இதழ்களில் புன்னகை படர மெல்ல கீழே இறங்கிவந்தவன் அவள் அருகில் வந்து ''என்னாச்சுமா?' என்றான் சாதரணாமாய்.
'விரல் நசுங்கிடுச்சு'
'அய்யோ பாவமே. சரி விடு. கொஞ்ச நேரத்திலே சரியாயிடும்' என்றான் கைகளை கட்டிக்கொண்டு.
அவ்வளவுதானா... இறங்கிய குரலில் கேட்டாள்.
அவ்வளவுதான். போடி ராட்சஸி....
அப்போ கண்...ண....ம்மா கிடையாதா? கண்களை கொஞ்சம் சுருக்கி, கெஞ்சும் குரலில் அவள் கேட்க, அப்படியே மயங்கித்தான் போனான் பரத்.
தன்னை மறந்து அவள் கையை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டவன், அவள் முகத்தை கையில் ஏந்தி கண்களுக்குள் பார்த்து இதமான குரலில் மென்மையாக அழைத்தான் 'என் க...ண்ண...ம்...மா....'
அப்படியே உருகிப்போனவளாய் அவன் கண்களையே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தாள் அபர்ணா.
'வேண்டாம் கண்ணம்மா' என்றான் அவன் நிதானமான குரலில்.
'என்னது வேண்டாம்.'?
'இது ரோடுடா. கொஞ்சம் கொஞ்சமா என் கண்ட்ரோல நானே லூஸ் பண்ணிட்டு இருக்கேன். நீ இப்படியே பார்த்திட்டு இருந்தேனா என் கொள்கையெல்லாம் காத்துல போயிடும். ப்ளீஸ் டா'
சட்டென சிவந்து, சிரித்து விலகி நின்றாள் அபர்ணா.
மெல்ல சிரித்தவன் செல்லமாய் அவள் மூக்கை கிள்ளயபடியே கேட்டான் 'ஆமாம் எங்கே இருக்கு உங்க வீடு?.'
வீடா? நான் ஹாஸ்டல்லே இருக்கேன். இதோ இந்த ரோடு கடைசியிலே இருக்கு.
ஹாஸ்டலா? அங்கே எல்லாம் நீ இருக்க வேண்டாம். நம்ம வீட்டுக்கு கிளம்பு.
ஹை ! ஆசைதான் என்றாள் முதல்லே எங்க அப்பாவை வந்து பொண்ணு கேளுங்க
கேட்கறேன்டா. கண்டிப்பா கேட்கிறேன். கொஞ்சம் டைம் குடு அபர்ணா. எனக்கு ஒரு தங்கை இருக்கா. அவளுக்கும் ஒரு நல்ல வழி பார்த்திடறேன் சரியா?
ஓ! மாடியிலே தூங்கிட்டு இருந்தாங்களே அவங்களா? அவங்களை நான் பார்க்கவே இல்லையே.' என்றாள் அபர்ணா. அப்போது அத்தை சொன்ன இந்துவின் பெயர்கூட ஏனோ அபர்ணாவின் மனதில் பதியவில்லை.
பார்க்கலாம். ஒரு நாள் அறிமுக படுத்திவைக்கிறேன் சரியா.? என்றவன் நாளைக்கு வெள்ளிக்கிழமை நைட் நான் பெங்களூர் கிளம்பறேன்டா . ஐ.ஐ.சிலே செமினார். சண்டே நைட் வந்திடுவேன். ஓகே.
புன்னகையுடன் தலையசைத்து, கையசைத்துவிட்டு நகர்ந்தாள் அபர்ணா.
அவள் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டே இருந்தான் பரத். என் தங்கைக்கு ஒரு நல்ல வழி பார்த்திடறேன் டா. சொன்னான் அவளிடம். ஆனால் அவளிடம் சொல்லாத இன்னொரு விஷயமும் இருக்கிறதே. அதை எப்படி சந்தித்து சரி செய்யப்போகிறான் அவனுக்கே புரியவில்லை.
அவன் அத்தையின் மனம் உள்ளுக்குள் துவண்டு போயிருக்கும் என்று நன்றாய் தெரியும் அவனுக்கு. இதையெல்லாம் சொல்லி அபர்ணாவின் புன்னகையை அழிக்க விரும்பவில்லை அவன். 'தனக்குள்ளே உறுதியாய் சொல்லிகொண்டான் அவன். கவலைப்படாதே கண்ணம்மா உன்னை எப்பவும் அழ விடமாட்டேன்.'
மறுநாள் காலை அபர்ணாவின் ஸ்கூட்டியிலேயே இந்துவையும் ஏற்றிக்கொண்டு கிளம்பினான் பரத்.
இந்துவை அவளது அலுவலகத்தில் இறக்கி விட்டு, அவன் அங்கிருந்து நகர்ந்த சில நொடிகள் கழித்து அங்கே வந்து நின்றான் விஷ்வா.
இந்துவின் அலுவலகத்துக்குள் சென்று அவள் முன்னே அமர்ந்தான்.
சட்டென நிமிர்ந்தவள் மகிழ்ந்து போனாள் ' என்ன விஷ்வா திடீர்னு'?
சும்மாதான் உன்னை பார்க்கலாம்னு. உடம்பு எப்படிடா இருக்கு.?
நல்லா இருக்கேன் விஷ்வா.
அடுத்த கேள்வியாய் கேட்டான் ' என்ன சொல்றான் உங்க அண்ணன்?'
ஏன் விஷ்வா. ஒண்ணும் சொல்லலியே. இப்பதான் என்னை டிராப் பண்ணிட்டு போறார்?
டிராப் பண்ணிட்டு போறானா? நீ ஸ்கூட்டியிலே வரதில்லையா? இது எத்தனை நாளா?
ரெண்டு மூணு நாளா.
தனக்குள்ளே சிரித்துக்கொண்டான் விஷ்வா. இதனால் என்ன செய்து விட முடியுமாம் அவனால்? ஆனால் ஒரு அண்ணனாய் பரத்தின் எண்ணங்கள் சரிதானோ என்றுகூட ஒரு நொடி தோன்றத்தான் செய்தது அவனுக்கு.
சரி. வேற ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே?
இல்லையே. ஏன் விஷ்வா?
ஒண்ணுமில்லை. சும்மா கேட்டேன். நான் கிளம்பறேண்டா நிலாப்பொண்ணு. நகர்ந்தான் விஷ்வா.
ஹேய் விஷ்வா. என்ன நீயா வந்தே. உடனே கிளம்பறே? என்னாச்சு விஷ்வா?
'சும்மா. உனக்கு உடம்பு எப்படி இருக்குனு பார்த்திட்டு போலாம்னு வந்தேன். ஆபீசுக்கு டைம் டைம் ஆச்சு. வரேன்.' போய்விட்டிருந்தான்
அவன் எதற்கு வந்தான்? கடைசி வரை புரியவில்லை இந்துவுக்கு.
வெள்ளிக்கிழமை மாலை. சமையலறையில் தன் அத்தைக்கு உதவி செய்துக்கொண்டு இருந்தாள் ஜனனி.
இன்னைக்கு டின்னருக்கு தோசை பண்றியாமா? உள்ளே நுழைந்த சுதாகர் கேட்டான்.
பண்ணிட்டா போச்சு. இயல்பாய் சொன்னாள் ஜனனி.
அய்யோ! தோசையா? அவன் அம்மா அலறிய காரணம் புரியவேயில்லை ஜனனிக்கு.
ஏன்? அத்தை தோசைதானே. அதுக்கு போய்...
ஒரு நாள் அவனுக்கு நீ தோசை வார்த்துப்போடு அப்போ புரியும் உனக்கு. நானும் உங்க மாமாவும் ஹோட்டல் போறோம். சொன்னதோடு கிளம்பியும் விட்டிருந்தனர் இருவரும்.
அவள் தோசை கல்லை அடுப்பின் மீது வைத்ததும், தட்டுடன் மேடையின் மீது ஏறி அமர்ந்துக்கொண்டான் சுதாகரன்.
ஆவி பறக்க, ஒவ்வொரு தோசையாய் அவன் தட்டுக்கு வர வர உள்ளே போய்க்கொண்டே இருந்தது. எட்டு, ஒன்பது, பத்து...
அவன் அம்மா அலறிய காரணம் புரிந்தது ஜனனிக்கு.
பன்னிரெண்டு...... போதும் முடிச்சுக்கோங்களேன் கால் வலிக்குது. 'கெஞ்சியே விட்டாள் ஜனனி.
அய்யோ! என் ஜில்லுக்கு கால் வலிக்குதா? சரி முடிச்சுக்குவோம் விடு. என்று கை கழுவினான் சுதாகரன்.