சரி. இப்போ என் ஜில்லுவுக்கு நான் தோசை வார்த்துப்போடறேன். நீ உட்காரு.
இல்லை. அதெல்லாம் வேண்டாம்...
அட உட்காருடா என்று அவளை மேடை மீது அமர்த்தினான் சுதாகரன்.
முதல் தோசையை அவள் தட்டில் போட்டுவிட்டு நிமிர்ந்தான். அவள் முகத்தை பார்த்தவன், அவள் கன்னத்தின் மீது கொஞ்சமாய் படர்ந்திருந்த அவள் கூந்தலை கோதிவிட்டு கன்னத்தை வருடி அதில் இதழ் பதித்து விட்டு நகர்ந்தான்.
அடுத்த தோசையுடன் அவன் வந்த போது அவள் கன்னத்தில் மறுபடியும் படர்ந்திருந்தது அவள் கூந்தல்.
மறுபடியும் அதை கோதிவிட்டு அங்கே இதழ் பதித்தான் அவன். 'எத்தனை தோசை வேணும் என் ஜில்லுவுக்கு?
'இப்படி இருந்தா கண்டிப்பா ஒரு பத்தாவது சாப்பிடலாம்' என்றாள் அவள்.. மலர்ந்து சிரித்தபடியே அடுப்பின் அருகில் சென்றான் அவன்.
அடுத்த தோசையை போட்டுவிட்டு அவன் நிமிர்ந்த போது, மறுபடியும் அவள் கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டிருந்தது அவள் கூந்தல்.
ஏதோ புரிந்தது போலே இருக்க, சின்ன புன்னகையுடன் நகர்ந்து அடுப்பின் அருகில் சென்று விட்டிருந்தான் சுதாகரன்.
அடுத்த இரண்டு தோசைகளை மௌனமாய் சாப்பிட்டவள் 'போதும்' என்றாள்.
ஏன் ஜில்லு. பத்தாவது சாப்பிடுவேன்னு சொன்னே...
'இல்லை போதும். முதல் ரெண்டு தோசை மாதிரி இல்லை அடுத்ததெல்லாம்' சற்று தழைந்த குரலில் சொன்னாள் ஜனனி.
அப்படியா? முதல் தோசையை மறுபடியும் கொண்டு வந்திடுவோமா? .என்றபடியே அவள் கன்னத்தை வருடி இதழ் பதித்துவிட்டு கேட்டான் 'இப்போ சொல்லு இன்னும் எத்தனை தோசை வேணும்?'
'இன்னும் நாலாவது வேணும்'
மலர்ந்து சிரித்தவன் அவளை அள்ளி அப்படியே தன்னோடு சேர்த்துக்கொண்டான் சுதாகரன்.
பரத் பெங்களூர் கிளம்பிவிட்டிருந்தான். மாலையில் மெல்ல துவங்கிய அத்தையின் இருமல் மெல்ல மெல்ல அதிகரித்து, மூச்திணறலாகி விட்டிருந்தது.
'தாத்தா அத்தைக்கு ஆஸ்மா அட்டாக். டாக்டருக்கு போன் பண்ணுங்களேன்.' என்றாள் இந்து.
வழக்கமான டாக்டர் ஊரில் இல்லை. வழக்கமான மருந்துகளும், நெபிலைசேஷனும் வேலை செய்வதாக இல்லை.
நேரம் இரவு பத்து. சட்டென ஏதோ நினைவு வர கைப்பேசியை அழுத்தினாள் இந்து.
டாக்டர் சுதாகர் ஹியர் என்றது மறுமுனை....
டாக்டர் நான் இந்துஜா பேசறேன் என்னை ஞாபகம் இருக்கா?
சட்டென தெரிந்துக்கொண்டான் சுதாகர். 'சொல்லுங்க இந்துஜா...'
அவள் விவரத்தை சொல்ல, அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவமனையில் அத்தை அனுமதிக்க பட்டிருக்க அவர்கள் அருகில் நின்றிருந்தான் சுதாகரன். தாத்தாவும் அவர்களுடன் இருந்தார்.
மூச்சு திணறலையும் மீறி அத்தையின் உதடுகள் தொடர்ந்து உச்சரித்துக்கொண்டடேயிருந்த வார்த்தை 'க..ண்...ணா'
ஊசியை அத்தையின் கைக்குள் செலுத்திக்கொண்டே சொன்னான் சுதாகரன்...'நல்லா தூங்குவாங்க. தூங்கட்டும். ரெண்டு மணி நேரத்துக்கு ஒருதரம் நெபிலைசேஷன் குடுக்க சொல்லி இருக்கேன். ஷீ வில் பீ பெட்டர் பை மார்னிங். என்றவன் கேட்டான் ' கண்ணன் யாரு அவங்க பையனா?'
'இல்லை டாக்டர். கண்ணன் எங்க அண்ணன் இவங்க விஷ்வாவோட அம்மா.'
ஓ! ஒரு முறை சுதாகரனின் புருவங்கள் உயர்ந்து இறங்க, 'சரி நான் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து பார்க்கிறேன்.' அறையை விட்டு வெளியேறினான்.
'நான் கண்ணனுக்கு போன் பண்ணிடறேன் இந்து' என்று தாத்தா நகரப்போக, தடுத்தாள் இந்து. வேண்டாம் நாளைக்கு சொல்லிக்கலாம்.
'அப்புறம் ஏன் சொல்லலைன்னு கோபப்படுவான் இந்து'
'பட்டா படட்டும். நான் திட்டு வாங்கிக்கறேன்.'
இந்துவின் மனதில் என்னதான் இருக்கிறது என்று புரியாதவராய் தாத்தா பார்க்க, அவர் மனதை படித்தவாறே கேட்டாள் இந்து 'உங்களுக்கு எங்க அண்ணன் மட்டும் தான் பேரனா? மத்தவங்களையும் கொஞ்சம் நினைச்சு பாருங்க'
'விஷ்வாவா...? கொஞ்சம் அதிர்ச்சி கலந்த குரலில் கேட்டார் தாத்தா. அவன் இங்கே வரானா?.
ஆமாம் தாத்தா நான் அவனை இங்கே வரச்சொல்லி போன் பண்ணி இருக்கேன்.
தேவை இல்லாத பிரச்சனை எதுக்கு இந்து.?
'ஒரு பிரச்னையும் வராது தாத்தா. நான் பார்த்துக்கறேன். நீங்க வீட்டுக்கு போயிட்டு ரெஸ்ட் எடுத்திட்டு காலையிலே வாங்க.' கிளம்ப மறுத்தவரை வறுப்புறுத்தி அனுப்பி வைத்தாள் இந்து.
மருத்துவமனைக்குள் நுழைந்தான் விஷ்வா. அந்த நேரத்தில் அத்தை இருந்த அறைக்கு வெளியே நின்று இந்துவுடன் பேசிக்கொண்டிருந்தான் சுதாகரன்.
ஏன் இந்து? விஷ்வா உங்களோட இல்லையா? கேட்டான் சுதாகரன்.
'இல்லை டாக்டர். அவன் வீட்டை விட்டு போய் பல வருஷம் ஆச்சு. சின்ன வயசிலேர்ந்து யாரும் விஷ்வாவை புரிஞ்சிக்கலை டாக்டர். இந்த நிமிஷம் வரைக்கும் அதுதான் பிரச்சனை..' என்றாள் இந்து.
சரியாய் அந்த நேரத்தில் இந்துவின் பின்னால், கைக்கெட்டும் தூரத்தில் வந்து நின்றான் விஷ்வா. அவன் வந்ததை கவனிக்கவில்லை இந்து.
விஷ்வாவின் மீது சுதாகரனின் பார்வை பதிய, மனதிற்குள் ஏதோ தோன்ற இந்துவிடம் சட்டென கேட்டான் சுதாகரன்...
'உங்க பர்சனல் விஷயத்திலே நான் தலையிடறேன்னு நினைக்காதீங்க விஷ்வா இதுக்கு முன்னாடி வேறொரு பொண்ணை விரும்பியிருக்கார்ன்னு தெரிஞ்சும் நீங்க அவரை எப்படி விரும்பறீங்க.? உங்களாலே விஷ்வாவை சரியா புரிஞ்சிக்க முடியுமா?
'ஏன் முடியாது?' அடுத்த நொடி பறந்து வந்தது பதில் இந்துவிடமிருந்து. 'சொல்லபோனா என்னாலே மட்டும் தான் விஷ்வாவை சரியா புரிஞ்சுக்க முடியும் டாக்டர். எனக்கு கவிதை சொல்லி, க்ரீடிங் கார்டு கொடுத்து எல்லாம் லவ் பண்ண தெரியாது. ஆனா காதல்ன்னா என்னனு தெரியும். விஷ்வா சின்ன வயிசிலே இழந்த தாய் பாசத்திலே ஆரம்பிச்சு, அவன் இழந்தது எல்லாத்தையும் என்னாலே மட்டும் தான் தர முடியும் டாக்டர். நான் விஷ்வாவை என் உயிரா பார்த்துப்பேன் டாக்டர். பட பட வென தவிப்புடன் வெளிவந்தது குரல். அந்த தவிப்பே அவள் காதலின் ஆழத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது
சுதாகரனின் பார்வை விஷ்வாவின் மீதே இருந்தது.
'விஷ்வா சின்ன வயிசிலே இழந்த தாய் பாசத்திலே ஆரம்பிச்சு, அவன் இழந்தது எல்லாத்தையும் என்னாலே மட்டும் தான் தர முடியும் டாக்டர். நான் விஷ்வாவை என் உயிரா பார்த்துப்பேன் டாக்டர்' அந்த வார்த்தைகள் விஷ்வாவை சிலையாக்கி விட்டிருந்தன..
சுதாகரனை கவனித்த இந்துவின் பார்வை ,அவன் பார்வை சென்ற திசை நோக்கி திரும்ப, பார்வை விஷ்வாவின் மீது பதிய கொஞ்சம் திகைத்துத்தான் போனாள் இந்து. அவளும் அப்படியே நின்றுவிட, விஷ்வாவை நோக்கி நடந்தான் சுதாகரன்.
அவன் அருகில் சென்று அவன் கண்களை ஆழமாக ஊடுருவினான் சுதாகரன். சுதாகரனின் கண்களை நேராக சந்தித்தான் விஷ்வா.
தொடரும்...
{kunena_discuss:726}