(Reading time: 19 - 37 minutes)

 

ந்த அணைப்பு அவளை ஏதோ செய்ய அவளும் அறியாமல் 'சரிம்மா' என்றாள் அபர்ணா. அந்த அழைப்பில் மனதால் கொஞ்சம் கரைந்துதான் போனார் மைதிலி.

பூஜையறையில் மண்டியிட்டு அமர்ந்தாள் அபர்ணா. என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்னை சுற்றி.' அவளுக்கே புரியவில்லை. என்னவனின் வீட்டில் நான் விளக்கேற்றிக்கொண்டிருக்கிறேனா? சில நிமிடங்கள் முன்பு கூட இதெல்லாம் நடக்குமென நினைக்கவில்லையே.

கண்களை நிமிர்த்தி பூஜையறையில் இருந்த தெய்வங்களை சில நொடிகள் பார்த்துவிட்டு  விளக்கேற்ற துவங்கினாள் அபர்ணா.

ஏதோ வானமும், பூமியும் கைவசப்பட்டதை போல், மனம் முழுக்க சந்தோஷமும், நிறைவுமாய் அவள் விளக்கேற்ற, அவள் மனதை அப்படியே பிரதிபலித்த முகம் சந்தோஷத்தில் மிளிர்ந்தது.

எல்லார் பார்வையும் அவள் மீதே இருந்தது. கொஞ்சம் வியந்து தான் போனான் பரத். ' என் மீது இத்தனை நேசமா அவளுக்கு? இதற்கு பதிலாய் நான் அவளுக்கு என்ன தரப்போகிறேன்?

உணர்வுகள் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த மனதையும். அவர் மனதில் இருந்த குழப்பத்தையெல்லாமும் மீறி மைதிலியை ஈர்த்தது அபர்ணாவின் சந்தோஷம்.

விளக்கேற்றுவதற்கே இத்தனை சந்தோஷமா.? என் கண்ணனை மணந்துக்கொண்டால் அவனை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்ள மாட்டாளா இவள்.?

'ஒரு நொடி இதோ  பிடி என் கண்ணனை' என்று அவள் கையில் அவனை பிடித்துக்கொடுத்து விட வேண்டுமென்றே தோன்றியது மைதிலிக்கு .ஆனால் அடி மனதில் இருந்த ஏதோ ஒன்று அவரை தடுத்தது.

விளகேற்றிவிட்டு எழுந்தாள் அபர்ணா. மனதில் இருப்பதை எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் 'இரும்மா. உனக்கு காபி கொண்டு வரேன்' என்று அத்தை உள்ளே நகர்ந்தார்.

அவனை பார்த்துவிட துடித்த கண்களை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றவளை மெல்ல உரசி நின்றவன் , யாரும் அறியா வண்ணம் அவள் கைப்பற்றிக்கொள்ள தவிக்க  அவன் விரல்களை உணர்ந்து, தவிர்த்து வெகு இயல்பாய் நகர்ந்தாள் அபர்ணா. 'அவ்வளவு சீக்கிரம் என் கை உனக்கு கிடைத்துவிடுமா என்ன?

'கையை குடும்மா' அவன் முகத்தை பார்த்துக்கொண்டே அவள் கையை பற்றிக்குலுக்கினார் தாத்தா. ஏதோ ஒன்று பொங்கியது அவனுள்ளே.

டேய்... விளக்கேத்தின கைக்கு தங்க வளையல் போடணும்டா தெரியுமா உனக்கு?

ம். போடுவோம் போடுவோம் என்றான் அடிக்குரலில்.

இவன் ஏன்மா டென்ஷன் ஆறான்? என்றவர், சரி. சரி.விடு இவன் டென்ஷன் ஆனாதான் நார்மலா இருக்கான்னு அர்த்தம். என்றார்.

காபி  வந்தது. 'ரூல் நம்பர் ஒன்' என்றார் தாத்தா. நம்ம வீட்டிலே எது சாப்பிடணும்னாலும் அது காபியாக இருந்தாலும் டைனிங் டேபளிலே உட்கார்ந்துதான் குடிக்கணும் என்றபடியே அவளை டைனிங் டேபிளுக்கு அழைத்து சென்றார்.

அவள் அருகில் அமர்ந்தான் பரத். அவளுக்கும் தாத்தாவுக்கும் மட்டுமே வந்தது காபி.

நீங்க எல்லாரும் குடிக்கலையா? அத்தையை பார்த்து கேட்டாள் அபர்ணா.

'அவங்கெல்லாம் perfect பத்மநாபன்ஸ். காபி குடிக்கறதுக்கு கூட டைம் வெச்சிருக்காங்க. அந்த அந்த டைம்லே தான் குடிப்பாங்க. நாம குடிப்போம் வா'. தாத்தாவிடமிருந்து பதில் வந்தது.

அவளது  ஒரு கை காபியை ஆற்றிக்கொண்டிருக்க, டேபிளுக்கு அடியில் இருந்த மற்றொரு கையை நோக்கி அவன் மெல்ல கை நகர, அதை எப்படித்தான் தெரிந்துக்கொண்டளோ அவன் கை அவள் கையை நெருங்குவதற்குள் அவள் கை டேபிளுக்கு மேலே வந்துவிட்டிருந்தது.

அவள் இதழ்களில் சின்ன புன்னகை, ஓட 'ரா...ட்...க்ஷ..ஸி' அவள் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி  உச்சரித்தான் பரத்.

வீட்டை சுத்தி பார்க்கறியாமா? கேட்டார் தாத்தா.

இல்லை தாத்தா. எனக்கு டைம் ஆச்சு நான் இன்னொரு நாள் வரேன்.

இரு. இரு. ஒண்ணும் டைம் ஆகலை. இவன் டிராப் பண்ணுவான். நீ உங்க proffesser ரூமை பார்த்தே ஆகணும். எப்படி வெச்சிருக்கான் பார் அவன் ரூமை என்றார் தாத்தா.

அப்படியா? என்று அவன் அறைக்குள் அவள் நுழைய, அவள் பின்னாலேயே நுழைந்தான் பரத்.

அறையை சுற்றி பார்வையை சுழல விட்டாள் அபர்ணா. படுக்கை விரிப்பில் துவங்கி திரைச்சீலை வரை எல்லாவற்றிலும் அபப்டி ஒரு நேர்த்தி, இமைகள் விரய பார்த்துக்கொண்டிருந்தாள் அபர்ணா.

அப்போதுதான் பரத்தின் கண்ணில் மேஜையின் மீது இருந்த அது பட்டது. 'இது இங்கே தான் இருக்கிறதா? அதை அவள் பார்த்துவிட்டால்....?

பார்க்கட்டுமே என்றது உள் மனம். பார்த்தால் என்னவாகுமாம்? எப்படி விரியுமாம் அவள் கண்கள்.? அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் பரத்.

அவள் பார்வை மேஜைக்கு வந்தது. மேஜை மீதே பேனாவும், பேனாவுடனே மூடியும் இருந்தது. அவள் வீட்டில் இப்படியெல்லாம் இருந்ததாக சரித்திரமே இல்லை. மெல்ல மெல்ல நகர்ந்த அவள் பார்வை அதன் மீது விழுந்து, நின்ற அடுத்த நொடி வியப்பும், மகிழ்ச்சியுமாய் கண்கள் விரிய, அப்படியே பார்வை பரத்தின் பக்கம் திரும்பியது.

அதன் மீது ஒரு முறை பார்வையை பதித்து, திரும்பி  அவளை பார்த்தான் பரத். .

அதை கையிலெடுத்தாள் அபர்ணா. கிட்டத்தட்ட ஒரு நிமிடம் அதையே பார்த்தபடியே நின்று விட்டிருந்தாள் அபர்ணா. பல நூறு வார்த்தைகளால் சொல்ல முடியாத அவன் காதலை அது சொல்லிக்கொண்டிருந்தது.

அது ஒரு ஓவியம். அவளை அவன் அப்படியே வரைந்து வைத்த ஓவியம். அவளின் மறு பதிப்பாய் இருந்தது அந்த ஓவியம். 'என்னை அப்படியே மனதிற்குள் பதித்து வைத்திருக்கிறானா? இல்லையென்றால் இப்படி ரசித்து ரசித்து வரைந்திருக்க முடியுமா?

பேச வார்த்தைகள் கிடைக்காமல் நின்றிருந்தாள் அபர்ணா. என்ன உணர்வு இது? மனம் அப்படியே குளிர்ந்து, நிறைந்து, தளும்புவதை போல்...... அப்படியே காற்றில் மிதப்பதை போல்......உலகமே காலடியில் கிடப்பதைப்போல்...... காதலிக்க படுவது என்றால் இதுதானா?

அவன் காதல் அவள் மனமெங்கும் நிறைந்து விட்ட மகிழ்ச்சியில்,  தவிக்கும் கண்களுடன்  நிமிர்ந்தவளை புன்னகையுடன் சில நொடிகள் பார்த்துக்கொண்டே நின்றவன், எதுவுமே பேசாமல் அறையை விட்டு வெளியேறினான்.

'ராத்திரிலே அவள் தனியா போக வேண்டாம். நீ டிராப் பண்ணிடுடா. அவள் வண்டியை நாளைக்கு காலேஜிலே கொண்டு கொடுத்துக்கலாம்'. முடிவை தாத்தாவே எடுத்தார்.

ஏதோ மந்திரத்தில் கட்டுப்பட்டவள் போலே அவன் பின்னால் நடந்தாள் அபர்ணா.

கார் நகர்ந்து கொண்டிருந்தது. இருவருக்கும் இடையே அழகான மௌனம். எதுவுமே நடவாதது போல் அவள் பக்கம் திரும்பாமலே காரை செலுத்திக்கொண்டிருந்தான் பரத்.

அவள் மனதில் இருந்த தவிப்பு அவள் விரல்களில் தெரிந்தது. தனது விரல்களுடனே விளையாடிக்கொண்டிருந்தாள் அவள்.

அவள் பார்வை அவன் மீது உரசி உரசி விலகியது. இதழ்களில் ஓடிய மர்ம புன்னகையுடன் அவள் தவிப்பை உணர்ந்தவனாய் கார் ஓட்டிக்கொண்டிருந்தான் பரத்.

அன்று அவளை இறக்கி விட்ட அதே பேருந்து நிறுத்தத்தில் காரை நிறுத்தினான். மெல்ல திரும்பி அவனை பார்த்தாள் அபர்ணா. 'குட் நைட் அபர்ணா' அழகான புன்னகையுடன் வெகு இயல்பாய் சொன்னான் அவன்.

கண்களில் பரவிய சின்ன கோபத்துடன் அவனை முறைத்து விட்டு கீழே இறங்க போனவளுக்குள் ஏதோ தோன்ற, மெல்ல கீழே இறங்கியவள் கதவை சாத்திவிட்டு, சட்டென 'அ...ம்மா' என்று கையை உதறினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.