம்ப முடியலையா” என்றாள்.
“அண்ணி விளையாடாதீங்க. யாரு இவங்க அதை முதல்ல சொல்லுங்க”
“சரி சரி. டென்ஷன் ஆகாதீங்க. அத்தை இருக்காங்க இல்ல. அதான் உங்க அம்மா. அவங்க தம்பி மோகன் சித்தப்பாவோட பொண்ணு தான் இவ பவித்ரா. அதாவது தங்களின் மாமா பெண். போதுமா விளக்கம்”
சந்துருவிற்கு முன் இருந்த குழப்பங்கள் எல்லாம் மறைந்து புது குழப்பங்கள் வந்து சேர்ந்தது.
“என்ன சந்துரு. என்னாச்சி.”
“ஒன்னும் இல்லை அண்ணி.”
“சரி சரி”
அதற்குள் லக்ஷ்மியும், பவித்ராவின் தந்தையுமான மோகனும் அங்கே வந்து சேர்ந்தனர்.
லக்ஷ்மி மோகனிடம் “தம்பி இது தான் சந்துரு. உங்க அக்காவோட ரெண்டாவது பையன்” என்றார்.
உடனே உணர்ச்சி வசப்பட்டவராக அவனை வந்து அணைத்துக் கொண்டார் அவர்.
சந்துருவிற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை. அவனும் சிறிது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தான் இருந்தான். இருந்தாலும் அவனால் சகஜமாக இருக்க முடியவில்லை.
அதை உணர்ந்தவர் போல அவர் பேச ஆரம்பித்தார் “வயசுல தப்பு பண்ணிட்டு அதோட வீரியம் அப்ப தெரியறதில்லை. ஆனா வயசு போன பிறகு தான் நாம பண்ண தப்பு எல்லாம் கண்ணு முன்னாடி வந்து நிக்குது. ஆனா எனக்கு இப்பவும் எங்க அக்கா முகத்தை எப்படி போய் பார்க்க போறேன்னு தெரியலை” என்றவராய் கண் கலங்கினார்.
அங்கிருந்த அனைவருக்குமே மனது பிசைந்தது.
“விடுங்க மாமா. போனதெல்லாம் போகட்டும். இப்ப ஏதோ நல்ல நேரம். அதான் நாம எல்லாம் ஒவ்வொருத்தரா ஒன்னா சேர்ந்திட்டிருக்கோம்.”
“ஆமா மாப்பிள்ளை” என்றார் அவரும் தெம்பாக.
எதேர்ச்சையாக திரும்பியவனின் கண்கள் பவித்ராவின் கண்களோடு கலந்தது.
அவனால் அவள் கண்களை பார்க்க முடியவில்லை. ஏதோ தவறு செய்வதை போல் அவன் மனது உறுத்த ஆரம்பித்தது.
காலிங் பெல் அடிக்கவும் “நான் போய் திறக்கறேன் அத்தை” என்று பவித்ரா ஓடி வந்து கதவை திறந்தாள்.
கதவை திறந்த பெண்ணை பார்த்து பழகிய முகம் போல் தெரிகிறதே என்று அதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் ராஜலக்ஷ்மி.
“யாரும்மா” என்றவாறே வந்த லக்ஷ்மி அங்கே திடீரென்று ராஜியை எதிர்பார்க்காததால் சிறிது திகைத்து பின்பு வரவேற்றார்.
உள்ளே நுழைந்த பின்பு தான் அங்கு தன் தம்பியை பார்த்த ராஜிக்கு அந்த பெண் யாரென்று யாரும் கூறாமலே தெரிந்து விட்டது.
திரும்ப தன் தம்பியை விட்டு விட்டு பவித்ராவின் முகத்தை பார்த்த ராஜி அதில் தன் தாயின் ஜாடை இருப்பதை கண்டார்.
எல்லோரும் எந்த பேச்சும் இன்றி அமைதியாக இருந்தனர்.
சூழ்நிலையை இயல்பாக்க “இனியா எங்கே” என்று கேட்டார் ராஜி.
“ஏன் அத்தை அவ இன்னும் வரலையே” என்றாள் ஜோதி.
“அப்படியா. அவ தான் என்னை அவசரமா இங்கே வர சொன்னா”
“அவளா வர சொன்னா. தெரியலையே அத்தை. ஆனா இன்னும் அவ ஹாஸ்பிடல்ல இருந்து வரவே இல்லை அத்தை”
“ம்ம்ம். சரி. நான் வெயிட் பண்றேன். அவ வரட்டும்”
திரும்ப கனத்த மௌனம் நிலவியது.
“அக்கா” என்று கூறிய மோகனால் அதற்கு மேல் பேச இயலவில்லை.
ராஜியும் தழுதழுத்த நிலையில் இருந்தார். ஆனால் அவராலும் ஏதும் பேச இயலவில்லை.
திடீரென்று உள்ளே நுழைந்தனர் இனியா, பாலு மற்றும் ஸ்வேதா.
மூவரும் ஒன்றாக வரவும் எல்லோருக்கும் என்னவென்று புரியவில்லை.
ஸ்வேதாவை அங்கு கண்ட சந்துருவிற்கோ ஆச்சரியம்.
ஸ்வேதாவோ அவனை நிமிர்ந்து பார்க்காமல் குனிந்த படியே நின்றுக் கொண்டிருந்தாள்.
இனியா முதலில் மோகனிடம் சென்று “சித்தப்பா எப்ப வந்தீங்க” என்று விசாரித்தாள்.
பின்பு எல்லோரும் அவர்கள் மூவரையும் கேள்வியோடு பார்த்துக் கொண்டனர்.
சிறிது நேர அமைதியை கை விட்டு இனியா தான் ராஜலக்ஷ்மியிடம் “அத்தை உங்க கிட்ட பேசணும்” என்றாள்.
“சொல்லும்மா”
“அத்தை உங்க பையன் சந்துருவும், ஸ்வேதாவும் விரும்பறாங்கன்னு உங்களுக்கு தெரியும் தானே” என்றாள்.
இதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் “ம்ம்ம்” என்று மட்டும் சொன்னார்.
“அத்தை அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க. ஸ்வேதாவுக்காக சந்துரு சூசைட் பண்ற அளவுக்கு போனார். ஆனா அதுக்கப்பறமும் ஏன் அத்தை அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க கூடாது”
பாலுவும் ஆம் என்பதை போல் தலையசைத்தான்.
அங்கிருந்த மற்ற அனைவருக்கும் இது எல்லாம் ஒரு புது செய்தி. எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
பவித்ராவோ அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
சந்துருவிற்கும் அதே நிலைமை தான்.
“அத்தை எதாச்சும் சொல்லுங்க அத்தை. இந்த அளவுக்கு விரும்பறவங்களை ஏன் அத்தை பிரிக்கணும்”
“அண்ணி. ஒரு நிமிஷம் ப்ளீஸ். அண்ணன் என் கிட்ட கொஞ்ச நாள் இந்த விசயத்துல பொறுமையா இருக்க சொன்னாங்க. அதுவும் அண்ணன் இல்லாதப்ப இந்த பேச்சு எதுக்கு அண்ணி” என்றான் சந்துரு.
“நீங்க சும்மா இருங்க சந்துரு. உங்களுக்கு ஒன்னும் தெரியாது” என்றாள் இனியா.
“இப்ப ஏன் மா இப்படி அவசரமா இந்த பேச்சு. கல்யாணம்ன்றதை இப்படி ஏன் திடீர்ன்னு பேசணும். அதுவும் நீ என்னவோ இப்பவே இதை பேசி முடிக்கணும்ன்ற மாதிரி பேசற”
“அதில்லை அத்தை’ என்று அவள் பேசும் போதே இடையிட்ட அவள் தாய் லக்ஷ்மி,
“என்னடி இது. நீ ஏன் இப்படி தேவை இல்லாத விசயத்துல எல்லாம் தலையிடற. அது அவங்க வீட்டு விஷயம். அவங்க தான் அதுல முடிவு பண்ணணும்.” என்றார்.
“அம்மா. ப்ளீஸ் மா. கொஞ்ச நேரம் பொறுங்க மா. நான் எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன்” என்று கூறி விட்டு
“நீங்க சொல்லுங்க அத்தை” என்றாள்.
சிறிது யோசித்த ராஜலக்ஷ்மி “எங்க வீட்டுல எதுவா இருந்தாலும் நாங்க எல்லாம் சேர்ந்து தான் முடிவு பண்ணுவோம். இப்ப என் பெரிய பையன் இல்லாதப்ப அவன் முடிவை கேட்காம நான் எப்படி முடிவு சொல்றது. இதுல அவன் சம்மதம் எனக்கும், ஏன் சந்துருவுக்குமே ரொம்ப முக்கியம்” என்று கூறினார்.
சரியாக அந்த நேரத்தில் “எனக்கும் சம்மதம்” என்ற இளவரசனின் குரல் கேட்டது.
எல்லோரும் குரல் வந்த திசையை பார்க்க இனியா மிக அதிர்ச்சியாக அவன் முகத்தை பார்த்தாள்.
அவன் முகம் கல் போலிருந்தது.
திரும்பவும் அவள் முகத்தை பார்த்தவாறு “எனக்கும் சம்மதம்” என்றான்.
அவன் வாயில் இருந்து வந்த சம்மதம், அவன் மனதில் இல்லை என்று அவன் முகத்திலே தெரிந்தது.
சந்துருவின் பார்வையோ பவித்ராவிடம் சென்றது. அவளோ அங்கு அவனையே பார்த்தவாறு நின்றிருந்தாள்.
தொடரும்
{kunena_discuss:679}