அறிவுகெட்டவனே!!!! எங்கேடா போனே.....
சத்தியமாக எதுவுமே புரியவில்லை பரத்திற்கு 'என்னாச்சுடா? என்றான் அவன் நிதானமாக
உனக்கு ஆக்சிடெண்டுன்னு போன் வந்ததுடா. உனக்கு என்னமோ ஏதோன்னு நான் பைத்தியக்காரன் மாதிரி.... தெருத்தெருவா சுத்திட்டு வரேண்டா... எங்கேடா போனே??? உனக்கு ஒண்ணுமில்லையே... ரொம்ப பயந்துட்டேன்டா நான்... நீ.. நல்லா இருக்கே இல்லே... உனக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுடா.... நீ என் கண்ணன்டா..... அவனுக்குள்ளே இருந்த, தயக்கம், இறுக்கம், அழுத்தம் எல்லாம் உடைந்து கரைய தனது கண்களில் இருந்து வழியும் கண்ணீரை கூட உணராமல் பேசிக்கொண்டே போனான் விஷ்வா.
பரத்தின் கண்களிலும் நீரேற்றம். அதன் பிறகு விஷ்வா பேசியது எதுவுமே அவன் காதில் ஏறவில்லை. 'நீ என் கண்ணன்டா.....' அந்த வார்த்தைகளிலேயே சிக்கிக்கொண்டது உள்ளம்.
நீ என் கண்ணன்டா என்றான் மறுபடியும், நீ எனக்கு வேணும்டா...... என் கூடவே இருடா..... பழைய விஷ்வாவாக, கண்ணனின் சிறுவயது தோழனாக, சொன்னவனை இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டான் பரத்.
சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஸ்வாசிக்க கூட மறந்து இவர்கள் இருவரையுமே பார்த்தபடி நின்றனர்.
விஷ்வாவை பார்க்கும் போது அன்புக்கு ஏங்கும் சிறு குழந்தையை பார்ப்பது போலே தோன்றியது பரத்துக்கு. 'இத்தனை நாள் இதை புரிந்துக்கொள்ளாமல் போனேனே. அவன் மனம் வேதனைகளை சுமந்த போது, தோள் கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லையே எனக்கு.'
'இனிமே இருப்பேன்டா. உன் கூடவே எப்பவும் இருப்பேன்' என்றான் பரத் வாய்விட்டு.
சில நிமிடங்கள் கழித்து சுதாரித்து நிமிர்ந்தான் விஷ்வா. 'எங்கேதாண்டா போனே. உனக்கு ஆக்சிடென்ட் அப்படின்னு உன் போன்லேர்ந்து அப்பூ நம்பருக்கு போன் வந்ததுடா' என்றான் விஷ்வா.
'நான் எங்கேயும் போகலைடா. காலேஜ்லே கொஞ்சம் வேலை இருந்தது அதை முடிச்சிட்டு, ரெண்டு குரியர் அனுப்ப வேண்டி இருந்தது அனுப்பிட்டு நேரா இங்கே வரேன் . ஈவினிங் என் போன் தொலைஞ்சு போச்சுடா. அதை எடுத்தவனுக்கு ஆக்சிடென்ட் ஆகியிருக்கனும்னு நினைக்கிறேன். என் போன்லே அபர்ணா நம்பரை பார்த்திட்டு அவளுக்கு கால் பண்ணி இருப்பாங்க' என்றான் நிதானமாக.
'போடா டேய்..... என்றபடி சோபாவில் போய் அமர்ந்தான் விஷ்வா. 'கொஞ்ச நேரத்திலே சாவடிசிட்டே என்னை நீ....'
கூல் பர்த்டே பேபி என்றபடி அவன் அருகில் சென்று அமர்ந்தான் பரத். 'வா வந்து கேக் வெட்டு வா....'
சுற்றி இருந்தவர்கள் யாரும் பேசவே இல்லை. அவர்கள் இருவருக்கும் இடையில் நுழைய யாருமே விரும்பவில்லை. அவர்களை பார்த்து ரசித்தபடியே நின்றிருந்தனர் அனைவரும்.
பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்து, சாப்பிட அமர்ந்தனர். இப்போது பரத்தின் தட்டில் இனிப்பு பரிமாறப்பட அதை சட்டென எடுத்துக்கொண்டான் விஷ்வா.
மகிழ்ந்து போனான் பரத். 'எடுடா மாப்பிள்ளை .அப்படி எடுடா.....' என்றான் அவன். இப்போ சொல்லு, எப்போ வெச்சுக்கலாம் உனக்கும் இந்துக்கும் கல்யாணத்தை....
அண்ணன் இப்படி சட்டென சொல்வான் என்று இந்து எதிர்ப்பார்க்கவே இல்லை. கொஞ்சம் திக்குமுக்காடி போனாள் இந்து. யாரும் கவனிக்காத நேரத்தில் அவளைப்பார்த்து கண்சிமிட்டி சிரித்தான் விஷ்வா.
அடுத்த மாதத்தில் அவர்கள் திருமணத்தை நடத்தி விடுவது என்று எல்லாரும் சேர்ந்து முடிவெடுத்தனர்.
அந்த வீடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பரவி எல்லாரையும் மூழ்கடித்துக்கொண்டிருந்தது.
'ரொம்ப சந்தோஷமா இருக்குடா'. என்றார் தாத்தா. அந்த போன் வந்தது கூட நல்லதுதான் டா. விஷ்வா மனசு திறந்து பேசிட்டான் பார்த்தியா.... 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.....'
'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது....' அந்த வார்த்தைகள் விஷ்வாவின் எண்ண அலைகளை சுதாகரனை நோக்கி திருப்பிவிட்டிருந்தது.
இந்து- விஷ்வா திருமணத்துடனே அஸ்வினியின் திருமணத்தையும் நடத்திவிட ஏற்பாடுகள் நடைபெற்றன
அடுத்த பதினைந்து நாட்களில் பத்திரிக்கை தயாராகி இருந்தது. அதை எடுத்து சென்று சுதாகரனை திருமணதிற்கு அழைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தான் விஷ்வா.
அன்று காலையில் சுதாகரன் வீட்டிலும் அழகான சந்தோஷ ஊற்றுக்கள் தோன்ற துவங்கி இருந்தது.
அவன் உறங்கி எழுந்த போது, குளித்துவிட்டு பளீர் சிரிப்புடன் அவன் முன்னால் நின்றிருந்தாள் ஜனனி.
'என்கிட்டே ஏதாவது மாற்றம் தெரியுதா சொல்லுங்க' என்றாள் அவள்.
'ஷாம்பூ போட்டு குளிச்சிருக்க' கரெக்டா...
அது பெரிய மாற்றமா?
காதுலே புதுசா தோடு மாத்தியிருக்கே....
அது இல்லை வேறே.....
வேறே???? உன் தலையிலேர்ந்து எக்ஸ்ட்ரா ரெண்டு மூணு முடி கொட்டியிருக்கு
யோவ்... போயா... என்றபடி அவள் திரும்பி நடக்க சட்டென கட்டிலிலிருந்து எழுந்து அவளை பின்னாலிருந்து அணைத்துகொண்டான் சுதாகரன்.
'ஜில்லு.... ஜில்லு... இப்போ என்னடி மாற்றம் தெரியும்.? இன்னும் ரெண்டு மூணு மாசமாவது ஆக வேண்டாமா....?
விழிகள் விரிய சட்டென திரும்பினாள் அவள் 'தெரியுமா உங்களுக்கு? எப்படி தெரியும்.
'அடியேய்... உன் இதயம் ஒரு நாளைக்கு எத்தனை தடவை துடிக்குதுன்னு கூட கணக்கு தெரியும் எனக்கு. இது தெரியாம இருக்குமா? கண் சிமிட்டி சிரித்தான் அவன்.
போடா... வெட்க சிரிப்புடன் அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள் அவள்.
அவள் முகத்தை கையில் ஏந்திக்கொண்டான் சுதாகரன். அவள் கண்களுக்குள் பார்த்தவன் அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
'ரொம்ப சந்தோஷமா இருக்குடா' என்றான் அவன். உனக்கு என்ன வேணும் சொல்லு வாங்கிடுவோம்.
'வாங்குறதெல்லாம் அப்புறம். முதலிலே ஒரு நல்ல டாக்டர்கிட்டே போகணும்' என்றாள் அவள் குறும்பு பார்வையுடன்.
'ஹேய்.... நானும் டாக்டர் தாண்டி...'
'ம்ஹூம்...எனக்கு நல்ல டாக்டர் வேணும்.... நீங்க எல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க' என்றாள் சிரித்தபடி.
அவள் சிரிப்பில் மயங்கித்தான் போனான் சுதாகரன் 'சரிப்பட்டு வரமாட்டேனா.. பார்க்கலாமா என்று அவன் முகம் அவள் அருகில் வர 'அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் அவனை தள்ளிவிட்டு ஓடி விட்டிருந்தாள் ஜனனி.
அன்று மதியம் சுதாகரனை பார்க்க அவனது மருத்துவமனைக்கு வந்திருந்தான் விஷ்வா. சுதாகரனின் எதிரில் சென்று அமர்ந்தான் அவன்.
தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி விஷ்வாவையே பார்த்திருந்தான் சுதாகரன். விஷ்வாவின் கையில் பத்திரிக்கைகள். விஷயத்தை புரிந்துக்கொண்டு விட்டிருந்தான் அவன்.
'சொல்லுங்க மிஸ்டர் விஷ்வா' என்றான் அழகான புன்னகையுடன்.
அவன் புன்னகையே விஷ்வாவை ஆச்சர்யத்தில் ஆழத்தியது. 'எப்படிதான் அவனால் என்னை பார்த்து இப்படி புன்னகைக்க முடிகிறதோ?'
பத்திரிக்கையை எடுத்து எழுந்து நின்று அவனிடம் நீட்டினான் விஷ்வா. இருக்கையில் இருந்து எழுந்து அதை வாங்கிக்கொண்டு அமர்ந்தான் சுதாகரன்.